Thursday, September 19, 2019

படுகளம்


காமம் கடக்க முடியாத ஒன்றாய் இருக்கிறது. பெண்ணாசை தான் மனிதனை தவறு செய்யத் தூண்டுகிறது. மோகித்தவளை எப்படி மஞ்சத்துக்கு அழைக்கலாம் என மனம் கணக்கு போடுகிறது. அவளைப் பற்றிய நினைவுகளே அலையலையாகப் பெருக மனம் பித்தாகிறது. ஒருவனுக்கு அரூபியாகத் தெரிபவள், இவனுக்கு பேரழகியாகத் தெரிகிறாள். உள்ளுக்குள் காமம் காடாக வளர்ந்து நிற்கிறது. இவன் விதி புத்தியை வென்றுவிடுகிறது. அவளுடைய காலடியில் ராஜ்யத்தை ஒப்படைக்க இவன் தயாராகவே இருக்கிறான். மோகம் ஒரு தீ பற்றிக்கொண்டால் எதனாலும் அதை அணைக்க இயலாது.

முதலில் அவள் தன்னை ஏறெடுத்துப் பார்த்தாலே போதும் என்றிருக்கும். பிறகு ஒரு வார்த்தை பேச மாட்டாளா என ஏக்கமாய் இருக்கும். பால்வதனத்தை விரல் நகங்களால் தீண்டிப் பார்க்க ஆசையாய் இருக்கும். முத்தம் கன்னத்தில் ஆரம்பித்து இதழ்களில் வந்து நிற்கும். இது என் வீடு என் பெயரில் இருக்கிறது. இது என் வாகனம் ஆர்.சி புக் எனது பெயரில் இருக்கிறது என்பது மாதிரி மனம் அந்த யுவதியை தன் உடைமையாக்கிக் கொள்ள தனது காமவடிகாலுக்கு அவளை ஒரு போகப் பொருளாக உபயோகித்துக் கொள்ள திட்டமிடுகிறது. அடைந்தவுடன் அலட்சியமாய் தூக்கிப் போட்டு விடுகிறது. என்ன பெரிய பம்மாத்து. கையை மூடியே வச்சிருந்த ஏதோ தங்கக் காசு வைச்சிருக்கியோன்னு நினைச்சேன். கையை விரிச்சதுக்கப்புறம் தானே தெரிகிறது வெறும் பத்துக் காசுன்னு. மாம்பழம் ருசியாக இருந்தது. கொட்டை முளைக்குமா முளைக்காதா என்று ஏன் கவலைப்படுவானேன்.

வாழ்க்கையில் ஒருதரம் தான் மாம்பழம் சாப்பிடுறோமோ என்ன. வகையா வகையா சாப்பிடறோம். வாங்கி வாங்கி சாப்புடறோம். அதுலயே நிபுணன் ஆயிடுறோம். பழத்தை பார்த்த மாத்திரத்துல அதோட ஜாதகத்தையே சொல்லிடறோம். மாம்பழத்தை ருசிக்க மரத்துல கல்லெறியனும்னு அவசியமில்லை கையில காசிருந்தா போதும். தசரதனுக்கு அந்தப்புரத்தில் பத்தாயிரம் மனைவிகளா என்று வாயைப் பிளக்கிறோம். கண்ணகியாக இருப்பதை விட மன்னனுக்கு ஆசை நாயகியாக இருப்பது அவளது பாதுகாப்பு உணர்வை திருப்திப்படுத்தும். பெண்கள் நிரந்தரத்தை தேடுகிறார்கள் நிரந்தர வருமானம், நிரந்தர வேலை, பதவி, அந்தஸ்து, சொந்த வாகனம். தனது அழகு அங்கு முன்னிருத்தப்படுவதை எந்தப் பெண்தான் விரும்ப மாட்டாள். பட்டத்து ராணிக்கு அடுத்த இடம் என்றால் கசக்குமா?

தனக்கு பதினாயிரம் மனைவிகள் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். தேவலோக ரம்பை, ஊர்வசியை விட ஒயிலானவர்கள். காமத்திலிருந்து விடுபட்டவனே ராஜ்யபரிபாலனத்தை நியாயமாக நடத்த முடியும். அந்தக் காமத்தைக் கடக்கவே பதினாயிரம் மனைவிகள் அவனுக்கு. காமத்தை அடக்குவதென்பது வேறு, காமத்தை கடப்பதென்பது வேறு. சோறு தண்ணியில்லாமல் சிங்கத்தை கூண்டில் அடைத்து வைத்துப் பாருங்கள் பார்ப்பவை எல்லாம் அதற்கு இரையாகத்தான் தெரியும். அடக்குபவன் வெளியில் ஸ்ரீராமனாக வேஷம் போடுலாம். மகாத்மாவாக நடிக்கலாம். உள்ளுக்குள் காமப்புலையனாகத்தான் இருப்பான். பிரசாதத்தை விடுத்து மலத்தை நாடி ஓடும் நாயைப் போல.

ஆசையோடு சங்கமிப்பவர்கள் இச்சை தீர்ந்தவுடன் உறவு முடிந்துவிட்டதாக நினைக்கலாம். ஆனால் அப்படியல்ல. எச்சமிடும் காக்கைகள் தன்னால் விருட்சமான மரத்தில் வந்து அமர்ந்து இளைப்பாறுவதில்லையா. அந்த நிலைதான் அர்ஜூனனுக்கு அவனுக்கும் உலுப்பிக்கும் இடையே நிகழ்ந்த உறவால் பிறந்த அரவானைத்தான் பாரதப் போருக்கு களப்பலியாக கொடுக்க தீர்மானித்துள்ளார்கள். சகாதேவன் தனது பண்டித ஞானத்துடன் நாள்குறித்தது மட்டுமில்லாமல் சாமுத்திரிகா லட்சணம் உடைய ஆண்மகனை களப்பலியாக கொடுத்தால் கெளரவர்களை வீழ்த்திவிடலாம் என்ற உக்தியையும் கண்ணனிடம் கூறிவிடுகிறான். இதுநாள் வரை சகாதேவனின் கணக்கு தவறியதே இல்லை.

அப்படிப்பட்டவர்கள் யார் யார். கண்ணனை தருமன் இழக்கமாட்டான். அர்ஜூனனை கண்ணன் இழக்க முன்வரமாட்டான் ஏனெனில் தனது தங்கையைத்தான் அவனுக்கு தாரை வார்த்திருக்கிறான். அரவானை காளிக்கு களப்பலி கொடுக்கலாம்  என்று கண்ணன் தான் முதலில் தீர்மானித்தான். தனது பிறப்புக்கு காரணமானவன் தன்னிடம் வந்து உதவி கேட்கும் போது அரவானால் தட்ட முடியவில்லை. மகன் தந்தைக்காற்றும் உதவி என்று மறுக்காமல் தான் பலியாக ஒத்துக் கொள்கிறான். ஆனால் கண்ணன் தனக்கு இரு வரங்களைத் தரவேண்டும் என்று கேட்கிறான். அதனை வரமாகக் கருத வேண்டியதில்லை. அரவான் தனது கடைசி ஆசை இன்னதென கண்ணனிடம் தெரியப்படுத்துவதாக கொள்ளலாம். மரணத்தை முத்தமிடுபவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவது வழக்கம் தானே. பிரம்மச்சாரியான எனக்கு பெண் சுகம் என்றால் என்னவென்று தெரியாது எனவே இன்று மாலையே தனக்கு கல்யாணம் நடந்து இந்த இரவு தனக்கு முதலிரவாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறான் அரவான்.

