Friday, March 30, 2018

மெளனத்துயர்


விதியின் கைகளில் மனிதன் ஒரு விளையாட்டுப் பொம்மை. தனது துயரத்துக்கு இந்த நாளிலாவது விடுதலை கிடைக்கட்டும் என்று எண்ணித்தான் படுக்கையிலிருந்து எழுகிறான். எத்தனையோ தெய்வங்கள் இருந்தும் எந்தக் கடவுளும் அவனுடைய சுமையைத் தாங்கிக் கொள்ள முன்வரவில்லை. வாழ்க்கையில் வசந்தம் மட்டுமே வீசிக்கொண்டிருக்காது என்று அவன் அறிவதில்லை. கடலில் கால்நனைக்க அலைகள் ஓயும் வரை காத்திருப்பது அறிவுடைமையாகுமா. எவ்வளவு காலத்திற்கு மேகங்களால் சூரியனை மறைத்துக் கொண்டிருக்க முடியும் அதன் கிரணங்கள் பூமியை வந்தடைந்தே தீரும் இல்லையா?

கையேந்தும் இடத்திற்குக் கீழே புதையலிருப்பதை பிச்சைக்காரன் அறிவதில்லை. வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுமென்று ஒவ்வொரு மனிதனும் கனவு காண்கிறான். தற்போதைய நிலையில் இருள் சூழ்ந்திருந்தாலும் எதிர்காலத்தில் வெளிச்சம் வரும் என்று தான் மனிதன் தவங்கிடக்கிறான். ஏதாவதொரு நம்பிக்கை வேண்டியதாய் இருக்கிறது மனிதனுக்கு வாழ்க்கையில் நடைபோடுவதற்கு. வெட்டியான் செத்த பிணத்திலிருந்து கோணித்துணியை உருவிக் கொள்வதைப் போல வாழ்க்கை மனிதனிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு தான் விடுகிறது.

மனிதர்கள் பிறக்கும் போது கடவுளாய் இருக்கிறார்கள், வளர்ந்ததும் சாத்தான் ஆகிவிடுகிறார்கள். தான் நினைத்த ஒன்றை அடைவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிகிறார்கள். பகலில் பொருட்களைக் காண விளக்கு ஏந்திச் செல்பவன் முட்டாள் அல்லவா. தெய்வத்திடம் செல்வத்தைத் தவிர வேறென்ன கேட்கிறோம். கப்பித்தானிடம் நம்பிக்கை இல்லையென்றால் கப்பலில் பயணம் செய்ய முடியுமா. ஆட்டுமந்தையைப் போல் அவர் பின்னால் அணிவகுக்கின்றீர்களே நீங்கள் பின்பற்றிச் செல்பவர் உத்தமரா என்று உங்களுக்குத் தெரியுமா. பொறுமையாக நீங்கள் தட்டினால் திறக்காத கதவுகள் உண்டா. நிச்சயமாக சாவோம் என்று தெரிந்திருந்தும் சத்தியத்தின் பக்கம் நிற்க உங்களால் முடியுமா?

மாயா ஜாலம் காட்டும் செப்படுவித்தைக்காரன் கடவுளுக்கு நிகரானவனாக முடியுமா. மாகடலை பார்க்கும் போதெல்லாம் மனிதன் சிறு தூசு என்று உணரமுடிகிறதா. வாழ்வில் சூழ்ந்துள்ள மூடுபனி விலக மனதில் ஞானச்சூரியன் உதிக்க வேண்டும். எந்த மொழியில் பிரார்த்தனையை ஏறெடுத்தாலும் கடவுள் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். மேய்ப்பன் பிரசங்கம் செய்வதற்கு ஏன் கல்வாரிமலையை தேர்ந்தெடுத்தார். வேதனைப்படுபவர்களுக்கு காலம் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த உலகில் கடவுளால் கூட ஏகாந்தமாய் இருக்க முடிவதில்லை. கோயிலில் வீற்றிருக்கும் தெய்வத்திடம் வேண்டுதல்களை ஒப்பித்த பின் மனம் வாயிலில் கழற்றிப் போட்ட செருப்பைத் தேடி ஓடுகிறது. பணத்தை பூட்டி வைக்காமல் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் நாளையே மரணம் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டலாம். இரை தேடத்தான் பறவைகளுக்கு சிறகுகளை கொடுத்திருக்கிறான் இறைவன். மரண வெள்ளத்தில் மூழ்கப் போகும் உலகைப் பற்றி வருணிக்க என்ன இருக்கிறது. இரகசியங்களை நெருங்க நெருங்க  தீப்பற்றிக் கொள்கிறது எனது உடல். இறைத் தூதர்களுக்கு சொந்த மண்ணில் கனம் இருக்காது. புவிச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தான் நாமனைவரும்.

பூமியில் நடைபெறும் காரியங்களைப் பார்த்தால் கடவுளுக்கு கருணையில்லை என்பதையே காட்டுகிறது. இருண்ட வாழ்வில் வெளிச்சம் கொடுக்கும் ஒரே ஒரு விளக்கையும் கடவுள் அணைத்துவிடுகிறார். மனிதனின் இறுதி நாளில் கசப்பான நினைவுகளே மனதில் வந்து அலைமோதும். சாத்தான், கடவுள் என்ற இருசக்திகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு மனிதன் பைத்தியமாகிறான். இரவின் நிழலை கடைசி வரை சூரியனால் காண முடியவில்லை. தோலால் மூடப்பட்ட வெறும் கூடுதான் மனிதன். மனித வாழ்க்கையில் உண்மைக்கும், பொய்க்கும்  இடையே தராசுத் தட்டு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

பலவீனமான மனிதனின் மனதை கெட்ட ஆத்மாக்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அப்பாவிகளை சித்ரவதை செய்வது கடவுளுக்கு உவப்பாக இருக்கிறது. மனிதனின் முயற்சிகளையெல்லாம் இயற்கை தோற்கடித்து விடுகிறது. ஆணவத்தால் ஆடுபவர்களையெல்லாம் கடவுள் கண்டுகொள்ளாவிட்டாலும் இயற்கை காவு வாங்கியேத் தீருகிறது. ஏமாளிகளை கைப்பாவையாக்கி காரியத்தை சாதித்துக் கொள்ளும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கடவுள் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை காட்டலாம். ஆனால் விதி வெகுநியானமானது. மனிதர்களை அது பேதம் பிரிக்காது. அரசனுக்கு என்ன நேர்கிறதோ அதுவே ஆண்டிக்கும் நேர்கிறது. சத்தியத்தைக் காப்பாற்ற துணிபவர்கள் எல்லாருமே அவதாரங்கள் தான்.

No comments:

Post a Comment