Wednesday, March 28, 2018

தாய்


மனித வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு எத்தகையது. வயிற்றில் சுமக்கும் போது குழந்தைக்கும் சேர்த்து அவளே உண்கிறாள். கனவுகளோடு பெற்றெடுக்கும் அவள் தன் கண்போல குழந்தையைப் பாதுகாக்கிறாள். குழந்தை எதற்காக அழுகிறது என்று அவளுக்கு மட்டுமே தெரியும். குழந்தை தூங்க வேண்டுமென்றால் அவள் தாலாட்டுப் பாட வேண்டும். தொப்புள் கொடி உறவு ஆயுள் முடியும் வரை தொடர்கிறது. அன்னை இட்ட தீ அடிவயிற்றில் இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் குலதெய்வமாக தாயே இருக்கிறாள். வாழ்க்கைப் பாதையில் தடுமாறி வழுக்கி விழும் போதெல்லாம் அவன் தாயின் மடியில் சாய்ந்தே ஆறுதலடைகிறான்.கோயில் கர்ப்பக்ருஹ இருளில் தாயின் முகத்தையே அவன் காண்கிறான்.

அம்மா ஆகும் போதே பெண்கள் தெய்வமாகிவிடுகின்றனர். அவளுடைய தாய்ச்சியைத் தொடும் ஆட்டமாகத்தான் இவ்வுலகம் இதுநாள்வரை இயங்கிக் கொண்டிருக்கிறது. பூக்களை எப்போதும் செடிகள் சொந்தம் கொண்டாடியதில்லை. அவளுக்குப் பிறகான வாழ்க்கையை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. உன் கைப்பிடித்தபடி அலையில் நான் கால் நனைத்ததை இன்னும் நான் மறக்கவில்லை. வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடிக் களைத்து உனது மடியில் தலை சாய்கிறேன் நீ என் தலை கோதி தூங்க வைக்கிறாய். இரவில் ஆயிரம் நட்சத்திரக் கண்களைக் கொண்டு நீ என்னை கவனித்துக் கொண்டே இருக்கிறாய்.

காலம் உன்னை என்னை விட்டு தொலைதூரம் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இந்த வண்ணத்துப்பூச்சி ஒருநாள் வானை அளக்கும் என்று நீ இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறாய். பிரமாண்டமானக் கோயிலைக் கண்டால் பரசமடைவோம் ஆனால் சிதிலமடைந்த கோயிலில் இருக்கும் தெய்வம் பக்தனுக்காக ஏங்குவதை கண்டுகொள்ள மாட்டோம். ஒவ்வொரு தாயும் வாழ்க்கையெனும் கானகத்தில் மகனை விட்டுவிட்டு புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடுகின்றனர். மீதிப் பயணத்தை அவன் அவளின் நினைவுகளைச் சுமந்து கொண்டே கடக்க வேண்டியிருக்கிறது. வாழ்க்கை அவளை சிரிக்க விடவில்லை. விதியை நொந்து கொள்வதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்.

அவளுடைய கவுச்சி வாசனை வேண்டியதாய் இருக்கிறது நான் தூங்குவதற்கு. என் கேள்விக்கெல்லாம் மெளத்தையே பதிலாகத் தந்தாய் ஆனால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது. அம்மாக்கள் வேர்களைப் போல தங்களை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். சிறிதளவும் சுயநலமின்றி எப்படி அவளால் இருக்க முடிகிறது. உடம்புக்கு நோவென்றாலும் எனக்குப் பின்னால் தூங்கி எனக்கு முன்னால் எழுந்து விடுவாள். பெற்றுவிட்டதோடு தனது கடமை முடிந்துவிட்டது எனக் கருதாமல் இன்றும் என்னைச் சுமந்து கொண்டுதான் இருக்கிறாள். சுயமாக இரையைத் தேடிக் கொள்ளத் திறனற்ற பறவையாகத்தான் நான் இன்றும் இருக்கிறேன். கருவறையில் குடியிருக்கும் கடவுளுக்குக் கூட இவ்வளவு கருணை இருக்குமா என்று தெரியவில்லை.

நான் கைக்குழந்தையாக இருந்தபோது எப்படி பார்த்துக் கொண்டாளோ அப்படித்தான் இப்போதும் பார்த்துக் கொள்கிறாள். நினைவுகள் என்னை அலைக்கழிக்கும் போது அவளது நிழலில் தான் இளைப்பாறுகிறேன். நான் வெயிலில் நடக்கும் போதெல்லாம் நீ தான் முகிலாக வந்து நிழல் தருகிறாய். மழை பெய்யும் போது சிறு தூறல் கூட என் மீது விழா வண்ணம் சேலைத் தலைப்பால் என் தலையை மூடிக் கொள்வாய். நினைவு நதியில் நான் நீந்திக் கொண்டிருக்கும் போதெல்லாம் நீ கரையில் நின்று கொண்டு என்னை வாவென்று அழைக்கிறாய். அவளின் பேரன்பை விவரிக்க நான் வார்த்தைகளின்றி தவிக்கிறேன். எனது கனவுலகைக் கூட அவள் தான் ஆள்கிறாள். கருணை தான் மனிதனிடமிருந்து கடவுளை வேறுபடுத்துகிறது.

எனது ஆயுள் முடியும் வரை என்னில் எங்கோ ஒரு மூலையில் நீ வாழ்ந்து கொண்டிருப்பாய். நான் ஒருவனே உலகம் என்று வாழும்  உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். வானம் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் மழை பொழிவது போல எனது மகள் உனது பாசமழையில் இப்போது நனைந்து கொண்டிருக்கிறாள். வெறும் தோற்றப் பொலிவில் என்ன உள்ளது ஒப்பனை அறையில் எவ்வளவு நேரம் செலவிட்டாலும் உன்னைப் போன்ற அழகு யாருக்கும் வராது. குடும்பக் கப்பல் பேரலைகளால் தள்ளாடும் போதெல்லாம் எங்களை தப்பிக்க விட்டுவிட்டு நீ ஏன் தண்ணீரில் மூழ்குகிறாய். வாழ்க்கைச் சக்கரத்திற்கு அச்சாணியாக நீ இருப்பதால் தான் இவ்வளவு தொலைவைக் கடக்க முடிந்தது. அம்மா உன் பேரன்பை வர்ணிப்பதற்கு தமிழில் வார்த்தைகளே கிடையாது.

No comments:

Post a Comment