Saturday, April 7, 2018

வேதனைப் பாதை


மைதானத்தில் உதைபடும் பந்தாய் தான் மனித வாழ்க்கை இருக்கிறது. இத்தனை வேதனைகளைத் தாங்கிக் கொண்டு எதற்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் சில வேளைகளில் மனித மனத்தில் எழத்தான் செய்கிறது. கவலையை மறக்க மதுவை நாடி ஓடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. மனதிற்கும் அங்குசம் தேவையாய் இருக்கிறது. இல்லையென்றால் மதம் பிடித்து தன்னிலை தவறிவிடும் வாய்ப்பு இருக்கிறது. மனிதனின் சுயநலம் தான் வாழ்க்கையை நரகமாக்குகிறது.

கண்டுபிடிப்புகள் புறவசதிகளை மேம்படுத்த உதவுகிறதே தவிர மனத்தை மேம்படுத்த சிறு அளவிலும் உதவவில்லை. மனம் தீய எண்ணங்களின் கூடாரமாகவும், பேய்களின் வசிப்பிடமாகவும் இருக்கிறது. பெளதிக உலகில் மனதின் கருவியாகவே உடல் இருக்கின்றது. மனிதனின் அகந்தைதான் மனம். மனம் நசியும் போதுதான் இறைக் காட்சிகள் தோன்றத் துவங்கும். கடவுளின் எண்ணத்தின் பிரதிபலிப்பே இவ்வுலகம். மனித எண்ணத்தின் பிரதிபலிப்பே கண்டுபிடிப்புகள்.

ஒருவர் தனது மனதால் இன்னொருவருடைய மனதில் ஒர் எண்ணத்தை உருவாக்குவது சாத்தியம் தான். கடவுள் தான் இப்பணியைச் செய்து வருகிறார். அவருடைய பேரண்ட மனம் தான் மனிதனுடைய மனதில் எண்ணத்தை எழச் செய்கிறது. கடவுள் தனது இந்த அற்புதசக்தியை சில நபர்களுக்கு வரமாக அருளுகிறார். ஆனால் அவர்கள் இந்த மாயவித்தையை மனிதர்கள் மீது பிரயோகப்படுத்துவதில்லை. அவர்களை ஞானிகள் என்கிறோம். அவர்கள் இச்சைக்கு அப்பாற்பட்டு இருக்கிறார்கள். கடவுளை அடைவதே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. எதிரிகளின் சாம்ராஜ்யத்தில் ஒற்றர்கள் வேவு பார்ப்பதைப் போல சாத்தான் தனது பிரதிநிதிகள் மூலம் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்ட பூமியில் தனது கைவரிசையை காட்டி வருகிறான்.

தனக்கு ஆட்பட்ட மனத்தை பொம்மையாக ஆட்டுவிப்பது சாத்தானுக்கு கைவந்த கலை. கடவுளை நாடும் மனம் கோயிலாகவும், சாத்தானை நாடும் மனம் குகையாகவும் இருக்கிறது. சாத்தான் மனிதனை கேடயமாகப் பயன்படுத்தி கடவுளிடம் மோதுகிறான். ஒரு பெண்ணைக் கண்டதும் காதல் தோன்றுமாயின், கடவுள் ஜெயிக்கிறார். காமம் எழுமாயின் சாத்தான் சிரிக்கிறான். மனிதன் திருந்துவதற்கு வாய்ப்பளிக்கவே கடவுள் விரும்புகிறார். மனிதன் மீது தனது ஆளுமையை செலுத்தி, அவனை கைப்பாவையாக மாற்றவே சாத்தான் விரும்புகிறான்.

குற்றவாளிகளின் கூடாரமாக சாத்தான் இந்த உலகத்தை மாற்றி வைத்திருக்கிறான். புலன்களை வேட்டையாட விட்டுவிட்டு வேடிக்கைப் பார்த்தோமானால், அந்திம காலம் வேதனை மிகுந்ததாக இருக்கும். சாத்தானின் குரலை மறுதலிக்கும் போதுதான், மனிதனின் மெய்யான வாழ்வு தொடங்குகிறது. ஞானத்தந்தையான கடவுள் தனது குமாரனை ஒருக்காலும் கைவிடுவதில்லை. உலகத்தின் பாரத்தை அவர் சுமந்தாலும் தனது படைப்பு பூரணத்துவம் பெறுமென்று அவர் வெகுகாலமாக காத்திருக்கிறார்.

ஆணுக்கு கடவுளைக் காண்பதற்கு தடையாக பெண் இருக்கிறாள். அவள்தான் தாயும், காதலியும். தாய் தனது மகன் கடவுளைக் காண தாமே தடையாக இருப்பதை உணர்ந்து நகர்ந்து கொள்கிறாள். காதலிக்கு விலகிக் கொள்ள விருப்பமில்லை, விலகினால் தன் கட்டுப்பாட்டுக்கு உட்பட தயங்குவான், தன்னை அலட்சியப்படுத்தி, தான் கிழித்த லெட்சுமணக் கோட்டை தாண்டிவிடுவான் என்ற பயம் அவளுக்கு.

எந்த உடலை பேணிப் பாதுகாக்கிறோமோ அந்த உடல் இறுதியில் தீயிக்கு தான் இரையாகப் போகிறது. அழகு அழகு என்று எதைக் கொண்டாடுகிறார்கள் மனிதர்கள், குருதியையும், எலும்பையும் போர்த்தியுள்ள தோலைத்தானே. உறக்கம் ஆறுதல் அளிக்கிறது. விடியல் வேதனையாற்றில் நீந்த வாவென அழைக்கிறது. அன்பு உங்களைப் புனிதப்படுத்தும், கடவுளை உங்களை நோக்கி அழைத்து வரும். வெறுப்பு உங்களை மிருகமாக்கும். இறந்த பிறகும் மனம் சாந்தியடையாமல் இன்னொரு உடல் தேடி உங்களை அலையவைக்கும்.

இதோ வானிலிருந்து பெய்யும் மழை மனிதர்களைப் புனிதப்படுத்தும். இதன் மூலம் கடவுளின் கருணை வெளிப்படுகிறதல்லவா? எல்லா கதவுகளையும், ஜன்னல்களையும் நீ சார்த்திவிட்டாலும், கடவுளின் கண்கள் மட்டும் உன்னை கவனித்துக் கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment