Thursday, April 26, 2018

கனவின் விலாசம்


கொஞ்சம் கொஞ்சமாக உறக்கத்தின் ஆழத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். திடீரென்று எனது அறை தங்கக்கிரணங்களால் சூழப்பட்டு அதீத வெளிச்சத்துடன் காணப்பட்டது. இதை நான் கண் திறந்து பார்க்கவில்லை. மனக்கண் இதையெல்லாம் எனக்குத் தெரியப்படுத்தியது. இரண்டு பரதேவதைகள் எனது அறைக்குள் பிரவேசித்தன. ஒரு பரதேவதைக்கு இறக்கை இருந்தது. வெள்ளைக் நிறத்தில் முட்டி தெரிகிற மாதிரி கட்டை கவுன் போட்டிருந்தது. தன் பெயர் pretty பரதேவதை என அது தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. இன்னொரு பரதேவதைக்கு இறக்கை சிறிய அளவில் காணப்பட்டது. கறுமை நிறத்துடன் கண்கள் பெரிதாக அவலட்சணமாக காட்சியளித்தது. அதன் பெயர் ugly பரதேவதையாம்.

இரண்டு பரதேவதைகளும் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்தபடியே நடனமாடின. Pretty பரதேவதை நல்ல ஆத்மாவை கடவுளிடம் கூட்டிச் செல்லும் வேலையை செய்யவல்லது. Pretty பரதேவதை என்னிடம் ‘வாழ்க்கையைப் பற்றி உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கடவுளிடம் நான் உன்னை அழைத்துச் செல்கிறேன்’ என்றது. நான் சம்மதம் தெரிவிக்கவே, என் கையைப் பிடித்துக் கொண்டு பறக்க ஆரம்பித்தது.

சுவர்க்கத்தை அடைந்தோம். அங்கு ஒரு மனித உருவம் நாற்காலியில் அமர்ந்தபடி மேசையின் மீது பரீட்சை அட்டையை வைத்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தது. தொள தொள ஆடையும் சிகப்பு நிற சால்வையை தோளில் போர்த்தியபடி இருந்த அந்த உருவம், என்னை நோக்கி கவனத்தை திருப்பியது. கருணை பொங்கும் முகத்தோடு ‘வந்துவிட்டாயா’ என்றது. ‘நீ எழுதிய துயர்மிகு வரிகள் என்னை இங்கே தூங்கவிடாமல் செய்தது. எனக்கு இங்கே புத்தக அலமாரி உள்ளது. உன்னுடையை தொகுப்பையும் நான் சேகரித்து வைத்துள்ளேன். பேச்சுத் துணைக்கு நீ வந்துவிட்டதால் எனக்கு இனி போரடிக்காது. யாரை இங்கு அழைக்கலாம் என்று யோசித்தபோது நீ தான் என் நினைவுக்கு வந்தாய். உன்னைக் கண்டால் எனக்கு வியப்பாக உள்ளது. நீ விடாமல் தட்டிக் கொண்டே இருந்தாய், இப்போது உனக்காக என் கதவை திறந்துவிட்டேன். உள்ளே பிரவேசித்துவிட்டாய் இனி உன் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்’ என்றார். முதல் முறையாக கடவுளிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் நான் என்ற உணர்வு ஏற்பட்டது.

தனக்கு எதிரேயுள்ள இருக்கையில் என்னை அமரச் செய்தார். என் கேள்விகளை எதிர்கொள்ள அவர் ஆயத்தமானார். ‘நான் வாழ்க்கையின் பொருள் என்ன?’ என்றேன். அவர் தன் மெளத்தை கலைத்து ‘பிறப்பையும், இறப்பையும் நான் தான் தீர்மானிக்கிறேன், இல்லை என்று சொல்லவில்லை. பணத்தைத் தேடி நீங்கள் ஓட ஓட கடவுளுக்கும் உங்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. மகத்தான ஒரு வாய்ப்பாக வாழ்க்கையை மனிதன் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டான். பணத்தை கொண்டு எல்லாவற்றையும் சாதித்துக் கொள்ளலாம் என்கிற போது மனிதனுக்கு நான் தேவையில்லாமல் போய்விட்டேன். இளகிய மனம படைத்த என்னை மனிதன் ஏமாற்றிவிட்டான்.

வாழ்க்கைப் பாடத்தை மனிதன் சரிவரப் படிக்கவில்லை. கடவுளுக்கு காணிக்கையை அள்ளித்தந்து அவரை சாந்தப்படுத்திவிடலாம் என நினைக்கிறான். சொத்துக்காக தன் கூடப்பிறந்த சகோதரனையே கொல்ல முயல்கிறான். பச்சிளம் குழந்தைகளை தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறான். வயோதிகத்தில் கூட தன் தவறுகளை அவன் உணர்வதில்லை. மனிதர்கள் தங்களுக்குள் அன்பை வெளிப்படுத்தி வாழ்வதையே நான் விரும்புகிறேன். எனக்கு பணம் ஒரு பொருட்டல்ல. வாழ்க்கை   ஒரு பந்தயமுமல்ல. அன்பு செய்ய மனிதனுக்கு கிடைத்திருக்கும் மகத்தான வாய்ப்பு.

