“ஹலோ ஃபாதர் ஜெயராஜ் பேசுறேன்.”
“ஓ ஜீஸஸ்! இப்பதான் உங்களபத்தி நினைச்சிட்டு இருந்தேன் நீங்களே கால் பண்ணிட்டீங்க.
என்ன விஷயம் ஃபாதர்” என்றார் தொழிலதிபர் டேவிட் தணிகாசலம்.
“ஒண்ணுமில்லை. உங்கள சந்திக்கணும்னு ராயப்பன்னு ஒருத்தர் பிரியப்படுறாரு.”
“என்ன பேர் சொன்னீங்க ஃபாதர்?”
“ராயப்பன். உங்களுக்கு அவரைத் தெரியுமா?”
“ம். இப்பதான் ஞாபகத்துக்கு வருது. வெயிட் பண்ணச் சொல்லுங்க இன்னும் அரைமணி
நேரத்துல வர்றேன்.”
டேவிட்டின் கண்கள் சிவந்தன. ‘ராயப்பன் ராஸ்கல் ராயப்பன் உன்னை எமலோகத்துக்கு
அனுப்புறதுதான் என் முதல் வேலை.’ கைத்துப்பாக்கியில் தோட்டா நிரப்பப்பட்டு இருக்கிறதா
எனப் பார்த்துக்கொண்டு விறுவிறுவென வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் நோக்கி விரைந்தார்
டேவிட். கார் சாலையில் சீறிப்பாய்ந்தது.
‘ப்ளடி இடியட் ஃப்யூல் பழைய டேவிட்டா என்னை நினைச்சானா காசு, பணம், லொட்டு
லொசுக்குன்னு எல்லாத்தையும் பாத்தாச்சி அப்ப என்னைய புழுவா பூட்ஸ் கால்ல மிதிச்சிபுட்டு
இப்ப பாம்பானோன்ன மகுடி ஊதலாம்னு பாக்குறானா ஸ்டுப்பிட் ஃபெல்லோ. ராயப்பன்னு அவன்
பேரை வாயால சொல்லக்கூட அருவருப்பா இருக்கு. ராயப்பா உன்னோட விதிதான் உன்னை இங்கே
அழைச்சிட்டு வந்திருக்கு.’ அவரது வலது கையால் பிஸ்டலை தொட்டுப் பார்த்துக் கொண்டார்.
கார் ஃபாதர் வீட்டின் முன் நின்றது. கார் சத்தம் கேட்டதும் ஃபாதர் ஜெயராஜ் வெளியே
வந்து டேவிட்டை வீட்டினுள் அழைத்துச் சென்றார்.
ஃபாதர் டேவிட்டிடம் “நீங்கள் சம்மதித்ததால் தான் அவரை வெயிட் பண்ணச் சொன்னேன்.
இந்த அறையில தான் இருக்காரு. நீங்கள் சந்தித்துவிட்டு வாருங்கள் நாம் பிறகு பேசுவோம்”
என்றார்.
டேவிட் அறைக் கதவைத் திறந்ததும் ராயப்பன் சோபாவிலிருந்து எழுந்து கொண்டான்.
‘ஸிட் ஸிட்’ என்று சொல்லிக்கொண்டே எதிரே உள்ள சோபாவில் டேவிட் அமர்ந்தார்.
கால்மேல் கால்போட்டபடி ராயப்பனை மேலும் கீழுமாக இரண்டு தடவை பார்த்தார், “இத்தனை
வருஷம் கழிச்சி தேவையில்லாம தேடி வந்திருக்க மாட்டேன்னு தெரியும். இப்ப என்னோட ஸ்டேடஸே
வேற, என்னை உன்னால விலைபேச முடியாது. இல்ல நான் செஞ்சது பாவம்னு ஞானோதயம் வந்திடுச்சின்னு
பிச்சை கேட்டு வந்திருக்கியா?” என்றார் வெண்தாடியை வருடியபடி.
ராயப்பன் கண்களை தாழ்த்திக் கொண்டு “மிஸ்டர் டேவிட் உங்க பேரைக் கெடுக்கணும்னு
நான் விரும்பலை. நான் செஞ்ச தவறுக்கு பிராயச்சித்தம் தேடித்தான் வந்திருக்கேன். நான்
ஒரு பாவி டேவிட்.”
“நாம சந்திச்சி இருபத்தைந்து வருஷம் இருக்குமா? இப்ப ஞானம் பொறந்திருச்சின்னு
வந்து நின்னா நான் நம்பணும் இல்ல.”
டேவிட்டின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. நிதானமாக கோட்டுக்கு உள்ளே இருந்த
செல்லை எடுத்து காதில் வைத்தார். “ஹலோ செபஸ்டியன் டுடே இஸ் யூவர் டே. அப்பா ப்ளாங்க்
செக்கை டேபிள்ல உன் போட்டோவுக்கு கீழ வைச்சிருக்கேன். ரேஸ்ல ஜெயிக்கிற குதிரைமேல
பணத்தைக் கட்டுறதுதான் புத்திசாலித்தனம். இதெல்லாம் மூட்டைகட்டி வச்சிட்டு கல்யாணம்
பண்ணிகிட்டு ஃபேமிலி மேன் ஆயிடுன்னா கேட்க மாட்டேங்கிற” என்று பேசிவிட்டு டேவிட் போனை
கோட்டுக்கு உள்ளே வைத்துக் கொண்டார்.
“டேவிட் இது உன் மகன்தானே, படர்றத்துக்கு கொம்பு கிடைச்சதும் எங்களையெல்லாம்
மறந்துட்ட டேவிட்.”
“எதிரிகளைக் கூட மன்னித்துவிடலாம் துரோகிகளை ஒருபோதும் மன்னிக்கமுடியாது ராயப்பன்.”
“நீ பழைய டேவிட்டா இருந்தேன்னா கமலாவைப் பத்திதான் முதல்ல கேட்டிருப்ப.”
“ஓ மை காட்! கமலா இன்னும் அந்தச் சிலுவையை என்னால் இறக்கி வைக்க முடியவில்லையே,
கமலா உனக்கு முன் நானொரு குற்றவாளி. என் தரப்பை எதைச் சொல்லி நியாயப்படுத்துவேன்
நான்.”
“என்னை துரோகி என்கிறாயே கமலா அப்பாவிடம் ஒருலட்சம் வாங்கும்போது உன் மனசாட்சிக்கு
என்ன பதில் சொன்னாய் டேவிட்.”
“நான் கையாலாகதவன் என் தாயைக் காப்பாற்ற கை நீட்டி வாங்கிக் கொள்வதைவிட வேறு
வழி தெரியவில்லை எனக்கு.”
“தாயா, கமலாவா என்று வரும்போது நீ தாயைத் தானே தேர்ந்தெடுத்தாய். கமலாவை நட்டாற்றில்
விட்டுவிட்டாய் அல்லவா? உன்னைப் போல் மனதுக்கு ஒருத்தி, மஞ்சத்துக்கு வேறொருத்தி
என கமலாவும் வாழ்ந்துவிடுவாள் என்று தானே நீ நினைத்தாய் டேவிட்.”
“ஓ நோ! ஆற்றைக் கடக்க உதவிய தோணியை மறந்துவிட்டேன்.”
“அது என்ன அவ்வளவு ஈஸியா சொல்லிட்ட டேவிட். சமுதாயத்தில் ஆணுக்கு ஒரு நீதி
பெண்ணுக்கு ஒரு நீதியா?”
“அப்படியென்றால் முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸும்
நானும் ஒன்றுதான். நியாயத்தீர்ப்பு நாளில் எப்படி அந்தக் கேள்வியை எதிர்கொள்வேன்.”
“உன்னை நியாந்தீர்க்க வேண்டியது இயேசு அல்ல கமலா தான். கமலாவின் இடத்தில் வேறொருத்தியை
வைத்து உன்னால் பார்க்க முடிந்து இருக்கிறது. ஆனால் உன் இடத்தில் வேறொருவனை வைத்து
கமலாவால் பார்க்க முடியவில்லை. உனக்கு காதல் ஒரு விளையாட்டு அவளுக்கு அதுதான் வாழ்க்கை.”
“அதை நீ சொல்லாதே.”
“நான் கமலா அப்பா தந்த பணத்தை பெட்டியில் எடுத்து வந்தபோது எதையும் யோசிக்காமல்
வாங்கிய கல்நெஞ்சக்காரனின் கைகள் தானே உன்னுடையது டேவிட்.”
“பாவக்கறை படிந்தவை இந்தக் கைகள். அப்போது தன்னலத்தைப் பற்றியே யோசித்தது
எனது புத்தி. உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த சாத்தானை விழிக்கச் செய்துவிட்டேன்.
கல்லறைக்குப் போகும்வரை எனக்கு இவ்வுலகில் நிம்மதி இருக்காது.”
“நீ விளையாடியது ஒரு பெண்ணோட வாழ்க்கையில். பெண் பாவம் பொல்லாதது என்று சொல்லிக்
கேட்டதில்லையா? கமலாவை ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டு பெரிய உத்தமன் மாதிரி பேசுகிறாய்?”
“காதலித்த போது என்விரல் நகம் கூட அவள்மீது பட்டதில்லை தெரியுமா? இந்த நாடகத்தில்
உனக்கு பங்கில்லை என்று மீன் மாதிரி நழுவப் பார்க்காதே. பணத்துக்காக காதலை விலைபேசிவிட்டேன்
என்கின்றாயே அன்று திட்டமிட்டு என்னுடைய பலவீனம் எதுவென்று தெரிந்துதானே அடித்தீர்கள்.”
“நீ வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டாய் எனத் தெரிய வந்தால் கமலா என்ன
நினைப்பாள் என்று யோசித்து பார்த்தாயா?”
“அப்போது எதுவும் என் கையில் இல்லை. அம்மா இறக்கும்போது ஸ்டெல்லாவை என் கையில்
பிடித்துக் கொடுத்துவிட்டு போய்விட்டாள் நான் என்ன செய்வது.”
“உன் கோழைத்தனத்துக்கு உன் அம்மாவைக் காரணம்காட்டி தப்பிக்கப் பார்க்காதே.”
“யெஸ் ஐயம் புல்ஸிட். செய்த தவறை நியாயப்படுத்தப் பார்க்கிறேன். என் பழைய நினைவுக்குறிப்புகளில்
மட்டுமே கமலா இருக்கிறாள். வாழ்க்கை எங்களை எங்கெங்கோ கொண்டு சென்று நிறுத்திவிட்டது.
ஒரு புள்ளியில் நாங்கள் சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வது கர்த்தரே. உன் சோதனையில்
இதுவும் ஒன்றென நான் சகித்துக் கொள்ளவேண்டுமா?”
“உன் பாவத்தைக் கழுவ கர்த்தரே இந்த வாய்ப்பை தர்றாருன்னு நினைச்சிக்க.”
டேவிட் கையைப் பிசைந்தபடி, “ஜீஸஸ்! பாவமூட்டையை இறக்கி வைக்க பாவியின் தயவை
நாட வேண்டியிருக்கிறதே. என்ன ராயப்பா பூடகமாக பேசுகிறாய் என்ன வாய்ப்பு சொல்லேன் பார்ப்போம்.”
“நான் உன்னை ஒரு இடத்துக்கு அழைச்சிட்டுப் போறேன். என்ன, ஏதுன்னு கேள்வி கேட்காம
என்னோட வர்றணும்.”
“ம். சரி! இன்னும் ஒன்ன முழுசா நம்ப முடியலை ராயப்பா. செய்த தவறுக்கு பிராயச்சித்தம்
தேடுறியா.. இல்ல உன் பாவத்துல என்னையும் பங்கெடுத்துக்க கூப்பிடுறியான்னு தெரியலை.”
இருவரும் கிளம்பினார்கள் காரை ராயப்பன் ஓட்டிவந்தான். கார் ஐந்து கிலோமீட்டர்
தொலைவிலுள்ள கிறித்தவ மிஷனரீஸ்ல் நின்றது. காரை விட்டு இறங்கிய டேவிட் தயங்கியபடி
உள்ளே நுழைந்தார்.
“ராயப்பன் இங்கே என்ன நடக்குது?”
“இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கே புரியும் டேவிட்.”
மாடிப்படியிலிருந்து கன்னியாஸ்திரி உடையில் கீழே இறங்கி வந்துகொண்டிருந்த கமலாவைப்
பார்த்ததும் இருக்கையில் அமர்ந்திருந்த டேவிட் திடுக்கிட்டு எழுந்து கொண்டார்.
‘ஓ மை லார்டு! இது என் கமலாவா? கர்த்தரே இது என்ன சோதனை மேல் சோதனை. இந்தக்
கோலத்தில் கமலாவை நான் பார்க்கவேண்டுமா?’
அருகில் வந்த கமலா “நீங்க டேவிட் தானே?” என்று அடையாளம் கண்டுகொண்டு கேட்டாள்.
“ஆமாம். அந்த அடிமுட்டாள் நான் தான்.”
“என் வாழ்க்கையிலிருந்து போனவர் போனவர்தான்னு நினைச்சிண்டு இருந்தேன். எப்படி
இருக்கிங்க?”
ராயப்பன் இடைமறித்து “இப்ப அவரு பழைய டேவிட் இல்ல அவருக்குன்னு சொத்து பத்து,
ஆள் அம்பு, படை பந்தோபஸ்துன்னு சகஜமும் அவர் பின்னால் இருக்கு” என்றான்.
“ஓ! அப்ப உங்களுக்கு மேரேஜ் ஆகி குழந்தைங்கெல்லாம் இருக்கா?”
“ஏன் மெளனமா நிற்கிறீங்க டேவிட், கேட்கறாங்கள்ல பதில் சொல்லுங்க.” என்று எரிகிற
தீயில் எண்ணெய் ஊற்றினான் ராயப்பன்.
“கமலா உன் எதிரே குற்றவாளிக் கூண்டில் நான் நிற்கிறேன். என் தரப்பை நியாயப்படுத்த
முடியாது.”
“டேவிட் என்னை கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்துவிட்டேன். நம் எல்லோருக்குமாக
அவர் தானே சிலுவை சுமந்தார்.”
“இந்தப் பாவி உன்னைக் கைவிட்ட பின் பிதா உனக்கு அபயமளித்திருக்கிறார்.”
“இதோ இங்கே உள்ள ஒவ்வொருக்கும் ஒரு கதையுண்டு.”
“காதலிக்கிறேன் என்று ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றியது பெரும் குற்றமாக உனக்குப்
படவில்லையா கமலா? ஐ மீன்! கமலா என்று பெயர் சொல்லலாமா?”
“உங்களைப் போல செய்தது தவறு என ஒத்துக்கொள்ள வேறெந்த மனிதராலும் முடியாது.”
“ஒத்துக்கொண்டு என்ன பிரயோஜனம் அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை அஸ்தமனமாக்கிவிட்டேனே…”
“இல்ல இது அஸ்தமனமல்ல புதியவிடியல். கர்த்தருக்காக ஊழியம் செய்வதை பெரும் பாக்கியமா
கருதுறேன். இந்த சிலுவையும், பைபிளும் எப்போதும் எனக்கு துணையாய் இருக்கின்றன. எந்த
தேவஆட்டுக்குட்டியும் தேவனிடத்தில் வந்து தானே ஆகவேண்டும்.”
“வாழ்க்கையில் வசந்தகாலத்தை நீ பறிகொடுத்ததற்கு நான் தானே காரணம்.”
“எல்லோரும் அந்திமகாலத்தில் பிதாவிடம் வந்துதானே ஆகவேண்டும். ஒன்றைப் பெறுவதற்கு,
ஒன்றை இழந்தாக வேண்டுமல்லவா.”
“கமலா நான் உன் வாழ்க்கையில் பிரவேசித்து உன் கனவுகளை சுக்குநூறாக உடைத்ததற்கு
ஏதாவது பிராயச்சித்தம் செய்ய வேண்டும் எதுவானாலும் கேள்.”
“வாழ்க்கை கடல் உங்களை ஒரு கரையிலும் என்னை ஒரு கரையிலும் ஒதுக்கி உள்ளது. நம்
வாழ்க்கையை நாம்தானே வாழ வேண்டும்.”
“இருபத்தைந்து வருஷமாக குற்றவுணர்ச்சி என்னை மென்று தின்று கொண்டிருந்தது கமலா.”
“என்னிடம் அன்பும் பரிவும் காட்டிய மனிதரை இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு
சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தவறுசெய்வது மனித இனம் மன்னிப்பு அளிப்பது கடவுளின்
குணம். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதிப்பாராக” எனக் கூறி
கமலா இருக்கையிலிருந்து எழுந்துகொண்டாள்.
டேவிட் அமைதியாக காரை நோக்கி நடந்தார். மேற்கே மின்னல் வெட்டியது. திரும்பி
ஒருமுறை தேவாலயத்தின் மேலுள்ள சிலுவையை பார்த்தார். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை,
உன்னைக் கைவிடுவதுமில்லை என்ற வரிகள் ஞாபகம் வந்தது. அவை டேவிட்டைப் பொறுத்தவரை கர்த்தரால்
சொல்லப்பட்டது அல்ல கமலாவால் சொல்லப்பட்டது.
No comments:
Post a Comment