Monday, October 14, 2019

பிச்சை


மணி ஒன்பது. அழகேசன் சட்டையை மாட்டிக் கொண்டு வேலைக்குக் கிளம்பினான். தொட்டிலில் படுத்திருந்த குழந்தை அழும் சத்தத்தைக் கேட்டு தண்ணீர் பிடிக்கச் சென்ற சுசீலா குடத்துடன் ஓடி வந்தாள். குழந்தையின் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு அழகேசனிடம் “ஏங்க குழந்தைக்கு இன்னும் ஜூரம் குறையல. கைவைத்தியமும் செஞ்சு பார்த்தாச்சி. நேரத்தோட யார்கிட்டயாவது ஐநூறு ரூபாய் வாங்கிட்டு வந்தீங்கன்னா டாக்டர்கிட்ட கொண்டு போய் காட்டிடலாம்” என்று சொல்லிவிட்டு அழகேசன் முகத்தையே பார்த்தபடி நின்றாய் சுசீலா.

அழகேசன் சட்டைப் பையை தொட்டுப் பார்த்துக் கொண்டான் அதில் பத்து ரூபாய் தான் இருந்தது  தேதி இருபது தான் ஆகியிருந்தது. ஒன்னாம் தேதி வர்ற வருமானத்துக்கு எல்லாத் தேதியிலும் செலவிருந்தது. சுவற்றில் மாட்டியிருந்த முருகன் படத்தைப் பார்த்துக் கொண்டே “கேட்டுப் பாக்குறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

அழகேசனை சொந்தங்கள் சீந்துவதில்லை. அவன் என்ன கோடீஸ்வரனா, என்னப்பா என்னைத் தெரியலையா நான் தான் அவரோட சம்மந்தி இவரோட கொழுந்தன் என்று ஒரு கூட்டம் கையேந்தி நிற்க. சர்க்கரை இருந்தால் தானே எறும்புகள் மொய்க்க வரும். பிச்சைக்காரனிடம் குசலம் விசாரிக்க வந்தால் சில்லறை போட வேண்டுமே என சொந்தங்கள் அவன் இருக்கும் பக்கமே தலை காட்டுவதில்லை. உலகப் பணக்காரர்கள் வரிசையில் நான்கைந்து இந்தியர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை சோற்றுக்கே லாட்டரி அடிக்கும் ஏழ்மை மிகுந்த நாட்டில்.

அழகேசன் சைக்கிளை வாத்தியார் வீட்டின் முன்பு நிறுத்தினான். காலிங் பெல்லை அழுத்திவிட்டு முருகா என்று சொல்லிக் கொண்டான். கோவணத்துடன் மலை ஏறிய சாமி இவன் கூப்பிட்டா மட்டும் வந்துவிடப் போகிறதா என்ன. கதவைத் திறந்த வீட்டுக்கார அம்மாவிடம் “சார் இருக்காங்களா பார்க்கணும்” என்று சொன்னான். அந்தம்மா ஏற இறங்க பார்ததுவிட்டு “நீங்க யாரு” என்றாள். “ராமு பிரஸ்ல வேலை செய்யற அழகேசன்னு சொல்லுங்க வாத்தியாருக்கு தெரியும்” என்றான்.

உள்ளே சென்ற அவள் தன் கணவனிடம் “இந்த மாதிரி ஆளுங்ககிட்டயெல்லாம் எதுக்கு சிநேகிதம் வச்சிக்கிறீங்க இப்ப பாருங்க காலைலங்காட்டியும் வீட்டு வாசல்ல ஏதோ கொடுத்ததை கேக்கற மாதிரி வந்து நிக்கிறான் பாருங்க, ஏதாச்சும் சொல்லி அனுப்புங்க போங்க வெள்ளிக்கிழமை அதுவுமா” என்று வாத்தியாரிடம் அவள் முணுமுணுத்தது அழகேசன் காதில் விழுந்தது.

சட்டையை மாட்டிக் கொண்டு பட்டனைப் போட்டபடி வெளியேவந்த பொன்னுதுரை வாத்தியார் “என்ன அழகேசா சொல்லு பள்ளிக் கூடத்துக்கு நேரம் ஆவுது” என்றார். “பாப்பாவுக்கு மூணுநாளா காய்ச்சல் நிக்கவே இல்லை. கைவைத்தியமும் பண்ணிப் பார்த்தாச்சி பிரயோஜனப்படலை. சுசீலா டாக்டர்கிட்ட காட்டிடலாம் யார்கிட்டயாவது ஐநூறு ரூபாய் வாங்கிட்டு வாங்கண்ணா அதான்” என்றான் அழகேசன் எச்சிலை மென்று விழுங்கியபடி.

“அழகேசா எனக்கும் குடும்பம் குட்டியெல்லாம் இருக்கு. அதுக்கு நல்லது கெட்டதுக்கு நான் தான் செலவு செய்யணும்.  கொழுந்தியாளுக்கு திடீர்ன்னு கல்யாணம் நிச்சயம் ஆயிடிச்சி உதவி பண்ணுங்கன்னு மாமனார் வந்து நிக்கிறாரு கால்ல விழாத குறைதான் என்ன, கஷ்ட நஷ்டத்தில பங்கெடுத்துக்கிறது தானே சொந்தம் செய்ய முடியாதுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்ல முடியுமா சொல்லு, இருக்கிறதையெல்லாம் புரட்டி ஒரு நாலு லட்சம் கொடுத்தேன். அக்காவை கட்டினவன் கையை விரிச்சிட்டான்னு நாளைக்கு நாலு பேர் நாக்கு மேல பல்ல போட்டு பேசிடக் கூடாதுல்ல. நேத்து பாரு பள்ளிக்கூடம் விட்டு வர்ற வழியில ஒரு நாயி பைக்ல மோதிட்டு நிக்காம போயிட்டான். கருமாரி தயவுல எனக்கு அடி ஒண்ணும் இல்ல. ஆனா வண்டி செலவு வச்சிடிச்சி அதுக்கே காசில்லாம நான் மணிவாத்தியார்கிட்ட கேட்கலாம்ன்னு கிளம்பிட்டு இருக்கேன் நீ வந்து நிக்கற, நான் என்ன பண்றது சொல்லு” என்றார். குழந்தை வீல்லென்று அழும் சத்தம் அழகேசனுக்கு கேட்டபடி இருந்தது அவன் மனம் குமைந்தபடி “சரிங்கய்யா நான் வேற இடத்துல விசாரிச்சிக்கறேன்” என்று சொல்லிவிட்டு தன்னை நொந்தபடியே சைக்கிளை எடுத்தான் அழகேசன்.

சைக்கிளை நிழலில் போட்டுவிட்டு பிரஸ்ஸூக்குள் நுழைந்தான் அழகேசன். முதலாளி கார்மேகம் ஊதுபத்தியை சாமி படங்களுக்கு காட்டியபடி “அழகேசா ஆயிரம் நோட்டீஸ் அர்ஜெண்டா மதியம் கொடுத்தாகணும் ஓட்டிடு” என்றார். தயங்கியபடியே நின்ற அவனைப் பார்த்து “என்ன பஞ்சப்பாட்டு பாடப் போறியா ஐநூறா, ஆயிரமா ஏற்கனவே நீ வாங்கினதுக்கு நான் உனக்கு சம்பளமே தரப்படாது. போனா போவட்டும் குடும்பஸ்தன்னு கொடுக்கறேன். தரேங்ககிறதுனால அப்பப்ப கை நீட்டுனா என்ன அர்த்தம். இந்த ராமு பிரஸ்ஸை விட்டு வெளியில போய் வேலை பார்த்தா தெரியும் இந்த கார்மேகத்தோட அருமை என்னன்னு. உனக்கு சுகம் கொடுத்தவளுக்கு என்னை சோறு போட சொல்லிறியே உனக்கு வெக்கமா இல்ல” என்று வெடித்தார் முதலாளி கார்மேகம்.

அழகேசன் கோபத்தை அடக்கிக் கொண்டான் இயலாமையினால் அவன் கண்களில் நீர் கோர்த்தது. சட்டையை கழட்டி ஸ்டான்டில் மாட்டிவிட்டு மெஷினை ஓட்டச் சென்றான். எங்கு பார்த்தாலும் குழந்தை வித்யாவே அவன் கண்முன் நின்றாள். வித்யா கடவுள் எனக்கு போட்ட பிச்சை அவள் சிரிப்பில் தான் என்னால் கஷ்டங்களை மறக்க முடியுது அவ இல்லைனா நான் இல்ல முருகா முருகா என தனக்குள் சொல்லிக் கொண்டான்.

மதியம் மெஸ்லேர்ந்து வந்த சாப்பாட்டு பார்சலை பிரிக்காமல் சுசீலாவுக்கு கொடுக்கலாம் என்று எடுத்துக் கொண்டு, “ முதலாளி குழந்தைக்கு சுகமில்லை அரைநாள் லீவு வேணும்” என்றான். “மூணு ஆர்டர் வந்திருக்கு டைப் பண்ணி முடிச்சாச்சி நாளைக்கு நைட் இங்கேயே இருந்து நீ தான் ஓட்டித்தரணும் போ” என்றார் முணுமுணுத்தபடி.

சைக்கிளை தள்ளிக் கொண்டே நடக்க ஆரம்பித்தான் அழகேசன். தான் வக்கத்து போய்விட்டதை எண்ணி வருந்தினான். கடைத்தெருவில் தாயின் இடுப்பில் அமர்ந்தபடி செல்லும் குழந்தையெல்லாம் அவனுக்கு வித்யாவைப் போலவே தெரிந்தன. தன்னையே விற்றால் கூட என்னை நம்பி யாரும் ஐநூறு ரூபாய் கொடுக்க மாட்டார்களே கடவுளே என்று தலையில் அடித்துக் கொண்டான். சுசீலா காலையில் சொல்லி அனுப்பியது அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. தன்னிலை மறந்து சென்று கொண்டிருந்தவனை பிரபோ, பிரபோ என்று சொல்லிக் கொண்டே யாரோ பின் தொடர்வதைப் போலிருந்தது. அழகேசன் திரும்பிப் பார்த்தான்.

கருத்த நிறமும் மெலிந்த தேகமும் வெண்தாடியும் உடலெல்லாம் திருநீற்றுப் பட்டையும் கொண்ட அந்த பிச்சைக்காரன் கைநீட்டியபடியே அழகேசன் முன் நின்றான். போடுவதற்கு சில்லறை இல்லை பத்து ரூபாயை போடுவதற்கு அழகேசனுக்கு மனம் வரவில்லை. சைக்கிளை தள்ளிக் கொண்டு நகர முயன்ற அழகேசனைப் பார்த்து அந்தப் பிச்சைக்காரன் “ஆண்டி ஆண்டியாத்தான் அலைய வைப்பான் பிச்சைக்காரனுக்கு எதுக்கு சைக்கிள்ங்கறேன், அவன் கொடுத்ததை காப்பாத்திக்க, அவன் கொடுத்ததை காப்பாத்திக்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான் அந்தப் பிச்சைக்காரன்.

உடம்பெல்லாம் வியர்த்திருந்தது அழகேசனுக்கு. சைக்கிளை வேகமாக மிதித்தபடி மூர்த்தி சைக்கிள் கடையில் போய் நின்றான். “இந்த சைக்கிளை வச்சிகிட்டு எவ்வளவு கொடுப்பீங்க எனக்கு அவசரமா ஐநூறு ரூபாய் தேவைப்படுது” என்றான். கடைக்காரர் உள்ளே சென்று கல்லாப்பெட்டியிலிருந்து 600 ரூபாய் எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார்.

தனது உதிரத்தைக் காப்பாற்றிக் கொள்ள தனது வீட்டை நோக்கி ஓடினான் அழகேசன். நாடே கம்பெனி ஆகிவிட்ட போதிலும் ஏழைகளின் வாழ்வு இப்படித்தான் உள்ளது எங்கள் இந்தியாவில்.

Wednesday, October 9, 2019

நந்தி


அளவில் சிறிய கோவில் தான் சிலசமயம் அர்ச்சகரையும், கைலாசநாதரையும் தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள். சிறிய பிரகாரம், நவகிரக சந்நதி, பைரவர் எல்லாம் உண்டு. அம்மன் பெரியநாயகி, லோகத்துக்கும் அவள் தான் பெரியநாயகி. நாயகன் யாரென்று என் வாயால் சொல்ல வேண்டுமா? கோயிலுக்கென்று நுழைவு வாயில் இடது பக்கத்தில் சிறிய தோட்டம் உண்டு. சொல்லிக் கொள்கிற மாதிரி பெரிய வரும்படி  எதுவுமில்லை. கிழக்கு நோக்கியிருக்கும் வாயிலில் பாமிணி ஆறு ஓடுகிறது. தெற்கு நோக்கி இருக்கும் வாயிலில் தான் வெகுஜனம் புழங்குகிறது. சிவனுக்கு ஏன் சொத்து நாலுமுழ வேஷ்டி போதாதா? போதும் போதும் ஆனால் அர்ச்சகருக்கு, அவருக்கு குடும்பத்தைக் காவந்து பண்ணும் பொறுப்பிருக்கிறதே. ஏதோ ஒருவேளை நமசிவாய என்று சொல்லி ஈரத் துணியை வயிற்றில் கட்டிக் கொள்ளலாம். வேளா வேளைக்கு ஆகாரத்துக்கு மனம் அலைபாயாதா? ஏதோ பிரதோஷம், தேய்பிறை அஷ்டமின்னா தட்டுல அஞ்சோ பத்தோ விழும் மத்த நாள்ல. நாலு காலத்தையும் முணுமுணுக்காமல் மாசானம் தான் பண்ணி வைக்கிறார். அவர் போஜனத்துக்கு ஊர்ல யார்கிட்ட போய் கையேந்துவார் சொல்லுங்க.

மன்னார்குடியில் வசிக்கும் கைலாசநாதரையே ஊர்மக்களுக்கு தெரியாமல் போகும் போது ஜெயராமனையா தெரியப் போகிறது. எல்லாருடைய வாழ்க்கையும் ஒரு கதை தானே. ஜெயராமன் வாழ்க்கையைப் பத்தி இங்கு அதிகமாக பிரஸ்தாபிக்கப் போவதில்லை. அவர் தொழில் பேருந்து நிலையத்தில் சுண்டல், வேர்க்கடலை விற்பது. இப்போதுமா என்று நீங்கள் கேட்டால் நான் என்ன சொல்வது. யார் வாழ்க்கையில் தான் சிவன் விளையாடவில்லை. ஜெயராமன் தற்போது கோயில் பூந்தோட்டத்தைப் பராமரிப்பதும் பூஜை வேளையில் மணியடிக்கும் வேளையும்தான் செய்து வருகிறார். வயது அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேரா சிவனைப் பார்த்தேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் நீங்கள் நம்புவீர்களா? பார்த்திருப்பாரோ என நமக்கும் சந்தேகம் வரத்தான் செய்கிறது. ஏன்னா குடும்பத்தையும், சொந்த பந்தத்தையும் உதறிவிட்டு இங்கு வந்து ஏன் சம்போ மகாதேவான்ட்டு உட்காரணும். அர்ச்சகருக்கும் ஜெயராமனுக்கும் ஏழாம் பொருத்தம். கோயிலே கதின்னு கிடக்கிற என்னைய உட்டுபுட்டு மனக்கோயில் கட்டுன பூசலார் மாதிரி அவருக்கு ஈசன் தரிசனம் தந்துட்டான்னோன்னு மனசுல ஒரு முள் தைச்சிருச்சி. இந்த முள்ளை பிடுங்கி தூர எறிஞ்சிட்டுப் போக அர்ச்சகருக்கு மனசில்லை.

இந்த ராகவனை எந்த லிஸ்ட்டில் சேர்க்கறதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கீங்க. இவன் வயசுல்ல இளவட்டப் பசங்க எல்லாம் என்னத்த தேடறாங்க? சாக்கடையில விழுந்துட்டு நாரக் கூடாதுன்னா எப்படிங்க? உலகம் எங்கங்க போயிட்டு இருக்குது. கூட்டிக் கொடுத்தவன் காசில நாமளும் பங்கு கேட்டா கேவலம் இல்லீங்களா? இந்த வயசுல ரமணரை பிடிச்சிப் போச்சின்னா வாழ்க்கை சர்க்கரையாவாங்க இனிக்கும். எல்லாத்துக்கும் துணிஞ்சவனாலதான் வாழ்க்கையில கொடி நாட்ட முடியுது. நான் நல்லவன்னு சொல்லிகிட்டு நின்னா அரசாங்க ஆபீஸ்ல காரியம் ஆவுமாங்க. துட்டுக்கு தானேங்க மகுடிப்பாம்பா மயங்கறாங்க. மனுசப் பொம்மைகளுக்கு யாருங்க கீ கொடுத்து உட்டுருக்கிறது. ஒருத்தன் தங்கத்தட்டுல சாப்பிடுறதுக்கும் இன்னொருத்தன் எச்சில் இலை பொறுக்கிறதுக்கும் என்னங்க காரணமா இருக்க முடியும். ராகவன் படிப்புல, காதல்ல, வேலைல மூணுத்துலையும் கோட்டைவிட்டவங்க. ஏங்க ஏட்டுப்படிப்பு மட்டுந்தான் படிப்பாங்க? அனுபவம் படிப்பில்லையா? வாழ்க்கையே கறாரான வாத்தியார் தானுங்களே. பள்ளத்துல விழுந்துட்டா காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்திப் பார்ப்போம் யாரும் வரலைனா நாமே முயற்சி பண்ணி மேலேறப் பார்ப்போமேங்க. வாழ்க்கையில ஏதோவொரு பிடிப்பை வைச்சித்தானே வாழவேண்டியிருக்கு. அந்த நம்பிக்கை தானுங்க ராகவனுக்கு இந்த கைலாசநாதர். அவரே அள்ளிக்கொடுக்க ஆசைப்பட்டாலும் விதி உடணும் இல்லீங்களா? எப்படியும் வாழ்றவனை உட்டுட்டு உண்மையைத் தேடி ஓடுறவனை சோதிக்கிறதுதான் சாமிங்களா? மந்தையிலேர்ந்து பிரிஞ்சு போறது ஆட்டுக்கு நல்லதா, கெட்டதாங்க? எல்லாரும் ஓடுறதை ஒதுக்குப்புறமா நின்னு பார்க்கறதுக்கு ஒருசிலராகத்தாங்க முடியும். ராகவனால எவன் சொத்தையும் அடிச்சி பிடுங்க முடியாது. எவளையும் மயக்கி வழிக்கு கொண்டுவர மெனக்கடவும் முடியாதுங்க.

சூழ்நிலையை விதிதான் நிர்ணயிக்கிறது என்பதை நம்பத்தான் வேண்டியிருக்கு. ஏன்னா சென்னையிலேர்ந்து வந்த கையோடு ராகவன் ஏன் கோயிலுக்கு ஓடுவானேன். குகைக்குள்ள மான் வந்தா சிங்கம் சும்மா உடுமாங்க அப்படித்தாங்க ஜெயராமனும். பிரகாரத்தை சுற்றி வந்து அமர்ந்த ராகவனிடம் ஜெயராமன் “எந்த ஊரு” என்று பேச்சை ஆரம்பிக்க. ராகவன் “சென்னை” என்றான்.

வந்திருக்கிறது மான்தான்னு சிங்கத்துக்கு தெரிஞ்சிப்போச்சிங்க சமயம் பார்த்து பாயப் போவுதுங்க. “சிவனைப் பார்த்தாச்சா?” என்றார் ஜெயராமன்.
“பார்த்தேன் சந்நதிக்கு போயிட்டுத்தான் வந்தேன்” என்றான் வெகுளித்தனமாக ராகவன்.

“அது லிங்கத்திருமேனி நான் கேட்கிறது சிவனை” என்றார் ஜெயராமன் அவனை உற்றுப் பார்த்தபடி.

“நீங்க கனவுல பாக்குறதை சொல்றீங்களா?” என்றான் ராகவன் அப்பாவித்தனமாக.

“அப்ப பாத்ததில்லை” என்றார் ஜெயராமன் ஏளனமாக.

“…………………………..”

“நான் பாத்திருக்கேன் என் இரண்டு கண்ணாலேயும் பார்த்து இருக்கேன். அவன் எப்படி கோயிலைவிட்டுட்டு மயானமே கதின்னு கிடக்கானோ அது மாதிரி என்னை எல்லாத்தைவிட்டும் ஒதுங்க வைச்சிட்டான். கோயில்ல கூலிக்கு மாரடிக்கிற நாயாத்தான் என்னைப்பத்தி வெளியில தெரியும். ஒரு நாள் மாசானம் கையேந்துற உனக்கே இவ்வுளவு திமிறான்னு கேட்டான் தெரியுமா? அடுத்த நாளே சைக்கிள்லேந்து விழுந்து கையை உடைச்சிட்டு வந்து நின்னான் தெரியுமா? ஆளைப் பார்த்தாலே ஜாதகத்தையே கண்டுபிடிச்சிருவேன் தெரியுமா? உன்னைப் பத்தி சிவன்ட்ட நான் சொன்னாத்தான் உண்டு. இல்லாட்டி விதியிலேர்ந்து நீ தப்ப முடியாது. அப்புறம் எல்லாரையும் போல நீயும் பிறந்து வறர்ந்து இறந்து, பிறந்து வளர்ந்து இறந்து தான் புரிஞ்சிக்க. எம்பேர் ஜெயராமன் பேர்ல மட்டும் நீ ராமன் இல்ல நிஜத்துலேயும் நீ ஸ்ரீராமன் தான்னு எங்க ஆத்தாவே சொல்லிச்சி தெரியுமா?”

ஜெயராமன் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த மாசானம் அருகே வந்து, “எல்லாருக்கும் கொள்ளி வைக்கிற சிவன் இவன் நேர்ல வந்தான்னு சொல்றானா? இந்தக் கோயில்ல காலம் காலமா கைங்கர்யம் பண்ற நானெல்லாம் விளக்கமாத்துகட்டை இவன் மட்டும் பட்டுப் பீதாம்பரமா. சிவனை கட்டி ஆள்றேன்கிறான்னே படுக்க ஒரு வீடு இருக்கான்னு கேளு. போட்டுக்க மாத்து துணி இருக்கா? ஊர் உலத்துல யாராச்சும் மதிக்கிறான்னா இவனை பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. நல்லா வாய்ல வருது. இந்தக் கிறுக்கன தர்மகர்த்தா எந்தலையில கட்டிட்டு போயிட்டார் பாரு என்றார்.

“வழிச்சிட்டு போறவனுவனுவோ சொல்லுறானுங்கன்னா நான் பாத்தது இல்லன்னு ஆயிடும்மா” என்றார் ஜெயராமன் ஆதங்கத்துடன்.

“இந்தக் காலத்துல போய் சிவனைப் பார்த்தேன் எமனைப் பார்த்தேன்னு சொன்னா பைத்தியம்னு தான் சொல்வாங்க என்ன தம்பி நான் சொல்றது” என்றார் மாசானம்.

“அவன் எங்கூட பேசுறாங்கிறேன்” என்றார் ஆவேசத்துடன் ஜெயராமன்.

“மூளை குழம்பிப் போச்சின்னா சிவன் மட்டுமில்லை செத்தவன் கூட எங்கூட பேசுறான்னுதான் சொல்லிகிட்டு திரிவே” என்றார் தன் பங்குக்கு மாசானம்.

“நான் சொல்றது உண்மையா இல்லையான்னு நான் செத்ததுக்கப்புறம் தெரிஞ்சிப் போயிடும்ல” என்றார் விரக்தியுடன் ஜெயராமன்.

“உனக்கு கிரகம் புடிச்சி ஆட்டுது. இல்லைனா இப்படி சொல்லிகிட்டுத் திரிவியா” என்றார் மாசானம் தலையிலடித்தபடி.

“கும்புட்டு போறவனுக்கெல்லாம் கல்லா தெரியிறவன் எனக்கு மட்டும் ஏன் சிவனாத் தெரியறான்” என்றார் ஜெயராமன்.

“கல்லோ, கடவுளோ அந்த  ஆராய்ச்சியெல்லாம் நமக்கெதுக்கு குழந்தை குட்டின்னு ஆனதுக்கப்புறம்” என்றார் தீர்க்கமாக மாசானம்.

“நாயன்மார்கள் வாழ்க்கையில அவன் விளையாடலையா” என்றார் விசனத்துடன் ஜெயராமன்.

“எந்தக் காலத்து கதை அது. அதுக்கும் இதுக்கும் ஏன் இப்ப முடிச்சிப் போட்டு பேசுற” என்றார் மாசானம்.

“பட்டினத்தாருக்கு நுனிக் கரும்பு எப்படி இனிச்சிதுன்னு கேட்பீங்களா” என்றார் ஜெயராமன்.

“வரும்படி வர்ற கோயில்ல தானே ஜனங்க ஈ மாதிரி மொய்க்கிறாங்க. இங்க யாராவது வந்து எட்டிப் பார்க்குறாங்களா. சிவனுக்கு நாலு முழ வேட்டி சாத்திட்டிப் போறேன். காப்பு உண்டா, கவசம் உண்டா இங்க” என்றார் ஆதங்கத்துடன் மாசானம்

“சித்தன் போக்கு சிவன் போக்கு” என்றார் எங்கோ பார்த்தபடி ஜெயராமன்

“உன்னையெல்லாம் திருத்த முடியாது அகல் விளக்கையெல்லாம் எடுத்து கிணத்து கிட்ட போட்டுட்டு பூட்டி சாவியை வீட்ல வந்து கொடுத்துட்டு கூலியை வாங்கிட்டுப் போ” என்று கிளம்பினார் மாசானம்.

ஜெயராமன் ராகவனிடம் “பித்தா, பிறைசூடி அவன். யாருக்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளனும்னு அவன் தான் முடிவு பண்ணுவான். உன்னோட விதி வேலை செய்ய ஆரம்பிச்சிடிச்சி. அடுத்த தடவை வரும் போது என்னைய தேடாத நான் இங்கன்னு இல்ல எங்கயும் இருக்க மாட்டேன் பிரகாரத்தை மூணு தடவை சுத்திட்டு திரும்பிப் பார்க்காம போ” என்றார்.

எழுத்து தன் தொழிலாக ஆனதுக்கப்புறம் எத்தனையோ தடவை கோயில்ல வந்து ஜெயராமனை தேடி இருக்கிறான் ராகவன். ஆனால் அவர் இவன் கண்ணுக்குத் தென்படவே இல்லை.

ஞானச்சுடரை தூண்டிவிட்ட அவரது கைகளுக்கு வெறும் எழுதுகோலாகத்தான் இன்றுவரை ராகவன் இருக்கிறான். இவன் தனித்த மண்பானையாகத்தான் இருந்தான். அவருடனான சந்திப்புக்கு பிறகு பானை உடைந்து காற்று வெளியுடன் கலந்துவிட்டது. ஏதோவொன்றுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அதுதான் கடவுளா என்றால் இருக்கலாம். அதற்கு நீங்கள் என்னப் பெயர் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளலாம். இந்த அணையப்போகவிருந்த சுடரை ஏற்றி வைத்த அந்த ஜெயராமன் இப்போது எங்கே இருக்கிறார்.

Sunday, October 6, 2019

சிருஷ்டி


“உங்களுக்கு ஆயுசு நூறு சார் என்றான் மெக்கானிக். நூறு கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் இவர் பேருக்கு தலையாட்டிக் கொண்டு சிரித்து வைத்தார். வாங்குற சம்பளத்துல பாதி வண்டிக்கே போய்விடுதே என எண்ணிக் கொண்டே சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

வரும் வழியில் கயல்விழியை நினைத்துக் கொண்டார் வரதுப்பிள்ளை. இறங்கும் முன் ஓடிவந்து பையைத் துழாவுவாள். பிள்ளை ஏமாறாதிருக்க ஏதாவது வாங்கிப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டவராய், பகவான் ஸ்வீட் ஸ்டாலில் வண்டியை நிறுத்தி ஓமப்பொடி வாங்கிக் கொண்டார்.

கடையிலிருந்து வீட்டுக்கு நான்கு மைல் தூரம். வீட்டை வந்து அடையும் வரை ஏதாவதொரு பிரச்சனை அவருடைய நெஞ்சைக் குடைந்து கொண்டிருக்கும். இரண்டு வருடங்களாக அதாவது கயல் பிறந்ததிலிருந்து மனதிற்கு சற்று ஆறுதலாக இருக்கிறது. அவள் தூங்குவதையும், சாப்பிடுவதையும் பார்க்கும் போது அப்பா ஸ்தானம் என்பது கடவுள் கொடுக்கும் வரம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

வரதுப்பிள்ளையும் வயதில் கிறுக்குத்தனமாகத்தான் சுற்றி அலைந்தார். அந்த வயதில் கோயில் கருவறையிலுள்ள தெய்வம் அவருக்குச் சிலையாகத்தான் தெரிந்தது. ஜமா சேர்த்துக் கொண்டு கையெழுத்து பத்திரிகையெல்லாம் நடத்தினார். அதில் கல்லா-கடவுளா என அவர் எழுதிய தொடர் கட்டுரையை சிநேகிதர்கள் இன்றும் சிலாகிப்பார்கள்.

வரதுப்பிள்ளையின் அப்பா தீவிர சிவபக்தர். நெற்றியில் விபூதி பட்டை இல்லாமல் அவரை வெளியில் பார்க்க முடியாது. வரதுப்பிள்ளையிடம் அவர் ‘உன் சித்தாந்தம் வாழ்க்கைக்கு உதவாது என நேரே சொன்னதில்லை. தெய்வமே உணர  வைத்தால் ஒழிய யாரும் யாரையும் திருத்த முடியாது என அவருக்குத் தெரியும்.

படிப்பை முடித்து தனது உழைப்பை காசாக்க முயலும் போது தான் வரதுப்பிள்ளை தெரிந்து கொண்டார் சமூகம் தான் நினைத்தபடி இல்லையென்று. அவருக்குத் தெரிந்து சிறிய காரியத்துக்காக பணத்தை எதிர்பார்ப்பவர்களாகத்தான் எல்லோரும் இருந்தனர். தெய்வம் இல்லையென்றவன், தெய்வத்தை ஏற்றுக் கொண்டவனைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக தவறு செய்வதை வரதுப்பிள்ளை கண் கூடாகக் கண்டார்.

காந்தியை படித்துவிட்டு பணத்துக்காக பொய் சொல்பவர்களை அவருக்கு அறவே பிடிக்கவில்லை. அவரது உண்மையின் மீதிருந்த நாட்டத்தால் அரசாங்க உத்தியோகமும் அவருக்கு கிடைக்காமல் போனது. பணத்திற்காகவும், பெண்ணிற்காகவும் மனிதர்கள் எந்த அளவுக்கு தரம்தாழ்ந்து போவார்களென அவர் கண்கூடாகக் கண்டார். பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பவன் போதுமென்றா நினைக்கிறான்.

வேறு வழியில்லாமல் தான் வரதுப்பிள்ளை முதலியாரின் மளிகைக் கடையில் கணக்கு எழுதும் வேலைக்குச் சேர்ந்தார். முதலியார் கறாரான பேர்வழி. போணியாகாவிட்டாலும் எட்டரை மணிவரை உட்கார்ந்து தான் ஆகவேண்டும். மற்றவர்களைப் போல் வரதுப்பிள்ளைக்கு நொண்டிச் சாக்கு சொல்லத் தெரியாது. கணக்கு முடிக்கிற மாதத்தில் குடும்பஸ்தன் என்று கூட பார்க்காமல் கடையே கோயிலென்றும் முதலியாரே தெய்வமென்றும் தான் கிடக்க வேண்டும். இந்த வேலையையும் விட்டால் வேறு போக்கிடம் கிடையாது வரதுப்பிள்ளைக்கு.

நிறைய இடத்துல ஜாதகம் பொருந்தி வந்திச்சி. எல்லா பெண்களும் மாசத்துக்கு அம்பதாயிரம் சம்பாரிப்பவனாகத்தான் எதிர்பாரத்தார்கள். சுயம் வரத்துல கலந்துக்க ஆம்பளையா இருந்தா போதுமா, நாட்டுக்கு இளவரசனா இருக்க வேண்டாம்.

ஒரு இடத்திலிருந்து பெண்வீட்டார் அவனுடைய சம்பளம் பற்றி விசாரிக்க முதலியாரிடம் சென்று கேட்டிருக்கிறார்கள். முதலியார் போட்டு உடைத்துவிட. பெண் வீட்டார் கழன்று கொண்துமில்லாமல் அந்த இடத்துல வேலைக்கு இருக்கிற வரை அவரால உருப்படவே முடியாது என வரதுப்பிள்ளை அப்பாவின் காதுபடவே ஏசினார்கள்.

திருமணத்திற்கு பணப்பொருத்தம் மட்டுமே இப்போதெல்லாம் பார்க்கப்படுகிறது. இந்தக் காலத்தில் நல்லவனை யார் தேடுகிறார்கள். பணம் சம்பாரிக்கவல்ல வல்லவனைத்தான் தேடுகிறார்கள். நான் வரம் வாங்கி வந்தது அப்படி என்று வரதுப்பிள்ளை தன்னைத் தேற்றிக் கொண்டார்.

திலகமும் வரதுப்பிள்ளைக்கு வாய்க்க இருந்தவள் அல்ல. திலகத்தைப் பெண் பார்க்க போனவர்கள் எண்ணிக்கை குறையவே இவரையும் சேர்த்துக் கொண்டார்கள். மாப்பிள்ளை பையன் ஜகா வாங்க இவருக்கு அடித்தது யோகம். திருமணம் என்பது ஜாதகப் பொருத்தத்தை எல்லாம் மீறி எப்படி நடத்தி வைக்கப்படுகிறது என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

திலகமும் அவ்வப்போது வார்த்தைகளை வீசத்தான் செய்வாள். தம்படிக்கு வக்கற்றவனாக இருந்தாலும் கோபம் வரத்தானே செய்யும். வரதுப்பிள்ளை மளிகைக் கடையே கதியென்று கிடப்பது அவளுக்கு பிடிக்கவில்லை. “அதே வரும்படிக்கு எத்தனை வருசமா குப்பை கொட்டுவிங்க, மாசக்கடைசியல் நாம விரதம் இருக்கலாம் குழந்தை என்ன பண்ணும் என்று அவள் கேட்பதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.

அன்று ஏன் விடிந்தது என்று இருந்தது வரதுப்பிள்ளைக்கு, வீட்டுக்கு இரண்டு மாத வாடகை பாக்கி. வந்து உட்கார்ந்து விட்டார் வீட்டுக்கு சொந்தக்காரர். “என்ன வரது குழந்தைகுட்டினு ஆனதுக்கு அப்புறம் இன்னும் சாமர்த்தியம் இல்லாம இருந்தா எப்படி. ஒருத்தர் வரும்படியை வைத்து இந்தக் காலத்துல குடும்பம் நடத்த முடியுமா? நாலு வழியிலேர்ந்தும் பணம் வரணும். இல்லைனா இப்படி அவமானப்பட்டு நிக்க வேண்டியது தான். உண்மையை நம்பிப் போன அரிச்சந்திரன் வெட்டியானாய்த்தானே ஆனான். நீ நல்லவனாய் இருக்கிறதுனால தெய்வம் கூரையைப் பிச்சிகிட்டு குடுக்குமா என்ன. எந்த ருதுவும் இல்லாம யார்கிட்டயாவது பத்து ரூபா வாங்க முடியுமா உன்னால. பொட்ட புள்ளயா வேற போயிடிச்சி எல்லாம் செஞ்சாகணும் அப்ப எங்க போய் முட்டிக்கிவே. இன்னும் ரெண்டு நாள் டைம் தரேன், அப்புறம் பழக்கப்பட்ட நாடார் இப்படி செஞ்சிட்டாரேன்னு நினைக்கப்படாது ஆமா சொல்லிட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

வரதுப்பிள்ளை தான் யோக்கியனாக இருக்க வேண்டும் என்பதற்காக வைராக்கியத்துடன் அப்படி இல்லை. வரதுப்பிள்ளையின் இயல்பே அப்படித்தான். வார்த்தை மாறி பேசத் தெரியாது. சொல்லாததை சொன்னேன் என்று சத்தியம் அடிக்க வரதுப்பிள்ளையால் முடியாது. அப்பா இறந்த பிறகு தேரை இழுத்து தெருவில் விட்டது போலாகிவிட்டது வரதுப்பிள்ளையின் கதை. சுயமாக முடிவு எடுப்பதில் தடுமாறித்தான் போகிறார். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைதான். செலவுக்கு காசில்லை என்றால் திலகத்தின் பேச்சில் உஷ்ணம் கொஞ்சம் ஜாஸ்தியாகத்தான் இருக்கும். வரதுப்பிள்ளையின் மனம் புழுங்கத்தான் செய்கிறது அதனால் உதறிவிட்டு சம்போமகாதேவா என்று போய்விட முடியுமா என்ன.

வீடு தான் மனிதனின் விடுதலையான இடம். நிம்மதியைத் தொலைத்தவர்கள் அதனை வேறு எங்கு போய்த் தேடுவார்கள். பேச்சால சூடுவைக்கிறதுல யாரும் திலகத்தைப் போலாகமுடியாது. போன மாசக் கடைசியில் கடையிலேர்ந்து வந்த அசதியில ஒருவா காபி கேட்டுவிட்டேன். வந்த பதிலை பார்க்கணுமே அவளிடமிருந்து “காபி கேட்க வந்துட்டாரு டீ எஸ்டேட் ஓனரு என்றாள். வரதுப்பிள்ளைக்கு ஏன்டா கேட்டோம் என்றாகிவிட்டது. ஒருநாள் சர்க்கரை போடலயா என தெரியாத்தனமாக கேட்டுவிட்டேன். “டீக்கு சர்க்கரை இல்லைன்னு இல்ல வீட்டுல சர்க்கரை தீர்ந்து போய் இரண்டு நாளாச்சி நான் சொன்னப்ப ஊமை சாமியார் மாதிரி இருந்துட்டு இப்ப கேட்குறதை பாரு என்றாள் சம்பாரிக்கிறது குறைச்ச என்றாலும் நாக்குக்கு ருசி கேட்கிறது பாரு என வரதுப்பிள்ளை தன்னைத் தானே நொந்து கொண்டார்.

வரதுப்பிள்ளை வீட்டருகே வந்துவிட்டார். இப்போது தான் அவர் ஞாபகத்திற்கு  வந்தது. ஆறாயிரம் கடனுக்காக பைனாஸ் கம்பெனிக்காரன் வீடு புகுந்து டி.வியை எடுத்து போனதும் அதனால திலகம் கோவிச்சிட்டு குழந்தையுடன் பிறந்தகம் போனதும். வரதுப்பிள்ளை வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றார். வைத்த பொருள் வைத்த இடத்தில் இருப்பதைப் பார்த்த போது வரதுப்பிள்ளைக்கு கயல்விழி ஞாபகம் வந்தது. வரதுப்பிள்ளைக்கு தன்னைக் கரிச்சிகொட்டவாவது திலகம் வேண்டியதா இருந்தாள். எந்த முகத்தை வைத்துக் கொண்டு மாமனார் வீட்டுக்கு போவது என வரதுப்பிள்ளைக்கு யோசனையாய் இருந்தது. வெறுமை புதைகுழியில் தள்ள வரதுப்பிள்ளை தன் பெண்டாட்டி பிள்ளையை அழைத்து வரும்பொருட்டு சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினார்.

பக்கத்து வீட்டு வானொலி பண்பலையில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
கடைசி வரை யாரோ

விடுகதை


இரத்த மாதிரியை பரிசோதித்து ராமச்சந்திரனுக்கு blood cancer என்று உறுதிப்படுத்திவிட்டார்கள். அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தான் என்று அவனுக்கு நாள் குறித்து discharge செய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ராமச்சந்திரனுக்கு கல்யாணமாகி ஒரு மகளுண்டு  ராமச்சந்திரனுக்கு அப்பா தவறிவிட்டாலும் அம்மா இருக்கிறாள். கூடப் பிறந்தவர்கள் ஒரு அக்கா மட்டுமே, அவள் கல்யாணமாகி திருச்சியில் வசிக்கிறார்கள். அம்மாவைப் பார்க்க அவ்வப்போது வந்து போவதுண்டு. என்ன அக்காவும், மாமனும் காசிலேயே கண்ணாய் இருப்பார்கள்.

அப்பா வச்ச அச்சகத்தைத்தான் ராமச்சந்திரன் நடத்தி வருகிறான். சீசனுக்கு ஏற்றபடி வரும்படி கூடும் குறையும். இப்ப இருக்கிறது சொந்தவீடுதான். கவனிப்பு இல்லாம தரிசா கிடந்த இரண்டு ஏக்கர் நிலத்தை விளைச்சலுக்கு தகுந்ததாய் மாற்றி கிரயத்துக்கு விட்டிருக்கான். இவன் சம்பாரிச்சான்னு சொல்லிக்கும்படியாய் ஒரு காலிமனை வாங்கி போட்டிருக்கான். அச்சகம் வீடு நிலம்னு சுத்திகிட்டு இருந்த ராமச்சந்திரன் வாழ்க்கையில இடிதான் விழுந்து போச்சி. சுதாரிக்காம வாயில ரத்தம் வர்ற வரையிலும் நாட்டு வைத்தியம் தான் பார்த்துகிட்டு இருந்திருக்காங்க. இப்ப ரொம்ப முத்திபோச்சின்னு டாக்டர்களும் கைவிரிச்சிட்டாங்க.