ஓரிரவு மட்டுமே வாழ்ந்து பூவும் பொட்டும் இழந்து கைம்பெண்ணாக யார் முன்வருவார்கள். எந்த யுவதியும் சம்மதிப்பதாகத் தெரியவில்லை. அவகாசம் குறைவு தான் மாலைவேளை வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாளை சூர்யோதயத்தில் போர் தொடங்கிவிடும். கண்ணன் ஒரு முடிவு செய்தான். அவதாரம் தனக்கான காரியத்தை சாதித்துக் கொள்ள தன்னையே கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறது. தர்மத்தை நிலைநாட்டுவதற்கு நீதிநெறியை கண்ணன் மீறவே செய்தான். பெண் தன்மை மிகுந்தவர்கள் கடவுட் தன்மைக்கு மிக அருகாமையில் இருப்பார்கள். அதனால் தான் கண்ணனை கோபிகைகள் தங்கள் கூட்டத்தில் அவனும் ஒருவனாக விளையாட அனுமதித்தனர். ஆண் பெண் சேர்க்கையால் பிறந்த நாமனைவரும் சரிபாதி ஆண்தன்மையும் சரிபாதி பெண் தன்மையும் உள்ளவர்கள். இந்தப் பூமி பெண்தன்மை கொண்டிருப்பதால் தான் படைப்பு சாத்திமாயிற்று. இரக்கம், கருணை, தயை என்பதெல்லாம் பெண் தன்மையோடு சம்மந்தப்பட்டது. கண்ணனுடைய பெண் தன்மை மோகினியாக வடிவெடுத்துச் சென்று அரவானை திருமணம் புரிந்து கொள்கிறது. அவனுடைய காம இச்சையை தீர்த்து வைக்கிறது.

காமம் கடவுள் நிலைக்கு நம்மை இட்டுச் செல்லுமாயின் நல்லது தான். தன்னுடைய மரண நேரத்தை அறிந்தவனுக்கு அதனை மறக்க அவனுக்கு பெண் போதை தேவையாய் இருக்கிறது. பெண் நாட்டமே மனிதன் கடவுளைக் காண்பதற்கு தடைக்கல்லாக உள்ளது. தாய்ச்சியைத் தொடும் ஆட்டத்தில் தான் சுவாரஸ்சியமே அடங்கியுள்ளது. போரை ஆரம்பித்து வைத்த கிருஷ்ணனே அதற்கு பிராயச்சித்தம் செய்ய விரும்பினான். தேரை இழுத்து தெருவில் விட்டாயிற்று அதை நிலைக்கு கொண்டுவந்துதானே ஆகவேண்டும். பூமிக்கு அப்பாற்பட்ட காரியங்களைப் பற்றி கண்ணனால் யோசிக்க முடிந்தது. கிரு
ஷ்ணனுக்கு பதினாயிரம் மனைவிகள். அவன் ஒரு ஸ்திரிலோகன் தான். அவன், தான் ஆத்மா என்றும் தான் மனதாலும், உடலாலும் செய்த காரியங்களால் ஆத்மா பாதிக்கப்படாது என்றும் ஆத்மாவை தண்ணீர் நனைக்காது, நெருப்பு எரிக்காது, வாள் வெட்டாது என்றும் எதனாலும் அதன் தெய்விகத் தன்மை குறைந்துவிடாது என அறிந்திருந்தான்.

அரவானை களப்பலி கொடுத்தாயிற்று. கடவுளின் திட்டம் என்ன வென்று மனிதனால் யூகிக்கக் கூட முடியாது. எது ஆரம்பம் எது முடிவென்று அவனுக்குத்தான் தெரியும். தனது மாயாஜால வித்தையையும், சாதுர்யத்தையும் கெளரவர்களை வீழ்த்த உபயோகப்படுத்திக் கொண்டான் கண்ணன்.

கெளரவர்களை வீழ்த்த குறுக்கு வழியைப் பின்பற்றினான் கிருஷ்ணன். பல போர்விதிகளை மீறினான். அவன் அவதாரம் என்பதால் கிருஷ்ணன் செயல்களுக்கெல்லாம் நாம் நியாயம் கற்பிக்கின்றோம். துரியோதனன், பீஷ்மர், துரோணரின் பலகீனங்கள் என்ன என்பதை கண்ணன் முன்கூட்டியே அறிந்திருந்தான். நடுநிலை தவறி பாண்டவர்களின் மூளையாக செயல்பட்டவன் தான் கண்ணன். அனுமக் கொடி பறக்கும் அர்ஜூனனின் தேரை செலுத்தியபடி தன் திட்டப்படி அனைத்தும் ஒழுங்காக நிகழ்கிறதா என கவனித்துக் கொண்டிருந்தான். யாகங்களும், ஹோமங்களும், நியதியும், சடங்குகளும் இன்றும் பரத மண்ணில் வேர்ப்பிடித்திருக்க வியாசரும் ஒரு காரணம். கடைசியில் தான் பெற்ற சாபத்தால் வேடனடிக்க வீழ்ந்தான் கண்ணன். உடலெடுத்தால் விதி பொம்மையாகத்தான் நம்மை ஆட்டுவிக்கும் என்பதற்கு கிருஷ்ணன் நல்ல உதாரணம். இன்றும் குருட்சேத்திர மண்ணில் அரவானின் ரத்தத் துளிகள் படிந்திருப்பதை நீங்கள் காணலாம்.

Tuesday, September 3, 2019

பரசு



ஐந்து அவதாரங்கள் வந்து சென்றுவிட்ட நிலையில் பூமிக்கு பரிபூரணம் தேவைப்பட்டது. பிரம்ம ஞானத்தைக் காப்பாற்ற சத்ரிய தைரியம் தேவையாய் இருந்தது. ஜமத்க்னிக்கும் ரேணுகாதேவிக்கும் ஐந்தாவதாக பிறந்த குழந்தை சத்ரிய வம்சத்தையே வேரறுக்கும் என யாரும் அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. பிராமணவம்ச பரசுராமருக்கு சிறுவயது முதல் ஆயுதங்களின் மீது தீராத மோகம்.

வர்ணாசிரம தர்மத்தை மீறியதால் பல விதங்களில் புறக்கணிக்கப்பட்டவர் பரசுராமர். ரத்தத்தைப் பார்த்து மயங்கிவிழும் சராசரி பிராமணரல்ல அவர். அன்று ரிஷி வம்சத்தவர்கள் தங்கள் மனைவிமார்கள் மனதளவில் கூட கற்புநிலை தவறக்கூடாது என நினைப்பார்கள். வாழ்க்கைக்கு அப்பால் எதையோ தேடும் வைராக்கியவாதிகள் தங்கள் மனைவிமார்களை ஒரு பொம்மையாகத்தான் கருதினார்கள். எதிரெதிர் துருவங்கள் தங்களை ஈர்த்துக் கொள்வது இயல்புதான் என்பதை உணரதாவர்கள்.

காலவெள்ளம் தறிகெட்டு ஓடிக்கொண்டுள்ளது. எதைத்தான் கடைசியில் நிலைநிறுத்தப் போகிறது என்பதை யாராலும் அறிய முடியவில்லை. ஏற்கனவே விதிக்கப்பட்டதுதான் நடந்து கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. எந்த சக்தி மனிதர்களை பொம்மையாக ஆட்டுவிக்கிறது என்று தெரியவில்லை.

எந்த நம்பிக்கையில் மனிதஇனம் விடியும் பொழுதுகளை எதிர்கொள்கிறது. வாழ்க்கை ஒருவருக்கு வரமாகவும் ஒருவருக்கு சாபமாகவும் அமைந்துவிடுவது ஏன்? மனித மனம் இரும்பாக இருப்பதினால் தான் கோயிலிலுள்ள தெய்வங்கள் எல்லாம் கற்சிலையாகத்தான் காட்சியளிக்கின்றன.

இயற்கை மனிதனைப் படைத்து அவன் வழியே இந்த உலகை என்ன செய்கிறது என்று தெரியவில்லை. மனித இனம் தோன்ற வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றும் புரியவில்லை. வேதங்கள் ஆன்மாவைப் பற்றி பேசினாலும் மற்ற மதங்களின் வேதங்கள் இந்த உலகினை ஒரு சிறைச்சாலை என்றும், தண்டனை நிறைவேற்றப்படும் இடம் என்றும் நிரூபிக்கின்றன. புத்தர், இயேசு போன்றவர்கள் தப்பிக்கும் வழியைத் தேடியவர்கள் தான். அப்போதைய சமூகம் அவர்களை பைத்தியம் என முத்திரைக் குத்தியது.

சாதாரணமாக நம்மிடையே வாழ்ந்து போனவர்கள் எப்படி தெய்வமானார்கள். மதங்களின் முதுகெலும்பாக அதிசயிக்கத்தக்க மனிதரின் அற்புதங்கள் தான் திகழ்கின்றன. ஞானமடைதல் என்பது நாம் செல்ல வேண்டிய பாதையை தெரிந்து கொள்ளும் ஒரு நிகழ்வா? ஞானமடைந்தவர்களுக்கும் முக்தியின் மேல் நாட்டம் இருக்குமா? ஆமாம் ஜமதக்னி ஞானம் பெற்றார் முக்தியின் மேல் இருக்கும் நாட்டமே அவரது வாழ்க்கையின் நோக்கமாக இருந்தது.

