Tuesday, March 27, 2018

வாழ்க்கை


வாழ்க்கை தனது ரகசியத்தை யாருக்கும் வெளிக்காட்டாது. நாளை என்ன நடக்குமென்று யாருக்கும் தெரியாது. நம் கண்முன் இறப்பு நேரிடும் போது கூட நம்மை மரணம் நெருங்காது என்றே நாம் நினைக்கிறோம். மனிதன் பலனை எதிர்பார்த்தே செயல்களைச் செய்கிறான். விதியின் கைகள் மனிதனின் கழுத்தை நெரிக்கிறது. மறதியும், தூக்கமும் மனிதனுக்கு இல்லையெனில் வாழ்வு நரகமாயிருக்கும். வாழ்வில் எப்போதும் வசந்தம் வீசிக் கொண்டிருக்காது. மூன்று வேளை உணவருந்தினாலும் பசிநெருப்பை அணைக்க முடிவதில்லை. மனிதன் பரிதாபத்திற்குரிய ஒரு ஜீவன். அவனது ஒரு எல்லை மிருகமாகவும் மற்றொரு எல்லை கடவுளாகவும் உள்ளது. அவனது சிந்தனைக் கூட சிறைப்பட்டுத்தான் கிடக்கிறது.

அணையும் விளக்கு பிரகாசமாக எரிவது போலத்தான் அவனது வாழ்வு. அவனுக்கு ஒரு நம்பிக்கை தம்மைவிட உயர்ந்த அனைத்தும் தனக்கு மேலாக இருக்குமென்று. அதனால் தான் இறைவன் வானத்திலிருப்பார் என்றெண்ணி அண்ணாந்து பார்த்து இறைஞ்சுகிறான். எவ்வளவு போராடியும் அவனால் வாழ்வின் இரும்புச் சட்டங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. அவனது பூமியில் அவன் அன்னியமாய்த் தான் இருக்கிறான். மனிதன் கடவுளிடமிருந்து வேறுபடுவது கருணையினால் தான். இயற்கை அவனை மடியில் வைத்து தாலாட்டினாலும் மனிதன் அமைதியற்றவனானவே அலைந்து கொண்டிருக்கிறான். புலன்களை பாவக் காரியத்துக்கு ஒப்புக் கொடுத்து மனிதன் தூங்கிக் கிடக்கிறான்.

உயிர்த்தெழுந்த இயேசுவின் கண்களில் மன்னிப்பின் ஒளி தெரிந்தது. அதைப் பார்த்து மனிதன் பேதலித்துப் போனான். கடவுள் மனிதனுக்கு துயரக் கோப்பையை பரிசளித்தார். அதிலிருக்கும் மதுவைக் குடித்து மனிதன் கேட்பாரற்று வீதியில் விழுந்து கிடக்கிறான். போலிபுகழ்ச்சியின் மூலம் சாத்தான் மனிதனிடமிருந்த தனக்கான காரியத்தை சாதித்துக் கொள்கிறான். வாழ்வின் கோரப்பிடியில் சிக்கி மனிதன் பைத்தியமானான். மரணத்தின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து சவப்பெட்டிக்கு அருகிலேயே நெடுநாட்கள் காத்திருக்கிறான். வெண்ணிறச் சிறகுகளை உடைய மரணப் பறவை பூமியைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.

அற்ப மனிதர்கள் தங்களுக்குள்ளாகவே அடித்துக் கொண்டதைப் பார்த்து சாத்தான் சிரித்துக் கொண்டிருந்தான். கடவுளின் அசரீரியை இவ்வுலகில் ஏழைக் கவிஞனால் மட்டுமே கேட்க முடிந்தது. கடவுளின் இறுதி ஊர்வலத்தில் எந்த மனிதனால் கலந்து கொள்ள முடியும். ஆதாமின் சந்ததியினரின் அழுகுரலுக்கு இறைவன் செவிகொடுப்பதில்லை. சுவர்க்கத்திலிருந்து விரட்டப்பட்டவர்களின் கனவில் கூட இறைவன் தோன்றுவதில்லை. இவ்வுலகில் மனுஷகுமாரனோடு உண்மையும் மரித்துவிட்டது.

No comments:

Post a Comment