வீட்டுக்கு வந்தவுடன் ராமச்சந்திரன் ஆத்துப் பக்கம் சென்றுவிட்டான். கல்லை தண்ணீரில் தூக்கிப் போட்டபடி அவனுடைய சிந்தனைப் பறவை வானவெளியை வட்டமடிக்க ஆரம்பித்தது. இனிமேல் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வது என யோசிக்க ஆரம்பித்தான். ஆசைகளை குழிதோண்டி புதைத்த பின்பு புலன்களின் வழியே வெளியே அலைந்து கொண்டிருந்த மனது உண்முகமாக திரும்பியது. தன்னையே சாட்சியாக பார்க்க ஆரம்பித்தான். நான் யார் என்று தன்னை தன்னுள் தேடினான். தானே கேள்வி கேட்டு தானே பதிலும் சொல்லிக் கொண்டான். எல்லோரும் சாகப் போகின்றார்கள் நாம கொஞ்சம் முந்திகிட்டோம் அவ்வளவு தான். வாழ்க்கைப் பயணத்துல உறவுகளையெல்லாம் விட்டுட்டு நான் மட்டும் தனியா விடைபெற்றுக் கொள்வது கொடுமையான விஷயம் தான். நாற்பது வருஷம்ங்கிறது கண்ணிமைக்கிற நேரத்துல ஓடிப் போய்ச்சி இல்ல. அழிஞ்சு போற உடலுக்குத்தான் எவ்வளவு ஆடம்பரம் தேவைப்படுது. புணுகும், ஜவ்வாதும் இந்த சாம்பலுக்குத்தாங்கிறது யாருக்காவது உரைக்குதா என்ன.

இன்னிக்கு வரை எனக்கு நடந்த ஒவ்வொரு நல்ல காரியத்திலேயும் அம்மா கூட நின்னு இருக்கா. இந்த வயசுலேயும் அவ என் கூட இருக்கிறதுக்கு நான் கொடுப்பினை செஞ்சிருக்கணும். சின்ன முள்ளுக் குத்துனாக்கூட நான் தாங்கமாட்டேன்னு அவளுக்குத் தெரியும். சின்ன வயசுல காட்டுல சுள்ளியைப் பொறுக்கிட்டு வந்து வெந்நீர் வச்சி தான் என்னைக் குளிப்பாட்டுவா. பள்ளிக் கூடத்துல மிஸ் எம்மேல கையை வச்சிட்டான்னு கோபப்பட்டா பாரு, அதுதான் முதல் தடவையா அவ கோபப்பட்டு நான் பார்த்தது. முந்தாணியில காசை மட்டுமில்ல எங்களையும் தான் சேர்த்து முடிஞ்சு வச்சிருந்தா. அம்மாக்கள் குழந்கைகளுக்காகவே கோயில் படியேறுகிறார்கள். குழந்தைகளுக்காகவே இறைவனிடம் பிச்சைக் கேட்கிறார்கள். தாய்மை அடைவதன் மூலம் பெண்கள் தெய்வமாக மாறிவிடுகிறார்கள். பெற்றெடுத்தவுடன் அவளுடைய உலகம் குழந்தைகளுக்கு மட்டுமானதாக மாறிவிடுகிறது.

அச்சகம் விலைக்கு வந்தபோது அதைவாங்க முகம்கோணாமல் அப்பாவிடம் தாலியை கழட்டிக் கொடுத்தாள் அடகு வைக்க. தீபாவளியன்று நாங்கள் புத்தாடை அணிந்து கொண்டிருக்க அவள் நைந்த புடவையுடன் பலகாரம் செய்து கொண்டிருப்பாள். இன்னும் அவள் கருவறையின் கதகதப்பு எனக்கு வேண்டியதாய் இருக்கிறது. தாய்மை தெய்வத்தைவிட உயர்ந்தது என்று எனக்கு இப்போதுதான் புரிகிறது. ஒருவனிடம் அன்பிற்காக மட்டுமே அக்கறை கொள்வது கடவுள் தன்மையைவிட உயர்ந்தது அல்லவா. இன்னும் அவள் கண்களின் மூலமாகத்தான் நான் உலகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவள் இல்லாதிருந்தால் வாழ்க்கைச் சகதியில் விழுந்து புரண்டிருப்போம் நாங்கள். பழிபாவத்துக்கு அஞ்ச வேண்டும் என்பதை அவள்தான் எங்களுக்கு கற்றுக் கொடுத்தாள்.

அம்மாக்களின் வாழ்க்கை கரிபடிந்த அடுக்களையில் ஆரம்பித்து அடுக்களையிலேயே முடிந்துவிடுகிறது. படியளப்பவளை ஏன் அன்னபூரணி என்ற பெண் தெய்வமாக்கினார்கள் இப்போது என்னால் உணரமுடிகிறது. அப்பா கிழித்த லெட்சுமணக்கோட்டை அம்மா தாண்டியதே இல்லை. எந்த முடிவையும் அப்பாவே எடுப்பார். தன்னை ஆலோசிக்கவில்லையே என்ற குறை அம்மாவிடம் இருந்ததாகவே தெரியவில்லை. அவளின் தியாகத்திற்கு விலையாக வேறென்ன என்னால் கொடுக்க முடியும். எங்களைத் தொந்தரவாய் அவள் எப்போதும் கருதியதில்லை. அவள் அப்பாவிடம் பஞ்சப்பாட்டு பாடி நாங்கள் பாரத்ததில்லை. தெய்வாம்சம் மிகுந்த பெண்கள் பணம் கொண்டுவந்தால் பல்லிளிப்பதும் இல்லாவிட்டால் எரிந்து விழுவதுமாக இருப்பார்களா என்ன? வாழ்க்கை கொடுத்தவனை கடவுளாக பார்க்கும் பெண்களை இந்தக்காலத்தில் தேடிப் பிடிக்க முடியுமா. அவள் மீது கொண்ட மதிப்பினால் தான் அப்பா சமையலைப் பற்றி எப்பவும் குற்றம் சொன்னதே இல்லை.

அப்பாக்கள் எப்பவுமே சைக்கிள் கற்றுக் கொடுக்கும்போது சிறிது தூரம் சென்ற பின் பிடியை விட்டுவிடுவார்களே ஏன்? தான் பின்னால் பிடித்துக் கொண்டு வருகிறேன் என்ற தைரியத்தில் அவன் ஓட்ட வேண்டும் என்பதற்காகத்தானே. பறவை தன் குஞ்சை கூட்டைவிட்டு கொத்தித் தள்ளும் கீழே விழுவதற்கு முன் சிறகடித்து பறக்க ஆரம்பித்துவிடும் அந்தக் குஞ்சு. அந்தக் குஞ்சு தாயான பிறகு தான் தெரிந்து கொள்ளும் தாய் தன்னை ஏன் கொத்தித் துரத்தினாள் என்று. அப்பா ஏதாவதொரு சிந்தனை ஓட்டத்தில் இருந்தாலும் எங்களைப் பார்த்தவுடன் அவர் முகத்தில் புன்னகை அரும்புவதை எப்படி என்னால் மறக்க முடியும். அவருக்கு ஏதாவது பலகீனங்கள் இருந்தால் குடும்பக் கப்பல் மூழ்கித்தான் போயிருக்கும். எங்களுக்கு எதிராக அவர் சிகரெட் குடித்ததே இல்லை. அப்பாவுக்கு அந்தப் பழக்கம் இருந்ததென்று அம்மா சொல்லித்தான் எங்களுக்கே தெரியும்.

வெண்ணிலா வீட்டில் வீடுகட்டி குடிபோகிறார்கள், தெய்வானை வீட்டுக்காரர் அவளுக்கு நாலு பவுன்ல நகை வாங்கி போட்டிருக்கிறார்- இப்படி அம்மா அப்பாவிடம் அக்கம் பக்கத்து சங்கதியை வாய் துடுக்காய் பேசியதே கிடையாது. அம்மா இதுவரை தனக்கென்று எதுவும் யாரிடமும் கேட்டதே கிடையாது. கொடுத்தது தப்படி என்றாலும் அதை வைத்தும் குடும்பம் நடத்த தெரிந்திருந்தது அவளுக்கு. அப்பா எம்டனாக இருந்தாலும் யாரிடமும் அவரை விட்டுக் கொடுத்து பேசமாட்டாள். அப்பா யாரிடமாவது ஏமாந்து வந்து நிற்பாரே ஒழிய அவர் யாரையும் ஏமாற்ற மாட்டார். எதற்கு ஆசைப்பட்டாலும் அதற்கு தனக்கு தகுதி இருக்கிறதா என தன்னைத் தானே கேட்டுக் கொள்ளும் ரகம் அவர். அப்பா இருந்தவரை எந்தக் கஷ்டங்களும் எங்களைத் தாக்கா வண்ணம் தடுப்புச் சுவராய் இருந்தார். இப்போது கூட அவர் வெளியூருக்கு சென்றிருக்கிறார் என்ற ஞாபகத்தில் தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இதோ எனக்கு நாள் குறித்துவிட்டார்கள். வெளியேறு வாசலை கடவுள் எனக்காக திறந்து வைத்துவிட்டார். என்னை அழைத்துச் செல்ல என் அப்பா ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்.

எனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காக அல்ல. அம்மாவுக்கு மருமகள் வேண்டும் என்பதற்காகத்தான் நான் விசாலாட்சியை கல்யாணம் செய்து கொண்டேன். இதை அவளிடம் தெரிவித்த போது “அதனால தான் அத்தைக்கு ஒருகுறையும் வைக்காம இன்னிக்கி வரை நடந்துகிட்டு வாரேன் என்றாள். கல்யாணங்கிறது குதிரைக்கு கடிவாளம் போடுறமாதிரி. அக்கம் பக்கம் பாக்காம நேரா ஓடிகிட்டு இருக்கணும. இன்று வரை நாலு பேர் என்ன நினைப்பார்களோ என்றெண்ணித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இருட்டில் கல் என்று தண்ணீரில் தூக்கி எறிந்து கொண்டிருந்துவிட்டேன் விடிந்த போதுதான் தெரிந்தது அது வைரமென்று இப்பொழுது ஒரு வைரக்கல் தான் மீதமிருந்தது. வாழ்வும் அதுபோல் தானே. சர்க்காரின் சட்டம் கூட செல்லுபடியாகாத ஒரே இடம் சுடுகாடு தானே. பைபிளில் ஒரு வாக்கியம்  வருமே உன்னுடையை தலைமுடி கூட எண்ணப்பட்டிருக்கின்றன என்று. ஏற்கனவே எழுதப்பட்ட விதிக்கு நானும் இரையாகப் போகிறேன். சதுரங்க காய் நகர்த்தலில் ஏதாவதொரு ராஜா கண்டிப்பாக வெட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும். நடப்பதை தலைகீழாக நின்றாலும் நிறுத்த முடியாதல்லவா.

வாழ்க்கை சிலருக்கு வரமாகவும், சிலருக்கு சாபமாகவும் அமைந்துவிடுகிறது. எனக்கு வாய்த்தவள் அழுத்தக்காரி எதையும் சமாளித்துவிடுவாள். பூவும் பொட்டும் பறிபோய்விடுமே என்பதற்காகவாவது அவள் அழுது அரற்றத்தான் செய்வாள். இரவல் தந்தவன் கொக்கிப் போடும்போது சொந்த பந்தத்தைக் காரணம் காட்டியா தப்பிக்க முடியும். வாழ்க்கை ஆறு அடித்துச் செல்லப்படும் தூசி துரும்புகளைப் பற்றிக் கவலைப்படுமா என்ன. மேகங்கள் தன்னை இழப்பதில் சந்தோஷப்படலாம் ஆனால் மனிதன். மரணப்பாம்பு என்னை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டுள்ளது. மண்ணுடனான பிணைப்பை இறந்தபிறகும் விடமுடியாதல்லவா.

ஒருவர் இருப்பே இல்லாமல் போவதென்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரியமா. ஆட்டுவிப்பவன் தான்தோன்றி அல்லவா அவனுக்கு ஆசாபாசங்கள் புரியுமா என்ன. வியூகத்தில் சிக்கிய அபிமன்யூ நிலைதான் எனக்கு. இந்த கிழிந்த சட்டையை களைந்து எனது ஆன்மா புதிய சட்டையை அணிந்து கொள்ள தயாராகிவிட்டது. வாழ்க்கையின் போக்கு இப்படித்தான் செல்லுமென்று ஜோதிடத்தால் கூட கணிக்க முடியாது அல்லவா. உயிர் வெளியேறிவிட்டால் ஆணானாலும், பெண்ணானாலும் பிணம் தானே. வாழ்க்கையில் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது தான். என் மூலம் பிழைக்க கற்றுக் கொண்டவர்களாவது என்னைப் பற்றி நினைப்பார்களா என்ன.

என் வீடேறி வந்த தெய்வத்திடம் எப்படி நான் விடைபெற்றுக் கொள்வது. அவளது தோழிகளிடம் அறிமுகப்படுத்துவதற்காகவாவது நான் தேவைப்படுவேன் அல்லவா. இந்தப் பாழும் உலகத்தில் அவளை அனாதையாக விட்டுப் போகிறேன் என நினைத்தால் எனக்கு அழுகை வருகிறது. மரணம் விடுதலையா கைவிலங்கா என்று யாரைப் போய் கேட்பது. எனக்குப் பின்னால் அவள் சிறகிழந்து நிற்கக்கூடாது அல்லவா. அவள் மாலை போடப்பட்டு சுவரில் மாட்டப்பட்டிருக்கும் எனது புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் என்ன நினைத்துக் கொள்வாள். அவள் மழலைக் குரலை மறந்து நான் போய் தான் ஆகவேண்டுமா. விதியின் கைகள் என் கழுத்தை இறுக்குகிறது. இந்த நினைவுகள் இறந்த பிறகும் எனக்கு சுமையாக கனத்துக் கொண்டுதான் இருக்கும்.

