Thursday, April 5, 2018

சாவின் அழகு


இயற்கை பாம்பாக இருக்கிறது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விழுங்கி ஏப்பம் விடுகிறது. உலக அழிவை முன்னிட்டு பரப்பப்படும் வதந்திகள் இன்றளவும் குறைந்தபாடில்லை. ஆனால் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரை அவனளவில் உலகம் அழிந்து தானே போகிறது. மரணம் இதைத் தானே ஆதிகாலம் தொட்டு நிகழ்த்தி வருகிறது. சாவை மறப்பதற்குத் தானே மனிதன் ஆசை வலையில் விழுந்து கிடக்கிறான். மரண சர்ப்பம் பிறந்ததிலிருந்து அவனைத் தொடர்ந்து கொண்டு தானே வருகிறது. உடலை கடன் கொடுத்த கடவுளுக்கு அதை திருப்பிக் எடுத்துக் கொள்ள உரிமையில்லையா?

மரணவிதி இவ்வுலகில் இயங்குவதால் தானே அவ்வப்போது அவதாரங்கள் நிகழ்கிறது. கடைத்தேற்ற வந்தவர்களை கல்லால் அடித்து விரட்டியவர்களின் சந்ததிகள் தானே இவர்கள். மரணத்தின் நிழல் நம்மீது கவியும் போது மனம் உண்மை பேச விழைகிறதல்லவா? வானத்து சந்திரன் எத்தனை சாம்ராஜ்யங்களை, சக்கரவர்த்திகளை, பேரழகிகளைக் கண்டிருக்கும். பலகோடி பேர்களை உண்டு செரித்த வயிறல்லவோ மண்ணுக்கு. சாம்பலை நதியில் கரைக்கும் போது கூட தோன்றுகிறதா? இவ்வுலக வாழ்க்கை நிலையற்றது என்று!

கடவுளின் கிருபை வேண்டுமென்றால் அவனது படைப்பான சகமனிதர்களை நேசிக்க வேண்டுமல்லவா? பாவிகளை இரட்சிக்கத்தான் வந்தார் இயேசு, அதற்காக பாவக்கணக்கினை தொடர்ந்து கொண்டிருந்தால் மீட்பு சாத்தியமாகுமா? கடவுளின் குரல் எல்லா மனிதனுக்குள்ளும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது, ஆனால் அவன் சாத்தானுக்கே ஏவல் புரிகிறான். சாவு நம்மை அழைக்கும் போது நான் வரமாட்டேனென்று சொந்த பந்தங்களை காரணம் காட்ட முடியுமா?

மரண வெள்ளம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அது ஒருநாளும் மனிதர்களை தரம்பிரித்து பார்த்ததில்லை. விதி வெகு நியாயமாக நடந்து கொள்கிறது. உலக நாடக மேடையில் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை கலைந்து பயணத்தைத் தொடர்வதே மரணம். நான் ராஜா வேடமிட்டேன் எனக்கு கடவுளுக்கு அருகில் இடம் கொடுக்க வேண்டுமென்றால் முடியுமா? கடவுள் தனக்குப் பிரியமானவர்களாக யாரையும் கருதுவதில்லை. அடித்தால் செத்துவிடுகிறதே கொசு அதைவிட நாமொன்றும் மேலானவர்கள் அல்ல.

அற்பபுழுக்களான நாம் பிறரைவிட நாம் உயர்ந்தவர் என்றும், நாடு,மொழி,இனம் என்று நம்மை நாமே பிரித்து வைத்திருக்கிறோம். மரணத்தை பொறுத்தவரை மர்மத்தின் முடிச்சை மனிதனால் எந்நாளும் அவிழ்க்க இயலாது. குளத்தில் நீந்தும் மீன் தன்னைக் கடவுள் என்று எண்ணிக் கொண்டால் நாம் என்ன செய்வது. நடந்தேற வேண்டிய ஒன்றை நிறுத்த மனிதன் படாதபாடுபடுகிறான், ஆனால் மனிதனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிகிறது. வான மண்டலத்தை ஆராயும் அவனால் கடவுளின் நிழலைக்கூட நெருங்க முடியாது. இல்லை என்பவர்கள் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார்கள், உண்டு என்பவர்கள் தான் விசாலமான வானத்தை அளந்து பார்க்க விழைகிறார்கள். மரண ஆற்று வெள்ளத்தில் மனிதர்கள் வலுக்கட்டாயமாக தள்ளப்படுகிறார்கள். கரை சேர்ந்தவரகள் யாரென்று கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்.

வசந்தத்திற்கு தயாராகும் மரம் சருகுகளை உதிர்க்கத்தான் செய்யும், அதற்காக மரம் அழுகிறதா என்ன? பூமிக்கு வருகைதர நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சத்தியத்தைக் கடைப்பிடிப்பதால் நம்மை மக்கள் கல்வீசித்துரத்துவார்கள் என்றால், தப்பித்து ஓடாதீர்கள் மீண்டும் உயிர்த்தெழுந்த இயேசுவை நினைத்துக்கொண்டு அவர்களை நெருங்குங்கள்!

No comments:

Post a Comment