Wednesday, April 25, 2018

எதையோ தொலைத்தேன்


நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது தேசிய ஒருமைப்பாடு என்ற கட்டுரையைத் தான் காலாண்டிலும், அரையாண்டிலும், முழுஆண்டிலும் கேட்டிருந்தார்கள். பத்தாம் வகுப்பு விடுமுறையில் இவனோடு வயது குறைந்த நண்பர்களோடு பேப்பரும், பேனாவுமாக கிணற்றடியில் உட்காரந்து எழுத ஏதாவது தோன்றாதா என தவங்கிடப்போம். குடியிருந்த காலனியில் பக்கத்து வீட்டு மாமி தரும் நாவலை வயதுக்கு மீறிய பொறுமையுடன் உட்கார்ந்து படிப்பான். ஆறாம் வகுப்புக்கு தமிழ் மீடியத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மாறிய போது இவன் படித்த ஆரம்பப்பள்ளியில் தமிழுக்கு வகுப்பெடுத்தார்கள் கவர்னர் என்ற ஆங்கில சொல்லை பாதுகாவலர் என்று நான் மொழிமாற்றம் செய்தேன். டீச்சர் அன்போடு திருத்தவில்லையென்றால் அன்றோடு தமிழ் வேண்டாம் வராது என்று ஓடிவந்திருப்பேன்.

அப்பா வாரந்தோறும் வாங்கி வரும் தேவியை யார் முதலில் படிப்பது என அக்காவிற்கும், எனக்கும் போட்டி நடக்கும். அக்கா கிசுகிசுவை படித்துவிட்டுத்தான் இவனிடம் தருவாள். இவன் தலையங்கத்தை படித்து புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருப்பான். சிறுவயதில் இந்தியா நமது தாய்நாடு என்று இவன் மனதில் வேரூன்றிவிட்டது. பேருந்து நிலையத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் வால்போஸ்டரை சுட்டிக் காட்டி இந்தியா டுடே வாங்கித் தரும்படி அப்பாவை நச்சிரிப்பான். கட்டுரைப் போட்டிக்கு எழுதித் தரும்படி இவன் எந்த ஆசிரியரிடமும் போய் கெஞ்சியதில்லை. இவனே யோசித்து தயார் செய்துவிடுவான். ஆனால் தமிழ்வாத்தியார் தன்னிடம் எழுதி வாங்கியவனைத்தான் தேர்வு செய்வார்.

பள்ளிக்குச் செல்ல மறுத்து அடம்பிடித்ததால் அம்மா இவனை பள்ளிவரை அடித்து இழுத்து வந்தது இவனுக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது. அடிக்கு பயந்து பள்ளிக்கு போகமாட்டேனென்று அதற்கப்புறம் அடம்பிடித்ததில்லை. ஐந்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் தான் படித்தான். தாளாளர் தன் மனைவியை மாணவர்களுக்கு எதிரிலேயே அவர் முடியைப் பிடித்து அடித்து இழுத்துச் செல்வார். இதனால் அவர் எப்போது பள்ளிக்கு நுழைவாரோ என்ற பயவுணர்வு மாலை பள்ளி விடும்வரை இருந்து கொண்டேயிருக்கும். பள்ளிக் கடிகாரத்தின் பெரிய முள் பன்னிரெண்டைக் கடக்கும் போது சற்று வேகமாக நகரும் பெரிய முள் பன்னிரெண்டை நெருங்கும் போதெல்லாம் பாடத்தைவிட்டுவிட்டு ஒரு கூட்டமே கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியிலிருந்து இவனை பாதியிலேயே அப்பா வீட்டுக்கு அழைத்து வந்தார். தாத்தா இறந்துவிட்டதாக அம்மா சொன்னாள். அதனை இவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பேருந்தில் தாத்தா ஊருக்கு போய் இறங்கினோம். மரநாற்காலியில் அவர் உட்காரவைக்கப்பட்டு இருந்தார். தாத்தாவை அசைவற்ற நிலையில் பார்த்தவுடன், எப்போது வந்தாலும் கண் தெரியாத தாத்தா ஆரஞ்சு சுளை மிட்டாய் கொடுத்து தன்னை அவர் பக்கத்தில் அழைத்து முகத்தை வாஞ்சையோடு தடவிப் பார்ப்பார். இப்போது ஏன் அப்படி செய்யவில்லை என இவனுக்கு வருத்தாமாக இருந்தது. சிறிது நேரத்தில் கண்ணாடி பாட்டிலில் வாங்கி வைத்திருந்த மிட்டாயின் மீது கவனம் திரும்பியது.

அப்பா வழி பாட்டியையும், அம்மா வழி பாட்டியைும் இவன் பார்த்ததே இல்லை. பாட்டியின் மடியில் படுத்து கதை கேட்டு உறங்கும் பாக்கியம் இவனுக்கு கிடைக்காமல் போனது. முடிவெட்ட செல்லும் போதெல்லாம் ரஜினி கிராப் வெட்டிவிடச் சொல்லும்படி வீடடிலேயே அப்பாவிடம் சொல்லி அழைத்து வருவான். சலூன் கடைக்காரர் முடியை வெட்டாமல் அப்படியே விடுவது தான் ரஜினி கிராப் என்று சொன்னது இன்னும் இவனுக்கு ஞாபகமிருக்கிறது.

அக்காவோடு வளர்ந்தாலும் வேறு பெண்களைப் பார்க்கும் போது வேற்றுகிரக வாசிகளைப் பார்ப்பது போல் தான் பார்ப்பான். இவன் வீசும் கல்லுக்கு மட்டும் ஏன் புளியம் பழம் விழுவதில்லை என இன்றும் யோசித்துக் கொண்டிருக்கிறான். வேலியோர தட்டானைப் பிடிக்கும் போது முள் எத்தனை முறை காலைப் பதம் பார்த்தாலும் இவனுக்கு வலிப்பதில்லை. இவன் கோர்வையாக கதை சொல்வதைப் பார்த்து கூட்டம் மகுடிப்பாம்பாய் மயங்கும். கதை கேட்பதற்கென்றே இவனைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.

பத்தாம்வகுப்பு முடித்த பின் சில தடங்கல்களால் செகண்ட் குரூப் எடுக்க வேண்டி வந்தது. அது ஒரு கிறித்தவப் பள்ளி. இவன் வகுப்பில் ஏழே பேர் என்பதால் வகுப்புக்கு வாத்தியார்கள் யாரும் வருவதில்லை. கூண்டுக்கிளி வாய்ப்பு கிடைத்தால் தப்பிக்கத்தானே பார்க்கும். படிக்கிறேன் என்று சொல்லி ஊரைச் சுற்றித்திரிந்தது தான் மிச்சம். சுதாரித்துக் கொண்டு இங்கே படித்தால் தேற முடியாது என்று முடிவெடுத்து பாலிடெக்னிக் படிப்புக்கு அச்சாரம் போட்டான் இவன்.

அப்பா, அம்மா தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை பொய்யாக்கி கடைசி செமஸ்டரில் அரியஸ் வைத்து வெளியே வந்தான். எதிர்பாராத இந்த தோல்விதான் இவன் வாழ்க்கையையே மாற்றியது. இவன் தொலைத்த காலமே இவனை தன் கால்களால் பந்தாடியது. அப்பாவின் வேலை மாற்றம் காரணமாக சென்னைக்கு குடிபெயர்ந்தோம். நண்பர்களுடனான தொடர்பு அறுந்தது. அப்பாவின் காசில் சொகுசாக இருந்ததால் கிடைத்த இடத்தில் உடம்பை வளைத்து வேலை செய்ய முடியவில்லை இவனால். தன்னை வருத்திக் கொண்டானா அல்லது திருத்திக் கொண்டானா எனத் தெரியவில்லை, சென்னையில் வசித்த ஏழு வருடங்களில் எந்த தியேட்டரிலும இவன் காலடி பட்டதில்லை.

ஏதோ ஒரு வார இதழில் பாலகுமாரனின் குருவைப் பற்றியத் தொடரின் ஒரு பகுதியை தற்செயலாக படிக்க நேர்ந்தது. அதன் பாதிப்பால் அவரின் எழுத்துக்களைத் தேடி அலைந்தேன். அரசு நூலகத்தில் அவர் எழுதிய புத்தகம் ஒன்றிரண்டு தான் கிடைத்தது. ஏதேச்சையாக சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருக்கையில் பழைய புத்தக்கடையில் வெளியே சிதறிக் கிடந்த புத்தகத்தில் பாதி கிழிந்த நிலையில் அவர் புகைப்படத்தைப் பார்த்தேன். அவரது ஐம்பது நாவல்களை அங்கே தான் பொறுக்கி எடுத்து படித்தேன். அந்த பாலகுமாரன் என்ற கண்டிப்பான பெரியவர் தான் குருவாக இவனுக்கு தமிழ் மூன்றாடுகள் தமிழ் கற்றுத்தந்தார். அவர் எழுதிய குரு என்ற புத்தகம் இவன் பார்வையை முற்றிலும் மாற்றியது உள்ளுக்குள் மாற்றம்  நிகழ்ந்தது. பாலகுமாரன் விதைத்த விதை தான் நான் வாழ்க்கைப் புயலை எதிர்கொண்டு தாக்குப்பிடிப்பேனா என்று பார்ப்போம்.

No comments:

Post a Comment