எவ்வளவு சொத்துபத்து இருந்தாலும் ஒருவனால் ஐந்து இட்லிக்கு மேல் தின்ன முடிகிறதா. அழகாயிருக்கிறேன் என்பதற்காக எப்போதும் நிலைக்கண்ணாடி முன் நின்றுகொண்டா இருக்க முடியும். அத்தியாவசிய செலவுக்காகத்தானே பணம் சம்பாதிப்பது. அக்கா பலனை எதிர்பார்த்து தான் எந்தக் காரியமும் செய்வாள். சொந்தமாக தொழில் செய்கிறான் ஃபாரினுக்கொல்லாம் ஏற்றுமதி செய்கிறான் என்று கூறித்தான் மாமனை அவளுக்கு கட்டி வைத்தார்கள். புக்ககம் புகுந்த பின்தான் சொன்னதெல்லாம் பொய் என அவளுக்கு தெரியவந்தது. அவன் சம்பாத்தியம் வாய்க்கும் வயிற்றுக்கும் சரியாய் இருந்தது. சுகபோகத்துக்கு ஆசைப்பட்டவள், ஆடம்பர வாழ்வுக்காக யாரை குழியில் தள்ளலாம் என சமயம் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு நான் இறந்தவிடுவேன் என்ற சேதி தேனாய் இனிக்கத்தான் செய்யும். இதோ எனது தேவஆட்டுக்குட்டியை நரிகளின் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறேன்.

மரணமென்பது மனிதனுக்கு தன்னோடு சம்மதப்பட்டது மட்டுமல்ல. அவ்வளவு சீக்கிரத்தில் அவனது நினைவுகள் முற்றிலும் அழியாது. வாழ்க்கை நாடகத்தில் எனது கதாபாத்திரத்தை நன்றாக செய்தேனா என்று கடவுளைத்தான் கேட்க வேண்டும். துயரக் கடவுளால் தான் மரணப் புத்தகத்தை எழுத முடியும். அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு இன்று இயேசு நம்மிடையே இல்லை. திருவிளையாடல் புரிவதற்கு இங்கு சிவனும் தவக்கோலத்தைக் கலைத்து எழுந்து வரப்போவதில்லை. மைதானத்தில் உதைபடும் கால்பந்தாய் விதி என்னை அங்கும் இங்கும் பந்தாடுகிறது. இந்தப் பாதை மரணவூருக்கு கொண்டுபோய் விடும் என்றால் நான் அதைத் தேர்ந்தெடுத்து இருப்பேனா. மழைத்துளி தோள் மீது பட்டவுடன் ராமச்சந்திரனுக்கு சிந்தனை கலைந்தது நினைவுப் பறவை மீண்டும் கூட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டது. மற்றவர்களுக்காக வாழ்ந்தது போதும் இனி இந்த இரண்டு மாதங்களாவது தனக்காக வாழ வேண்டும் என்று முடிவு செய்தவனாய் தெளிவான மனத்துடன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வடக்குப் பக்கத்தில் பேரிகை போல் இடி முழங்கியது.

Thursday, September 19, 2019

படுகளம்


காமம் கடக்க முடியாத ஒன்றாய் இருக்கிறது. பெண்ணாசை தான் மனிதனை தவறு செய்யத் தூண்டுகிறது. மோகித்தவளை எப்படி மஞ்சத்துக்கு அழைக்கலாம் என மனம் கணக்கு போடுகிறது. அவளைப் பற்றிய நினைவுகளே அலையலையாகப் பெருக மனம் பித்தாகிறது. ஒருவனுக்கு அரூபியாகத் தெரிபவள், இவனுக்கு பேரழகியாகத் தெரிகிறாள். உள்ளுக்குள் காமம் காடாக வளர்ந்து நிற்கிறது. இவன் விதி புத்தியை வென்றுவிடுகிறது. அவளுடைய காலடியில் ராஜ்யத்தை ஒப்படைக்க இவன் தயாராகவே இருக்கிறான். மோகம் ஒரு தீ பற்றிக்கொண்டால் எதனாலும் அதை அணைக்க இயலாது.

முதலில் அவள் தன்னை ஏறெடுத்துப் பார்த்தாலே போதும் என்றிருக்கும். பிறகு ஒரு வார்த்தை பேச மாட்டாளா என ஏக்கமாய் இருக்கும். பால்வதனத்தை விரல் நகங்களால் தீண்டிப் பார்க்க ஆசையாய் இருக்கும். முத்தம் கன்னத்தில் ஆரம்பித்து இதழ்களில் வந்து நிற்கும். இது என் வீடு என் பெயரில் இருக்கிறது. இது என் வாகனம் ஆர்.சி புக் எனது பெயரில் இருக்கிறது என்பது மாதிரி மனம் அந்த யுவதியை தன் உடைமையாக்கிக் கொள்ள தனது காமவடிகாலுக்கு அவளை ஒரு போகப் பொருளாக உபயோகித்துக் கொள்ள திட்டமிடுகிறது. அடைந்தவுடன் அலட்சியமாய் தூக்கிப் போட்டு விடுகிறது. என்ன பெரிய பம்மாத்து. கையை மூடியே வச்சிருந்த ஏதோ தங்கக் காசு வைச்சிருக்கியோன்னு நினைச்சேன். கையை விரிச்சதுக்கப்புறம் தானே தெரிகிறது வெறும் பத்துக் காசுன்னு. மாம்பழம் ருசியாக இருந்தது. கொட்டை முளைக்குமா முளைக்காதா என்று ஏன் கவலைப்படுவானேன்.

வாழ்க்கையில் ஒருதரம் தான் மாம்பழம் சாப்பிடுறோமோ என்ன. வகையா வகையா சாப்பிடறோம். வாங்கி வாங்கி சாப்புடறோம். அதுலயே நிபுணன் ஆயிடுறோம். பழத்தை பார்த்த மாத்திரத்துல அதோட ஜாதகத்தையே சொல்லிடறோம். மாம்பழத்தை ருசிக்க மரத்துல கல்லெறியனும்னு அவசியமில்லை கையில காசிருந்தா போதும். தசரதனுக்கு அந்தப்புரத்தில் பத்தாயிரம் மனைவிகளா என்று வாயைப் பிளக்கிறோம். கண்ணகியாக இருப்பதை விட மன்னனுக்கு ஆசை நாயகியாக இருப்பது அவளது பாதுகாப்பு உணர்வை திருப்திப்படுத்தும். பெண்கள் நிரந்தரத்தை தேடுகிறார்கள் நிரந்தர வருமானம், நிரந்தர வேலை, பதவி, அந்தஸ்து, சொந்த வாகனம். தனது அழகு அங்கு முன்னிருத்தப்படுவதை எந்தப் பெண்தான் விரும்ப மாட்டாள். பட்டத்து ராணிக்கு அடுத்த இடம் என்றால் கசக்குமா?

தனக்கு பதினாயிரம் மனைவிகள் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். தேவலோக ரம்பை, ஊர்வசியை விட ஒயிலானவர்கள். காமத்திலிருந்து விடுபட்டவனே ராஜ்யபரிபாலனத்தை நியாயமாக நடத்த முடியும். அந்தக் காமத்தைக் கடக்கவே பதினாயிரம் மனைவிகள் அவனுக்கு. காமத்தை அடக்குவதென்பது வேறு, காமத்தை கடப்பதென்பது வேறு. சோறு தண்ணியில்லாமல் சிங்கத்தை கூண்டில் அடைத்து வைத்துப் பாருங்கள் பார்ப்பவை எல்லாம் அதற்கு இரையாகத்தான் தெரியும். அடக்குபவன் வெளியில் ஸ்ரீராமனாக வேஷம் போடுலாம். மகாத்மாவாக நடிக்கலாம். உள்ளுக்குள் காமப்புலையனாகத்தான் இருப்பான். பிரசாதத்தை விடுத்து மலத்தை நாடி ஓடும் நாயைப் போல.

ஆசையோடு சங்கமிப்பவர்கள் இச்சை தீர்ந்தவுடன் உறவு முடிந்துவிட்டதாக நினைக்கலாம். ஆனால் அப்படியல்ல. எச்சமிடும் காக்கைகள் தன்னால் விருட்சமான மரத்தில் வந்து அமர்ந்து இளைப்பாறுவதில்லையா. அந்த நிலைதான் அர்ஜூனனுக்கு அவனுக்கும் உலுப்பிக்கும் இடையே நிகழ்ந்த உறவால் பிறந்த அரவானைத்தான் பாரதப் போருக்கு களப்பலியாக கொடுக்க தீர்மானித்துள்ளார்கள். சகாதேவன் தனது பண்டித ஞானத்துடன் நாள்குறித்தது மட்டுமில்லாமல் சாமுத்திரிகா லட்சணம் உடைய ஆண்மகனை களப்பலியாக கொடுத்தால் கெளரவர்களை வீழ்த்திவிடலாம் என்ற உக்தியையும் கண்ணனிடம் கூறிவிடுகிறான். இதுநாள் வரை சகாதேவனின் கணக்கு தவறியதே இல்லை.

அப்படிப்பட்டவர்கள் யார் யார். கண்ணனை தருமன் இழக்கமாட்டான். அர்ஜூனனை கண்ணன் இழக்க முன்வரமாட்டான் ஏனெனில் தனது தங்கையைத்தான் அவனுக்கு தாரை வார்த்திருக்கிறான். அரவானை காளிக்கு களப்பலி கொடுக்கலாம்  என்று கண்ணன் தான் முதலில் தீர்மானித்தான். தனது பிறப்புக்கு காரணமானவன் தன்னிடம் வந்து உதவி கேட்கும் போது அரவானால் தட்ட முடியவில்லை. மகன் தந்தைக்காற்றும் உதவி என்று மறுக்காமல் தான் பலியாக ஒத்துக் கொள்கிறான். ஆனால் கண்ணன் தனக்கு இரு வரங்களைத் தரவேண்டும் என்று கேட்கிறான். அதனை வரமாகக் கருத வேண்டியதில்லை. அரவான் தனது கடைசி ஆசை இன்னதென கண்ணனிடம் தெரியப்படுத்துவதாக கொள்ளலாம். மரணத்தை முத்தமிடுபவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவது வழக்கம் தானே. பிரம்மச்சாரியான எனக்கு பெண் சுகம் என்றால் என்னவென்று தெரியாது எனவே இன்று மாலையே தனக்கு கல்யாணம் நடந்து இந்த இரவு தனக்கு முதலிரவாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறான் அரவான்.

ஓரிரவு மட்டுமே வாழ்ந்து பூவும் பொட்டும் இழந்து கைம்பெண்ணாக யார் முன்வருவார்கள். எந்த யுவதியும் சம்மதிப்பதாகத் தெரியவில்லை. அவகாசம் குறைவு தான் மாலைவேளை வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாளை சூர்யோதயத்தில் போர் தொடங்கிவிடும். கண்ணன் ஒரு முடிவு செய்தான். அவதாரம் தனக்கான காரியத்தை சாதித்துக் கொள்ள தன்னையே கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறது. தர்மத்தை நிலைநாட்டுவதற்கு நீதிநெறியை கண்ணன் மீறவே செய்தான். பெண் தன்மை மிகுந்தவர்கள் கடவுட் தன்மைக்கு மிக அருகாமையில் இருப்பார்கள். அதனால் தான் கண்ணனை கோபிகைகள் தங்கள் கூட்டத்தில் அவனும் ஒருவனாக விளையாட அனுமதித்தனர். ஆண் பெண் சேர்க்கையால் பிறந்த நாமனைவரும் சரிபாதி ஆண்தன்மையும் சரிபாதி பெண் தன்மையும் உள்ளவர்கள். இந்தப் பூமி பெண்தன்மை கொண்டிருப்பதால் தான் படைப்பு சாத்திமாயிற்று. இரக்கம், கருணை, தயை என்பதெல்லாம் பெண் தன்மையோடு சம்மந்தப்பட்டது. கண்ணனுடைய பெண் தன்மை மோகினியாக வடிவெடுத்துச் சென்று அரவானை திருமணம் புரிந்து கொள்கிறது. அவனுடைய காம இச்சையை தீர்த்து வைக்கிறது.

காமம் கடவுள் நிலைக்கு நம்மை இட்டுச் செல்லுமாயின் நல்லது தான். தன்னுடைய மரண நேரத்தை அறிந்தவனுக்கு அதனை மறக்க அவனுக்கு பெண் போதை தேவையாய் இருக்கிறது. பெண் நாட்டமே மனிதன் கடவுளைக் காண்பதற்கு தடைக்கல்லாக உள்ளது. தாய்ச்சியைத் தொடும் ஆட்டத்தில் தான் சுவாரஸ்சியமே அடங்கியுள்ளது. போரை ஆரம்பித்து வைத்த கிருஷ்ணனே அதற்கு பிராயச்சித்தம் செய்ய விரும்பினான். தேரை இழுத்து தெருவில் விட்டாயிற்று அதை நிலைக்கு கொண்டுவந்துதானே ஆகவேண்டும். பூமிக்கு அப்பாற்பட்ட காரியங்களைப் பற்றி கண்ணனால் யோசிக்க முடிந்தது. கிரு
ஷ்ணனுக்கு பதினாயிரம் மனைவிகள். அவன் ஒரு ஸ்திரிலோகன் தான். அவன், தான் ஆத்மா என்றும் தான் மனதாலும், உடலாலும் செய்த காரியங்களால் ஆத்மா பாதிக்கப்படாது என்றும் ஆத்மாவை தண்ணீர் நனைக்காது, நெருப்பு எரிக்காது, வாள் வெட்டாது என்றும் எதனாலும் அதன் தெய்விகத் தன்மை குறைந்துவிடாது என அறிந்திருந்தான்.

அரவானை களப்பலி கொடுத்தாயிற்று. கடவுளின் திட்டம் என்ன வென்று மனிதனால் யூகிக்கக் கூட முடியாது. எது ஆரம்பம் எது முடிவென்று அவனுக்குத்தான் தெரியும். தனது மாயாஜால வித்தையையும், சாதுர்யத்தையும் கெளரவர்களை வீழ்த்த உபயோகப்படுத்திக் கொண்டான் கண்ணன்.

கெளரவர்களை வீழ்த்த குறுக்கு வழியைப் பின்பற்றினான் கிருஷ்ணன். பல போர்விதிகளை மீறினான். அவன் அவதாரம் என்பதால் கிருஷ்ணன் செயல்களுக்கெல்லாம் நாம் நியாயம் கற்பிக்கின்றோம். துரியோதனன், பீஷ்மர், துரோணரின் பலகீனங்கள் என்ன என்பதை கண்ணன் முன்கூட்டியே அறிந்திருந்தான். நடுநிலை தவறி பாண்டவர்களின் மூளையாக செயல்பட்டவன் தான் கண்ணன். அனுமக் கொடி பறக்கும் அர்ஜூனனின் தேரை செலுத்தியபடி தன் திட்டப்படி அனைத்தும் ஒழுங்காக நிகழ்கிறதா என கவனித்துக் கொண்டிருந்தான். யாகங்களும், ஹோமங்களும், நியதியும், சடங்குகளும் இன்றும் பரத மண்ணில் வேர்ப்பிடித்திருக்க வியாசரும் ஒரு காரணம். கடைசியில் தான் பெற்ற சாபத்தால் வேடனடிக்க வீழ்ந்தான் கண்ணன். உடலெடுத்தால் விதி பொம்மையாகத்தான் நம்மை ஆட்டுவிக்கும் என்பதற்கு கிருஷ்ணன் நல்ல உதாரணம். இன்றும் குருட்சேத்திர மண்ணில் அரவானின் ரத்தத் துளிகள் படிந்திருப்பதை நீங்கள் காணலாம்.

Tuesday, September 3, 2019

பரசு



ஐந்து அவதாரங்கள் வந்து சென்றுவிட்ட நிலையில் பூமிக்கு பரிபூரணம் தேவைப்பட்டது. பிரம்ம ஞானத்தைக் காப்பாற்ற சத்ரிய தைரியம் தேவையாய் இருந்தது. ஜமத்க்னிக்கும் ரேணுகாதேவிக்கும் ஐந்தாவதாக பிறந்த குழந்தை சத்ரிய வம்சத்தையே வேரறுக்கும் என யாரும் அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. பிராமணவம்ச பரசுராமருக்கு சிறுவயது முதல் ஆயுதங்களின் மீது தீராத மோகம்.

வர்ணாசிரம தர்மத்தை மீறியதால் பல விதங்களில் புறக்கணிக்கப்பட்டவர் பரசுராமர். ரத்தத்தைப் பார்த்து மயங்கிவிழும் சராசரி பிராமணரல்ல அவர். அன்று ரிஷி வம்சத்தவர்கள் தங்கள் மனைவிமார்கள் மனதளவில் கூட கற்புநிலை தவறக்கூடாது என நினைப்பார்கள். வாழ்க்கைக்கு அப்பால் எதையோ தேடும் வைராக்கியவாதிகள் தங்கள் மனைவிமார்களை ஒரு பொம்மையாகத்தான் கருதினார்கள். எதிரெதிர் துருவங்கள் தங்களை ஈர்த்துக் கொள்வது இயல்புதான் என்பதை உணரதாவர்கள்.

காலவெள்ளம் தறிகெட்டு ஓடிக்கொண்டுள்ளது. எதைத்தான் கடைசியில் நிலைநிறுத்தப் போகிறது என்பதை யாராலும் அறிய முடியவில்லை. ஏற்கனவே விதிக்கப்பட்டதுதான் நடந்து கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. எந்த சக்தி மனிதர்களை பொம்மையாக ஆட்டுவிக்கிறது என்று தெரியவில்லை.

எந்த நம்பிக்கையில் மனிதஇனம் விடியும் பொழுதுகளை எதிர்கொள்கிறது. வாழ்க்கை ஒருவருக்கு வரமாகவும் ஒருவருக்கு சாபமாகவும் அமைந்துவிடுவது ஏன்? மனித மனம் இரும்பாக இருப்பதினால் தான் கோயிலிலுள்ள தெய்வங்கள் எல்லாம் கற்சிலையாகத்தான் காட்சியளிக்கின்றன.

இயற்கை மனிதனைப் படைத்து அவன் வழியே இந்த உலகை என்ன செய்கிறது என்று தெரியவில்லை. மனித இனம் தோன்ற வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றும் புரியவில்லை. வேதங்கள் ஆன்மாவைப் பற்றி பேசினாலும் மற்ற மதங்களின் வேதங்கள் இந்த உலகினை ஒரு சிறைச்சாலை என்றும், தண்டனை நிறைவேற்றப்படும் இடம் என்றும் நிரூபிக்கின்றன. புத்தர், இயேசு போன்றவர்கள் தப்பிக்கும் வழியைத் தேடியவர்கள் தான். அப்போதைய சமூகம் அவர்களை பைத்தியம் என முத்திரைக் குத்தியது.

சாதாரணமாக நம்மிடையே வாழ்ந்து போனவர்கள் எப்படி தெய்வமானார்கள். மதங்களின் முதுகெலும்பாக அதிசயிக்கத்தக்க மனிதரின் அற்புதங்கள் தான் திகழ்கின்றன. ஞானமடைதல் என்பது நாம் செல்ல வேண்டிய பாதையை தெரிந்து கொள்ளும் ஒரு நிகழ்வா? ஞானமடைந்தவர்களுக்கும் முக்தியின் மேல் நாட்டம் இருக்குமா? ஆமாம் ஜமதக்னி ஞானம் பெற்றார் முக்தியின் மேல் இருக்கும் நாட்டமே அவரது வாழ்க்கையின் நோக்கமாக இருந்தது.

ஜெபம், தியானம், பூஜை மூலம் முக்தியை அடைந்துவிட முடியுமா? உடலை படகாகக் கொண்டு வாழ்க்கைக் கடலை கடந்துவிட முடியுமா? ஞானத்தை கூர் தீட்டுவதன் மூலம் கடவுளுக்கும் நமக்குமான திரைச்சீலையை கிழித்துவிட முடியுமா? மனிதனாகப் பிறந்து தெய்வமாகலாம் என்று பரத கண்டத்தில் நிறைய பேர் நிரூபித்துச் சென்றிருக்கிறார்கள் இல்லையா? கைவிடப்பட்ட மனிதன் இறுதியாக கடவுளின் அறைக் கதவைத் தானே தட்டிப் பார்ப்பான். கர்மவினைகள் மீண்டும் பிறக்க வைக்கும் என்பதால் தான் முனிவர்கள் காட்டின் நடுவே குடில்களை அமைத்துக் கொண்டு கடவுள் காரியங்களில் ஈடுபடுகிறார்களா? மீண்டும் பிறக்க எந்த மனிதனும் விரும்புவதில்லையே எதனால்?

ஞான அக்னியின் மூலம் கடவுள் இருக்கும் பாதையை அறியத்தானா தவம் இருப்பது. ராமனாக இருக்கும் ஒருவன் தனது மனைவி சீதையாக இருக்க வேண்டும் என்ற விரும்புவது நியாயந்தானே! இதோ காலம் தாயத்தை உருட்டுகிறது, விழுகிறது என்ன என்பதை கடவுள் மட்டுமே அறிவார். தவம் செய்பவர்கள் அனைவருக்கும் சிவனைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்துவிடுமா என்ன? காட்சி தந்த சிவன் பரசு என்ற அஸ்திரத்தை தந்தபடியால் தான் பெயருக்கு முன்பாக பரசு என்று ஒட்டிக் கொண்டது.

கற்புக்கரசி கோபத்துடன் பார்த்தால் பச்சை மரம்கூட பற்றி எரியுமாம். ரேணுகாதேவியின் பதிவிரதைத்தன்மை அப்படிப்பட்டது. சுடப்படாத களிமண் பானையில் நீரெடுத்து வருவதே அவளது பதிவிரதைத் தன்மைக்கு அடையாளம். மனதால் கூட அந்நிய ஆடவனைத் தீண்டாததால் அவளால் இந்த அதிசயத்தை நடத்திக் காட்ட முடிந்தது. இது ஆண்களுடைய உலகமாக இருக்கலாம், சகல காரியத்திற்கும் காரணமாக இருப்பவர்கள் ஏனோ பெண்கள் தான். சக்தி சிவம் காலத்திலிருந்து இதுதான் கதை. சக்கரவர்த்திகள் பலரும் பெண்கள் விஷயத்தில் பலவீனமாகத்தான் இருந்தார்கள். பெண்களை தங்களின் உடைமையாக்கிக் கொள்ள நினைத்தவர்களின் துரோகத்தின் வரலாறு இன்னும் நீண்டு கொண்டே உள்ளது. அதற்கு கடவுளின் அகதரிசனத்தின் நிழல் பெண்கள் மூலம் கிடைத்தது ஒரு காரணமாய் இருக்கலாம். ஆனால் பெண்கள் கடவுளைக் காட்ட வல்லவர்கள் அல்ல. இயற்கை ஆண்களுக்கு பெண்களின் மீது கவர்ச்சியை உண்டாக்கி அவனால் கடைசிவரை கடவுளை கண்டடைய முடியாமல் செய்துவிடுகிறது. இயற்கை பெண்களைப் பொத்திப் பாதுகாக்கிறது. ஆண்களை உன் வல்லமையை நிரூபித்து வேண்டியதைப் பெற்றுக் கொள் என விதி வகுக்கிறது. அவள் சீதையானாலும் சர்வலட்சணம் பொருந்திய ஆண் மகனைப் பார்க்கும் பொழுது அவள் மனம் சஞ்சலமடையவே செய்யும்.

தாயானாலும், தாரமானாலும் சிவகாமியின் சிந்தனை சிவனைப் பற்றியதே. எது கிடைக்கவில்லையோ அதன் மீது ஏற்படும் தீவிர நாட்டம் ஒரு பிரளயத்தையே உருவாக்கும். மறுக்கப்படும் விஷயத்தை நோக்கி மனம் பேயாய் அலையும். சந்தர்ப்பம் வாய்த்த பின்னும் சிவனே என்று இருக்க யாரும் இங்கே உத்தமர்கள் இல்லை. சிங்கத்தின் கண்ணுக்கு மான் ஒரு மாமிசமாகத்தான் தெரியும். மனிதர்கள் வாழ்க்கைக்கு அப்பால் உள்ளதை வெல்ல நினைக்கிறார்கள். இறைவன் மனிதனின் பாதையை திசை திருப்பவே பெண்களைப் பயன்படுத்துகிறான். அவதாரங்கள் கூட பெண்ணாசையை வெல்ல முடியாமைக்கு என்ன காரணமாக இருக்க முடியும்? எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் வானரசை உண்டாக்க நினைத்தவர்களின் பேச்சுக்களை மக்களால் புரிந்து கொள்ள முடியாது. பெண் தந்திரமானவள் ஆண்மகனை வளர்க்கும் போதே தன்னை அவன் வெல்ல முடியாதபடிக்கு செய்துவிடுகிறாள். கடவுள் தன் பிரதிநிதியான பெண்கள் மூலம் தான் நினைத்ததை சாதித்துக் கொள்கிறான்.

விடிகாலையில் கந்தர்வலோகத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் ஆற்றங்கரையில் நின்று கொண்டு இயற்கை எழிலை ரசித்துக் கொண்டிருக்கிறான். அது ஒளிரூப உடல் என்பதை அறியாத ரேணுகாதேவி இச்சைக்கு ஆற்பட்டு சிலையாக நிற்கிறாள். அந்த சமயத்தில் சீதையானாலும் சஞ்சலப்பட்டு நிற்கவே செய்திருப்பாள். தேவவம்சம் அரக்க வம்சத்தின் மீதோ அரக்க வம்சம் தேவ வம்சத்தின் மீதோ ஈடுபாடு காட்டுவது புதிதல்ல. அதனால் தான் ராமனே சீதையை தீக்குளிக்கச் சொன்னான். ஆனந்தப் பரவசத்தில் ரேணுகாதேவி தன்னையே மறந்துவிட்டாள். அவள் தன்னிலை உணர்ந்த போது கந்தர்வன் மாயமாய் மறைந்திருந்தான். ஆற்றில் இறங்கி தண்ணீர் எடுக்க முயலும்போது கையிலுள்ள களிமண் பானை சேறாய் உருக்குலைந்து தண்ணீரில் கரைந்தது. ரேணுகாதேவியால் வெறும் கையுடன் தான் குடிலுக்குத் திரும்ப முடிந்தது.

நிலைமையை உணர்ந்த ஜமதக்னி கோபம் கொள்கிறார். இதற்கு அவர் ரேணுகாதேவி தன்னைக் கொன்று இருந்தால் கூட அமைதியாகத்தான் இருந்திருப்பார். துரோகம் மரணத்தைவிடக் கொடியது. யூதாஸ் கடவுளின் பிரதிநிதி என இயேசு அறியாமலா இருந்திருப்பார். புனிதத்தை இழந்துவிட்டவளுக்கு இனி வாழ அருகதை இல்லை என்றே ஜமதக்னி முடிவுக்கு வருகிறார். தன் தாயென்பதால் நான்கு சகோதரர்களும் அவளை கொலை புரிய மறுத்துவிட பரசுராமரோ தந்தையின் பேச்சைக் கேட்க முன்வருகிறார். சிவன் தந்த பரசு என்ற அஸ்திரத்தை முதன்முறையாக பரசுராமர் இங்கு தான் பயன்படுத்துகிறார். என்றோ எழுதப்பட்ட விதியின் நூல் கொண்டு சிவன் இன்றும் ஆட்டுவிக்கிறான்.

Wednesday, June 12, 2019

புத்ரன்


தூது சென்ற கண்ணனால் கெளரவர்களை சமதானம் செய்ய முடியவில்லை. இனி போர் தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு வருகிறான். சதுரங்க ஆட்டத்தில் முதல் காயை கண்ணனே நகர்த்துகிறான். கெளரவர்களின் படைத் தலைவனான கர்ணனிடம் பாண்டவர்களை ஒழித்துவிடும் உக்கிரம் இருப்பதை கண்ணன் அறிந்திருந்தான். வரும் வழியில் அங்க தேச அரசனான கர்ணனிடம் நீ சூதனல்ல சத்ரியன் உன் தாய் குந்தி. நீ பாண்டவர்கள் ஐவரில் மூத்தவன் என்ற உண்மையை தெரியப்படுத்திவிட்டுத்தான் குந்தியிடம் வந்து விவரத்தை தெரிவித்தான்.

குந்தி குந்திபோஜனால் வளர்க்கப்பட்டவள் பிராமண சேவைக்காக துர்வாசர் அளித்த வரத்தை தவறாகப் பயன்படுத்தி சூரியனால் முறைதவறி விவாகத்துக்கு முன்னரே தாயானவள். அந்தச் செயலுக்கான பலன்கள் அவளை நிழல் போல பின்தொடர்ந்து வந்துள்ளது. இந்த உலகில் வினைப்பயன் தானே பிறப்பு இறப்பை நிர்ணயிக்கிறது. குந்தியே மறந்துவிட்ட ஒன்று எப்போதோ அவள் எச்சமிட்டது இப்போது விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.

குந்தியை பகடைக்காயாக உருட்ட கண்ணன் முடிவெடுத்ததுவிட்டான். அவனுக்குத் தேவை பாண்டவர்களின் வெற்றி. சுயம்வரத்தில் சூதனென்று திரெளபதி நிராகரித்த போது முன்வந்து வெளிப்படுத்தாத கண்ணன் தனது எண்ணம் ஈடேறும் பொருட்டு கடைசி ஆயுதமாக இந்த அஸ்திரத்தை உபயோகிக்கிறான்.

ராஜ்யத்தை இழந்தவர்களுக்கு ராஜ்யத்தை அடைய வேண்டுமென்ற வெறி இருக்கும். பாண்டவர்களிடம் அந்த வன்மத்தை தீயூட்டி வளர்த்தவள் திரெளபதி. திரெளபதி போர் நிகழ்வதற்கு காரணமாகவும், குந்தி போரின் முடிவுக்கு காரணமாகவும் அமைந்து விடுகிறார்கள். ஆவதும் அழிவதும் பெண்ணாலே என்ற சொற்றொடருக்கு இதுவும் காரணமாக அமையக்கூடும்.

பாண்டுவைக் கைப்பிடித்து பட்டத்து ராணியாக ஓர்ஆண்டு மட்டுமே குந்தியால் இருக்க  முடிந்தது. பாண்டு இறந்தவுடன் மாத்ரி உடன்கட்டை ஏற அவளது இரு புதல்வர்களையும் தன் மகன்களாகவே வளர்த்து வந்தாள் குந்தி. பாண்டவர்களிடம் எதைக் கொண்டும் பிரிவு வந்துவிடக் கூடாதென்று உறுதியோடு இருந்தாள். அர்ஜூனன் வில்வித்தைக் காண்பித்து வென்று வந்த பரிசுப் பொருளான திரெளபதியை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொன்னதற்கும் இதுதான் காரணம்.

ஆளாகிவிட்ட பாண்டவர்களுக்கு அவர்களின் பங்கை அளிக்க திருதுராஷ்டிரன் முன்வர வேண்டுமென குந்தி விரும்பினாள். சூதில் திரெளபதியை பணயம் வைத்து தோற்றதற்காக பீமன் வெகுண்டெழுந்த போது கூட குந்தி தான் அவனைச் சமாதானப்படுத்தினாள். திரெளபதியை துகிலுரித்தபோது ஆண்மையற்றவர்களை பிள்ளைகளாகப் பெற்றுவிட்டோமே என அவள் வயிற்றில் அறைந்து கொண்டாள். அந்த சம்பவத்துக்கு பிறகு ஐம்புலன்களை இயக்கும் மனமாக ஐந்து பேரையும் திரெளபதிதான் இயக்கி வந்தாள்.

இப்போது அவளுக்கு கர்ணன் தன் மகன் என்பதை விட தான் பாண்வர்களின் ராஜமாதா என்பதே முக்கியமாக இருந்தது. ராஜ்யம் பாண்டவர்களுக்கு கிடைக்க தான் கர்ணனிடம் மடிப்பிச்சைக் கேட்க தயாராக இருப்பதாக கண்ணனிடம் அவள் தெரிவித்தாள்.

போருக்கு முதல் நாள் மாலை கங்கைக் கரையில் உலவிக் கொண்டிருந்த கர்ணனை தயக்கத்துடன் சந்திக்கச் சென்றாள் குந்தி.

“என் மகனே எப்படி இருக்கிறாய்”?

“யாரம்மா நீ என்னை உரிமையுடன் மகனே என்று அழைக்கிறாய்”?

“குழந்தாய்! உன்னை இந்த பாழும் நரகத்தில் தள்ளி விட்டவள் நான் தான்”!

“ஓ, உங்களது குரல் என் நெஞ்சைப் பிளக்கிறதே. பூர்வஜென்ம தொடர்போ! யார் நீங்கள் நான் தேரோட்டி அதிவிரதன் மகன் அங்கதேச அரசன்”.

“நான் துர்பாக்கியவதி குந்தி தேவி”.

“ஓ, ராஜமாதாவா!
துரோணாச்சாரியார் சத்ரியனுக்கு மட்டும் தான் அர்ஜூனனை எதிர்த்து நிற்கும் உரிமை உள்ளது என்ற போது அவையிலிருந்த நீங்கள் உங்கள் திருவாயைத் திறந்து என் மகனே என்று அழைத்திருக்கலாமே. துரியோதனன் எனக்கு மகுடம் சூட்டி அங்கதேச அரசையே எனக்கு அளிக்க முன்வந்த போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். இப்போது நான் கெளரவர்களின் படைத்தலைவன் என்பதால் தானே என்னைச் சந்திக்க வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்ன வேண்டும். துரியோதனனுக்கு என்னால் துரோகம் இழைக்க முடியாது. இந்த செல்லாக்காசுக்கு மதிப்பளித்தவனின் முதுகில் குத்துவது நியாயமாகாது”.

“உன்னை அழைத்துச் செல்லவே வந்திருக்கிறேன்”!

“என் வேதனை மிகுந்த நெஞ்சம் உங்கள் உள்ளத்தில் இப்போதுதான் இரக்கத்தைச் சுரக்கச் செய்ததா”.

“நீ என் மகன். பாண்டவர்கள் ஐவருள் மூத்தவன்”.

“ஆற்றில் மிதந்த எனக்கு அடைக்கலம் அளித்தவர்களை நான்  என்ன செய்வது. சூதனுக்கு ராஜ்யமளித்து உணவு மேஜையில் கெளரவம் பார்க்காது பக்கத்தில் அமரவைத்து உணவு உண்ண இடமளித்து  அழகு பார்க்கும் துரியோதனனை என்ன செய்வது. சுயம்வரத்தில் சூதனுக்கு என்னால் மணமுடிக்க முடியாது என்று ஏசிய திரெளபதி உண்டாக்கிய காயம் அவ்வளவு சீக்கிரத்தில் ஆறிவிடுமா என்ன”?

“வா உனக்கு அங்கீகாரம் அளிக்கிறேன். அஸ்தினாபுரம் உன்னுடையது வா வந்து மகுடம் சூடிக் கொள்”.

“நான் உயிர் என்றால் துரியோதனன் ஆன்மா. என்றாவது உயிர் ஆன்மாவுக்கு துரோகம் செய்யுமா அம்மா. எனக்கு தாய்ப் பாசம் என்னவென்று தெரியாது. நான் சூதன் என்பதால் என் மனைவி படுக்கறையில் கூட அவள் பக்கத்தில் முப்பது வருடங்களாக இடமளிக்கவில்லை தெரியுமா? ராஜ்யத்துக்காக நான் உங்கள் அழைப்பை ஏற்று வருவேனாயின் என்னைவிட ஈனப்பிறவி யாரும் இவ்வுலகில் இருக்க முடியாது. கனவில் கூட என்னால் துரியோதனனுக்கு துரோகம் இழைக்க முடியாது”.

“நான் செய்த தவறுக்கு, நான் தானே பிராயச்சித்தம் தேட வேண்டும். நீ அரசனாக அரியணையை அலங்கரிப்பதை நான் காண வேண்டாமா? அஸ்தினாபுரம் உனதல்லவா”.

“ஆ! அஸ்தினாபுரம் ராஜமகுடம். துரியோதனனுக்கு துரோகம் செய்துவிட்டு, செய்நன்றி மறந்துவிட்டு இதுநாள் வரை பகைமை பாராட்டியவர்களோடு சிநேகிதம் கொள்வது முடியாத காரியம்”.

“எனக்காக இறங்கி வரக்கூடாதா மகனே. உனக்கு சாமரம் வீச உனது ஐந்து சகோதரர்களும் தயாராய் இருக்கிறார்கள்”.

“துரியோதனனுக்கு என்னால் நம்பிக்கை துரோகம் செய்ய முடியாது அம்மா. வேறு ஏதேனும் வேறு கேளம்மா. கொடுத்துச் சிவந்த கரங்கள் அதற்காக காத்திருக்கிறது”.

“நாளை போர் தொடங்கப் போகிறதல்லவா. நீ எனக்கு இரண்டு வரங்கள் தந்தாக வேண்டும், தருவாயா”?

“அம்மா தூக்கி எறிந்தவனிடம் கையேந்த நேர்கிறதே என வருந்துகிறாயா? மாயக் கவர்ச்சிகளுக்கு ஆட்படாத இரும்பு இதயமம்மா என்னுடையது. உயிர் மட்டும் துரியோதனனுக்கு வேறு என்ன வேண்டுமானாலும் கேளும் தருகிறேன்”.

“எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது. பாண்டவர்களைக் காக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை கர்ணா! இந்த அன்னையின் கதகதப்பு இன்னும் அவர்களுக்கு தேவைப்படுகிறது கர்ணா. என்னில் ஒருபாதியாக நீ பத்து மாதம் இருந்தாயல்லவா. உனது சகோதரர்களுக்கென்று நீ செய்யப்போவது இது மட்டுந்தான் ஞாபகமிருக்கட்டும் கர்ணா”.

“கண்ணன் சொல்லிக் கொடுத்தானா வரம் கேட்கச் சொல்லி. பாண்டவர்களுக்காக அந்த வேலையும் பார்க்கின்றானா நீ கேளும் அம்மையே”?

“முதலாவது நீ நாகாஸ்திரத்தை அர்ஜூனன் மீது ஒரு முறை மட்டும் தான் பிரயோகிக்க வேண்டும். இரண்டாவது மற்ற நான்கு சகோதரர்களுக்கும் உன்னால் தீங்கு நேரக்கூடாது”.

பத்து மாதம் என்னைச் சுமந்ததற்காக நான் இதைச் செய்கிறேன். என் வீரத்தை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன். போரில் அவர்கள் வென்ற பிறகு தெரிந்து கொள்ளட்டும் நான் அவர்களின் மூத்த சகோதரன் என்று. எந்த தர்ம கிரந்தமும் நியாயத்தை பார்க்காது. செய்நன்றி தான் மிக முக்கியம். இறக்கும் வரை துரியோதனன் நண்பனாகவே இறப்பேன். கண்ணனிடம் போய்ச் சொல்லுங்கள் இந்த முறையும் அவன் தந்திரமே வெற்றி பெற்றதென்று. நான் போட்ட பிச்சை தான் ராஜ்யம் என்று. மரணத்தை விழைவிப்பவர்களே வாருங்கள். போரில் வீர மறவனாக உயிர்விடும் பாக்கியத்தை எனக்குத் தாருங்கள். சூதனாக வாழ்ந்து சத்ரியனாக சாவது இவ்வுலகில் நான் ஒருவனாக மட்டுந்தான் இருக்கும்.

மேடை


சேதுப்பிள்ளை சென்னைவாசி. நகரத்து டாம்பீகமெல்லாம் கேட்காமலேயே அவரை வந்து ஒட்டிக்கொண்டன. வள்ளி பவனில் முறுவல் தோசையை சாப்பிடாமல் ஒருநாள் முடியாது அவருக்கு. இந்த சாம்பார் ருசிக்காக ஹோட்டல் நடத்தரவனுக்கு கோயில் கட்டலாம் என்ற ரகம் அவர். காபியையும் சாப்பிட்டு கும்பகர்ணன் மாதிரி ஏப்பம் விட்டால்தான் பிறந்ததற்கான பலனை அடைந்துவிட்டதாய் அர்த்தம் அவருக்கு. கைகழுவும் போது எதேச்சையாக கண்ணாடியைப் பார்த்தார். பக்கத்தில் கைகழுவும் உருவத்தை எங்கேயோ பாத்ததாகப்பட. அட நம்ம மாதவன் அவனே தான் கல்லூரி சிநேகிதம் பார்த்து எத்தனை வருஷமாச்சி என சிலாகித்தபடி, சற்று சத்தமாக “மாதவா என்னைத் தெரியுதா? என்ன அடையாளம் தெரியலையா செம்போடை கல்லூரியில ஒண்ணா படிச்சோம்ல இன்னுமா ஞாபகம் வரலை.

மாதவன் நெற்றிப்பொட்டைத் தட்டியபடி “ஓ வர்றது வர்றது இப்பத்தான் ஞாபகத்துக்கு வர்றது என்றார். “இப்பத்தான் கை நனைக்கிறியா எனக்கு ஆச்சி என்ன பிரமாதம் இன்னொரு ரவா தோசை சாப்பிட்டா போச்சி என்ன சொல்ற என்றார் சேதுப்பிள்ளை. “இந்த துடுக்குத்தனம் தான் உங்கிட்ட எனக்குப் பிடிச்சதே என்றார் மாதவன்.

“என்ன ஒரு பிரமாதமான நாள் ரவா தோசை, பேசுறத்துக்கு நீ, கூடவே ஒரு காபி இதான் சுவர்க்கம்ங்கிறது என்றார் சேதுப்பிள்ளை. “என்ன பண்ற, குடும்பம் எங்க இருக்குது என்று விசாரித்தார் மாதவன். “அப்பா  பண்ண புண்ணியம் வீண்போகலை சிவப்பதவி கையெழுத்து போடுறத்துக்கே சம்பளம் தர்றாண்ணா பார்த்துக்கயேன். மூத்தவளுக்கு கல்யாணம் ஆயிடிச்சி மாப்பிள்ளை பெங்களூர்ல எல்&டில வேலை பார்க்கிறார். இளையவன் ஆர்மில ஆபிஸராய் இருக்கான் பிக்கல் பிடுங்கல் இல்லாத லைஃப் என்றார் சேதுப்பிள்ளை. “அப்ப அனுபவி ராஜா அனுபவி தானா என்று கிண்டலடித்தார் மாதவன்.

“என் ஜாதகத்தை விடு கதைக்கு வருவோம். என்ன  விஷயமா சென்னைக்கு வந்த, யாரெல்லாம் வந்திருக்கா என விசாரித்தார் சேதுப்பிள்ளை. மாதவன் சற்று நிதானித்து “அப்பாவோட ரைஸ்மில்லைத்தான் நான் பார்த்துகிட்டு வர்றேன். ஒரு மகன் இருக்கான் அவனை என்கூடதான் வச்சிருக்கேன் என்றார். “சரி மாதவா அந்த பூங்கொடியைத்தானே கல்யாணம் பண்ணிகிட்ட என்றார் சேதுப்பிள்ளை. எங்கேயோ பார்த்தபடி “இல்ல அதுவிஷயமாத்தான் சென்னைக்கு அடிக்கடி வந்து போகும்படி ஆச்சி என்றார் மாதவன்.

“அப்ப பூங்கொடி… என்று கொக்கியைப் போட்டார் சேதுப்பிள்ளை. செருமியபடி தண்ணீர் அருந்திவிட்டு தனது பேச்சை ஆரம்பித்தார் மாதவன். “அது ஒரு பெரிய கதை. எனக்காக தனக்கு பார்த்த வரன்களையெல்லாம் தட்டிக் கழிச்சிகிட்டே வந்தா பூங்கொடி. சீமையிலேந்துதான் வரன் அமையுங்கிறதுல அவ அப்பா உறுதியாய் இருந்தார். எனக்கும் அப்பப்ப தகவல் வரும் வீட்ல ரொம்ப அழுத்தம் கொடுக்கறாங்கண்ணு.

சுயம்வரத்துல கலந்துக்கணும்ணா இளவரசனா இருந்தாகணும் இல்ல. ஆனா மனசுக்கு இதெல்லாம் தெரியுதா. அந்த வயசுல படிச்சி படிச்சி சொன்னாலும் விளங்குதா என்ற? மின்மினிப்பூச்சியால சூரியனுக்கு வழிகாட்ட முடியுமா. விட்டில் பூச்சியாத்தான் போய் சிக்கிக்கிறோம். அதுக்கு வயசும் ஒரு காரணம். காதல்ங்கிற தீபம் எரிய ஆரம்பிச்சதுக்கப்புறம் மனுசனுக்கு சோறு, தண்ணி கூட மறந்து போயிடுறது. நினைப்பும் அவளைப் பத்தி கனவும் அவளைப் பத்தியின்னு பித்து பிடிச்ச மாதியில்ல இருக்கு.

இந்த சினிமா இருக்கே அது கற்பனைன்னு தோணுதா நமக்கு. பாட்டைக் கேட்கும் போதெல்லாம் மெழுகா உருகுதுல மனம். உனக்கு நான் தான் எனக்கு நீ தான்ங்கிறது பசுமரத்தாணி போலல்ல மனசுலர பதிஞ்சிடுது. சினிமாவுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் அதிகம்னு பாழும் மனசு கேட்கிறதா என்ன. மனக்கோயிலுக்கு சாமியை எழுந்தருளச் சொன்னா எப்படி? கண்ணுக்கு அழகா இருக்கறதுனால மட்டுந்தான் ஒரு பொண்ணுகிட்ட மனசை பறிகொடுத்துர்றோம்மா என்ன? எந்த செடி மரமாகும்னும், எந்த காதல் ஜெயிக்கும்னும் யாருக்குத் தெரியும்.

கரைப்பார் கரைச்சா  கல்லும் கரையும்னு எங்க காதலை தண்ணில போட்ட கோலமாதிரி ஆக்கப் பார்த்தாங்க அவ ஊட்ல. அவன்ட்ட என்னத்த கண்ட ஆத்தான்னு ஒப்பாரி வைக்காத குறைதான். இவனப் பாரு தாயி வேப்பம்பட்டி மிராசுதார் பையம் சொந்தமா வீடு இருக்கும, கார் இருக்கு, கூப்பிட்ட குரலுக்கு சேவகம் பண்ண ஆளுங்க இருக்காங்க ராணி மாதிரி இருக்கலாம் என்ன தாயி சொல்ற, இந்த மாதிரி பஜனை தான் அவ ஊட்ல எந்நேரமும்.

அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள்கிறது இராமாயணத்துல வேணாம் ஒத்து வரலாம், தினசரி வாழ்க்கையில நடக்கக்கூடிய காரியமா இது. குலம், கோத்ரம்னு எத்தனை உப்புக்கு பேராத சமாச்சாரங்கள் இந்த காதலுக்குத் தடையா இருக்கு. சின்னஞ்சிறுசுக ஏதோ ஆசைப்படுதுக வாழ்ந்துட்டுப் போகட்டும்ன்னு உடுறாங்களா என்ன. குடும்ப கெளரவமாம், மனசை ஒருத்தன்ட்டயும் உடம்பை ஒருத்தன்ட்டயும் கொடுக்கறத்துக்கு பேரு கெளரவமா. என்ன காசு பணம் கடைசில வரட்டியைப் போட்டுத்தானே எல்லோரையும் எரிக்கப் போறாங்க.

பணக்கார இடம் வளைச்சிப் போட பாக்குறான்னு கடைசியா எங்க அப்பாகிட்ட வந்து நின்னுது இந்த விஷயம். எங்க அப்பாவுக்கு எம்மேல வைச்ச நம்பிக்கையே போச்சி. படிக்க அனுப்பின இடத்துல ஏன்டா உனக்கு இந்த வீண் வேலைன்னு கேட்க எனக்கு தர்மசங்கடமா ஆயிடிச்சி. நம்ப தராதரம் என்னன்ணு உனக்கு புரியவேணாமாடான்னு என் அம்மா என்னை வார்த்தையாலயே கொள்ளி வச்சிடுச்சி. நான் கிழிச்சி கோட்டை மீற மாட்டன்னு இப்பயும் நான் நம்புறேன்டான்னு அப்பா மட்டும் சொல்லிகிட்டே இருந்தாரு.

எந்தப் பொறியில எங்க அப்பாவை சிக்க வைக்கலாம்னு பூங்கொடி அப்பா தரப்புல அலைஞ்சிகிட்டே இருந்தாங்க. மில் ஓனர்கள் சங்கத்திலேர்ந்து பணத்தை எங்க அப்பா கையாடிட்டதா பொய்ப் புகார் கொடுக்க வைச்சி அவரை இரண்டு நாள் லாக்கப்ல வைச்சி அடிச்சி விசாரிச்சியிருக்காங்க. அவமானம் தாங்காம எங்க அப்பா தற்கொலை பண்ற அளவுக்கு விஷயம் எல்லை மீறி போயிடிச்சி. சாகறத்துக்கு ஒருநாள்முந்தி சொந்தக்கார பொண்ணைக் காண்பிச்சி தாலிய கட்டுன்னாரு, நான் வேற என்ன பண்றது. மனசை கல்லாக்கிகிட்டு தாலிய கட்டுனேன்.

எனக்கு ஆனதுகப்புறம் அவளை சும்மா விடுவாங்களா. அவளுக்கும் பண்ணி வைச்சாங்க. காசு பணம் உள்ளவனுங்க பொண்ணை பொருளாகத்தான் பார்ப்பாங்க போலிருக்கு. சீர் செனத்தி மட்டுமில்லாம எங்க சங்கதி வெளியே தெரியக்கூடாதுன்னு அம்புட்டு சொத்தையும் மாப்பிள்ளை பேருக்கு  எழுதி வைச்சாரு பூங்கொடி அப்பா. ஆண்டவன் போடுறது எப்பவுமே தப்புக் கணக்காத்தான் இருக்கு. ஆடி அடங்குற வரைக்கும் மனுசன் என்ன ஆட்டம் போடுறான். கடைசியா கோணித் துணியையும் உருவிக்கிட்டுத் தானே எரிய உடுறான் வெட்டியான். கொலை செய்யக் கூட தயங்காதவன் தான் ஊர்ல சொத்து பத்தோட இருக்கான். பழி பாவத்துக்கு அஞ்சுறவன் இன்னும் பிச்சையெடுக்கத்தான் வேண்டியிருக்கு. இந்த உலகத்துல பணத்தால எதையும் விலைக்கு வாங்கிடலாம் என்பது தான உண்மை நிலைமை.

இந்த வயசுலயும் வாழ்க்கைனா என்னண்ணு புரிஞ்சும் புரியாத மாதிரிதான் இருக்கு. ஒருத்தன் பிச்சையெடுக்கறதும் ஒருத்தன் பேரரசனா இருக்கறதும் எதனால. நான் வக்கத்துப்  போனதுனால தானே அவ எனக்கு வாக்கப்படலை. யாருக்கு யாரு முடிச்சு போடுறதுன்னு இறைவன் தான் முடிவு பண்றாண்ணு நம்ப முடியுதா? ஜனனத்துக்கும் மரணத்துக்கும் இடையே ஜீவன் போராட்டம் தான் நடத்த வேண்டியிருக்கு. அவள இழந்ததுக்கு அப்புறம் வாழ்க்கையில எனக்கு பிடிப்பு இல்லாம போச்சுது. கப்பல் கவுந்திருந்தா கூட அந்தளவுக்கு துக்கம் ஏற்பட்டிருக்காது. என்னை வேரோட பேத்து வேற இடத்தில் வலுக்கட்டாயமா வச்சது மாதிரி ஆகிடிச்சி. சினிமா உட்பட எல்லாக் கண்றாவியைும் என் வாழ்க்கையிலிருந்து தூர எறிஞ்சிட்டேன்னா பாத்துக்க. இந்த வியூகத்தை யாரால உடைக்க முடியும். இங்கிருந்து வெளியேறும் வழி யாருக்குத் தெரியும். கங்கையில முழுகுனா பண்ணுண பாவம் தொலைஞ்சிடுமா என்ன? பிறப்பை வச்சி உயர்வு தாழ்வுன்னு பாகுபாடு காட்டுற கருமாந்திரம் எப்பத்தான் முடியுமோ. உபதேசம் பண்றதுனால திருந்துற கூட்டம் இல்ல இது. எல்லாம் விதின்னு நினைச்சுக்கிறத தவிர நம்மால் வேற என்ன பண்ண முடியும்.

புகுந்த வீட்டில பிரமை புடிச்ச மாதிரி இருந்திருக்கா. என்னத்த மனசுல வச்சிகிட்டு இருந்தாலோ என்னவோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். பூங்கொடியை டாக்டர்கிட்ட கொண்டு போய் காட்டியிருக்காங்க. அவர் கைமீறிப் போச்சுது கீழ்பாக்கத்துக்கு கொண்டு போகச் சொல்லி இருக்காரு. அவள அங்க போய் உட்டுட்டு வந்தவுணுங்க தான் திரும்பிப் என்ன ஏதுன்னு யாரும் போய் பாக்கலை. விஷயம் என் காதுக்கு வந்துச்சி நான் துடிதுடிச்சி போயிட்டேன். அப்பயே என் உயிர் போயிடிச்சி, ஏதோ நடைபிணமாத்தான் இப்ப அலைஞ்சிகிட்டு இருக்கேன்.

நான் தான் காதலிச்ச பாவத்துக்காக மாசம் ஒரு தடவை வந்து ஹார்லிக்ஸ், பூ, பழம், புடவை எடுத்துட்டு வந்துப் பாத்துட்டுப் போவேன். என்ன சாமியோ என்ன பூதமோ அவ வாழ்க்கை சீரழிஞ்சதுக்கு நான்தானே காரணம். அவ கனவு சிதைஞ்சி போய் நான்கு சுவத்துக்குள்ள நிர்கதியாய் நிற்கிறாளே இத  நான் யாருகிட்ட போய்ச் சொல்லி அழுவேன். ஒவ்வொரு மாசமும் வரும்போது என்னைய அடையாளம் தெரிஞ்சிக்கிறாளா அழைச்சிட்டு போயிடலாமான்னு பார்ப்பேன். கோயில்ல கடவுளே இல்ல இருக்கிறது வெறும் கல்லுதான். அத கும்புடற மனுசன் மனசும் கல்லுதான். விதிக்கிறவனுக்கு கொஞ்சம் கூட மனசுல ஈரமே இருக்காதா. பூங்கொடியோட நினைவு நான் இறக்கிற வரைக்கும் ஏதோவொரு மூலைல இருந்துகிட்டுதான் இருக்கும் என மாதவன் தன் கதையை சொல்லிக் கொண்டே போக. சேதுப்பிள்ளைக்கு முதன் முறையாக அன்று ரவா தோசை கசந்தது.