அடர்ந்த மெளனம். திரும்பவும் என் மனதைக் குடைந்து கொண்டிருந்த அக்கேள்வியை கடவுள் முன் வைக்கிறேன்.’மனிதர்களுக்கிடையில் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகள்?’ ‘எனது படைப்பு தான் மனிதன் ஆனாலும் நான் அவனை அடிமைப்படுத்த நினைக்கவில்லை. ஆனால் மனிதனுக்கு அடிமைகள் தேவைப்படுகிறார்கள். மனிதன் சக மனிதனை தன்னைவிடத் தாழ்ந்தவன் எண்ணச் செய்வதில் வெற்றி அடைகிறான். கடவுள் பெயரால் பேதத்தை ஏற்படுத்தி தனது ஆளுமையை நிலைநாட்டுகின்றான். பணத்தை வைத்து மனிதனை எடைபோடுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஏழைகள் பணக்காரர்களைவிட தாழ்ந்தவர் அல்ல. எத்தகைய சோதனை வந்தாலும் வாழ்க்கையில் உண்மையைக் கைவிடாதவர் எனக்குச் சமமானவர். மெய்யான வாழ்வுக்காக தன்னலத்தை கொல்கின்றவன் என்னை அடையும் பாதையில் அடியெடுத்து வைக்கிறான்.

மேசையின் மீது கண்ணாடி தம்பளரில் உள்ள தண்ணீரை அருந்திவிட்டு, எனது அடுத்த கேள்வியை எதிர்நோக்குகிறார். என் மனதை குடைந்து கொண்டிருந்த கேள்வி ஒன்றை அவர் முன் வைக்கிறேன். ‘மரணத்திற்கு பின் என்ன நடக்கும்?’ ‘இன்றைய காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சி உச்சகட்டத்தில் உள்ளது. நான் இருக்கும் கிரகத்தை அவனால் நெருங்க முடியவில்லை. மரணத்துக்கு காரணமாணவன் நானென்று தெரிந்தால், அவன் என்னை விட்டுவைக்க மாட்டான். மரணத்திற்கு விடைகாண மனிதனால் முடியாது. கண்ணெதிரே பிறர் சாவதைப் பார்க்கும் போது தான் சாவோம் என்ற எண்ணம் மட்டும் மனிதனுக்கு வருவதேயில்லை. வயோதிகத்தில் வாழ்க்கையைப் பற்றிய புரிதல் ஏற்படத் தொடங்கும். ஆனால் மனிதர்கள் கிழவன் ஏதோ உளறுகிறான் என்பார்கள். உலகை வென்ற அலெக்ஸாண்டர் தனது உள்ளங்கையில் வைத்து அதை கொண்டு செல்ல முடிந்ததா? நாளை நாம் உயிரோடிருப்போம் என்பது கூட உறுதியில்லை அல்லவா? நிகழ்காலத்தை தவறவிட்டுவிடுபவனால் எதிர்காலத்தில் மட்டும் அப்படி என்ன அற்புதம் நிகழ்ந்துவிடும். பிறந்துவிட்டால் இறப்பை எதிர்கொண்டுதானே தீர வேண்டும். மரணத்தில் நீ பூமியில் செய்த செயல்களுக்கான பலனைப் பெற்றுக் கொள்வாய். நீ உத்தமன் என்றால் மறுமைநாளில் நீ என்னைச் சந்திக்கும் போது உன் தலை கவிழாது. மனிதனின் எல்லாச் செயல்களும் அவனை மரணத்திற்கே இட்டுச் செல்கின்றன.

பிறந்தது முதல் மரணநிழல் மனிதனை நெருங்கிக் கொண்டேயுள்ளது. மரணத்திற்கு தப்பி ஓடுபவன் எமனின் காலடியில் தான் போய் விழுவான். உங்கள் வாழ்க்கையில் சத்தியத்துக்கு நீங்கள் இடமளித்திருந்தால், மரணத்தைக் கண்டு பயப்படவேண்டாம். உனக்கு மரணிக்க சம்மதமெனில் மரண ரகசியத்தை உன்னிடம் மட்டும் பகிர்ந்து கொள்கிறான்’ என்றார் கடவுள். வாழ்க்கையில் மகத்துவம் புரிந்த எனக்கு வாழ்ந்து பாரக்க ஆசை வந்தது. மரணத்தை நேரடியாக எதிர்கொண்டு கொள்கிறேன் என்ற கூறிவிட்டு கடவுளிடமிருந்து விடை பெற்றேன் நான்.

No comments:

Post a Comment