ஜெபம், தியானம், பூஜை மூலம் முக்தியை அடைந்துவிட முடியுமா? உடலை படகாகக் கொண்டு வாழ்க்கைக் கடலை கடந்துவிட முடியுமா? ஞானத்தை கூர் தீட்டுவதன் மூலம் கடவுளுக்கும் நமக்குமான திரைச்சீலையை கிழித்துவிட முடியுமா? மனிதனாகப் பிறந்து தெய்வமாகலாம் என்று பரத கண்டத்தில் நிறைய பேர் நிரூபித்துச் சென்றிருக்கிறார்கள் இல்லையா? கைவிடப்பட்ட மனிதன் இறுதியாக கடவுளின் அறைக் கதவைத் தானே தட்டிப் பார்ப்பான். கர்மவினைகள் மீண்டும் பிறக்க வைக்கும் என்பதால் தான் முனிவர்கள் காட்டின் நடுவே குடில்களை அமைத்துக் கொண்டு கடவுள் காரியங்களில் ஈடுபடுகிறார்களா? மீண்டும் பிறக்க எந்த மனிதனும் விரும்புவதில்லையே எதனால்?

ஞான அக்னியின் மூலம் கடவுள் இருக்கும் பாதையை அறியத்தானா தவம் இருப்பது. ராமனாக இருக்கும் ஒருவன் தனது மனைவி சீதையாக இருக்க வேண்டும் என்ற விரும்புவது நியாயந்தானே! இதோ காலம் தாயத்தை உருட்டுகிறது, விழுகிறது என்ன என்பதை கடவுள் மட்டுமே அறிவார். தவம் செய்பவர்கள் அனைவருக்கும் சிவனைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்துவிடுமா என்ன? காட்சி தந்த சிவன் பரசு என்ற அஸ்திரத்தை தந்தபடியால் தான் பெயருக்கு முன்பாக பரசு என்று ஒட்டிக் கொண்டது.

கற்புக்கரசி கோபத்துடன் பார்த்தால் பச்சை மரம்கூட பற்றி எரியுமாம். ரேணுகாதேவியின் பதிவிரதைத்தன்மை அப்படிப்பட்டது. சுடப்படாத களிமண் பானையில் நீரெடுத்து வருவதே அவளது பதிவிரதைத் தன்மைக்கு அடையாளம். மனதால் கூட அந்நிய ஆடவனைத் தீண்டாததால் அவளால் இந்த அதிசயத்தை நடத்திக் காட்ட முடிந்தது. இது ஆண்களுடைய உலகமாக இருக்கலாம், சகல காரியத்திற்கும் காரணமாக இருப்பவர்கள் ஏனோ பெண்கள் தான். சக்தி சிவம் காலத்திலிருந்து இதுதான் கதை. சக்கரவர்த்திகள் பலரும் பெண்கள் விஷயத்தில் பலவீனமாகத்தான் இருந்தார்கள். பெண்களை தங்களின் உடைமையாக்கிக் கொள்ள நினைத்தவர்களின் துரோகத்தின் வரலாறு இன்னும் நீண்டு கொண்டே உள்ளது. அதற்கு கடவுளின் அகதரிசனத்தின் நிழல் பெண்கள் மூலம் கிடைத்தது ஒரு காரணமாய் இருக்கலாம். ஆனால் பெண்கள் கடவுளைக் காட்ட வல்லவர்கள் அல்ல. இயற்கை ஆண்களுக்கு பெண்களின் மீது கவர்ச்சியை உண்டாக்கி அவனால் கடைசிவரை கடவுளை கண்டடைய முடியாமல் செய்துவிடுகிறது. இயற்கை பெண்களைப் பொத்திப் பாதுகாக்கிறது. ஆண்களை உன் வல்லமையை நிரூபித்து வேண்டியதைப் பெற்றுக் கொள் என விதி வகுக்கிறது. அவள் சீதையானாலும் சர்வலட்சணம் பொருந்திய ஆண் மகனைப் பார்க்கும் பொழுது அவள் மனம் சஞ்சலமடையவே செய்யும்.

தாயானாலும், தாரமானாலும் சிவகாமியின் சிந்தனை சிவனைப் பற்றியதே. எது கிடைக்கவில்லையோ அதன் மீது ஏற்படும் தீவிர நாட்டம் ஒரு பிரளயத்தையே உருவாக்கும். மறுக்கப்படும் விஷயத்தை நோக்கி மனம் பேயாய் அலையும். சந்தர்ப்பம் வாய்த்த பின்னும் சிவனே என்று இருக்க யாரும் இங்கே உத்தமர்கள் இல்லை. சிங்கத்தின் கண்ணுக்கு மான் ஒரு மாமிசமாகத்தான் தெரியும். மனிதர்கள் வாழ்க்கைக்கு அப்பால் உள்ளதை வெல்ல நினைக்கிறார்கள். இறைவன் மனிதனின் பாதையை திசை திருப்பவே பெண்களைப் பயன்படுத்துகிறான். அவதாரங்கள் கூட பெண்ணாசையை வெல்ல முடியாமைக்கு என்ன காரணமாக இருக்க முடியும்? எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் வானரசை உண்டாக்க நினைத்தவர்களின் பேச்சுக்களை மக்களால் புரிந்து கொள்ள முடியாது. பெண் தந்திரமானவள் ஆண்மகனை வளர்க்கும் போதே தன்னை அவன் வெல்ல முடியாதபடிக்கு செய்துவிடுகிறாள். கடவுள் தன் பிரதிநிதியான பெண்கள் மூலம் தான் நினைத்ததை சாதித்துக் கொள்கிறான்.

விடிகாலையில் கந்தர்வலோகத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் ஆற்றங்கரையில் நின்று கொண்டு இயற்கை எழிலை ரசித்துக் கொண்டிருக்கிறான். அது ஒளிரூப உடல் என்பதை அறியாத ரேணுகாதேவி இச்சைக்கு ஆற்பட்டு சிலையாக நிற்கிறாள். அந்த சமயத்தில் சீதையானாலும் சஞ்சலப்பட்டு நிற்கவே செய்திருப்பாள். தேவவம்சம் அரக்க வம்சத்தின் மீதோ அரக்க வம்சம் தேவ வம்சத்தின் மீதோ ஈடுபாடு காட்டுவது புதிதல்ல. அதனால் தான் ராமனே சீதையை தீக்குளிக்கச் சொன்னான். ஆனந்தப் பரவசத்தில் ரேணுகாதேவி தன்னையே மறந்துவிட்டாள். அவள் தன்னிலை உணர்ந்த போது கந்தர்வன் மாயமாய் மறைந்திருந்தான். ஆற்றில் இறங்கி தண்ணீர் எடுக்க முயலும்போது கையிலுள்ள களிமண் பானை சேறாய் உருக்குலைந்து தண்ணீரில் கரைந்தது. ரேணுகாதேவியால் வெறும் கையுடன் தான் குடிலுக்குத் திரும்ப முடிந்தது.

நிலைமையை உணர்ந்த ஜமதக்னி கோபம் கொள்கிறார். இதற்கு அவர் ரேணுகாதேவி தன்னைக் கொன்று இருந்தால் கூட அமைதியாகத்தான் இருந்திருப்பார். துரோகம் மரணத்தைவிடக் கொடியது. யூதாஸ் கடவுளின் பிரதிநிதி என இயேசு அறியாமலா இருந்திருப்பார். புனிதத்தை இழந்துவிட்டவளுக்கு இனி வாழ அருகதை இல்லை என்றே ஜமதக்னி முடிவுக்கு வருகிறார். தன் தாயென்பதால் நான்கு சகோதரர்களும் அவளை கொலை புரிய மறுத்துவிட பரசுராமரோ தந்தையின் பேச்சைக் கேட்க முன்வருகிறார். சிவன் தந்த பரசு என்ற அஸ்திரத்தை முதன்முறையாக பரசுராமர் இங்கு தான் பயன்படுத்துகிறார். என்றோ எழுதப்பட்ட விதியின் நூல் கொண்டு சிவன் இன்றும் ஆட்டுவிக்கிறான்.