Monday, May 28, 2018

வதை


1
இந்த இரவின் சக்கரங்கள் நகர மறுக்கின்றன
எனது மனக்குகை வெளவால்களின் இருப்பிடமாக இருக்கிறது
கனவுலகம் எனது பாரத்தை சிறிதுநேரம் இறக்கி
வைத்துவிட்டு ஆறுதல் தரட்டும்
இந்த நடுநிசியில் அமைதியின் வாசல்
திறந்தேயாக வேண்டுமாய் தவமிருக்கிறேன்
வசந்தத்தின் பாதையை எனது ரதம் தவறவிட்டுவிட்டது
துக்கத்தின் புதல்வனுக்கு
இந்த இரவு ஒரு யுகமாகத்தான் நீளப்போகிறது
கண்கள் ஜீவகளையை இழக்கின்றது
இந்த இரவாவது நான் நிம்மதியாக உறங்கவேண்டும்
உயிர்கள் உறக்கத்தில் லயித்திருக்கும் போது நான்
பிசாசு போல் விழித்திருக்கிறேன்
இந்தப் பூமிப்பந்தில் சகலவிதமான உரிமைகளும்
எனக்கு மறுக்கப்படுகிறது
எண்ண அலைகளின் வேகத்தை எனது உடலால்
தாங்கிக்கொள்ள முடியவில்லை
அமைதியற்ற மனம் இந்த இரவில் ஆறுதலைத்தேடி அலைகிறது
உறக்கத்தைப் பறித்துக் கொள்ளுதல் கடவுளின் தண்டனை
முறைகளுள் ஒன்று என தெரிய வருகிறது
அடிமையாயாவது இருக்கின்றேன் யாராவது ஐந்து
நிமிட உறக்கத்தை பிச்சையாய் இடமுடியுமா
சுவர்க்கோழிகள் என்னை கேலி செய்கின்றன
சேவலே கூவிவிடு உன் சத்தத்தைக் கேட்டாவது
சூரியன் எழட்டும்
காலச்சக்கரத்தில் சிக்குண்ட என்னை அது
சாறாக பிழிந்துவிட்டது
நினைவலைகளில் மிதக்கும் காகிதக் கப்பல்
கரைசேர துடிக்கிறது
கங்கையில் முங்கினாலும் எனது பாவங்கள் தொலையாது
விடுதலைக் குயில்களே கீழ்வானம் சிவந்தால்
எனக்குச் சேதி சொல்லுங்கள் ஒவ்வொரு பகலுக்குப்பின்னும்
இரவு வந்தேயாக வேண்டுமா
இரவு என்னைப் பைத்தியக்காரனாக அலையவிட்டுவிட்டது
நரம்புகளைச் சாகடிக்க கிண்ணத்தில் மதுவை
ஊற்ற வேண்டியிருந்தது
இந்த இரவுக் கடலை கடப்பதற்கு கண்ணை மூடிக்கொண்டு
போதையின் பாதையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது
எனது நம்பிக்கை வேர்கள் பலமிழந்துவிட்டன
மரண தேவதையை வரவேற்க கையில் பூமாலையுடன்
காத்திருப்பது இந்த உலகில் நான் ஒருவன் மட்டும்தான்.

2
இதோ என் கண்ணெதிரே கடவுள் இறந்துகிடக்கிறார்
இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் உடல் நாற்றமெடுக்க தொடங்கிவிடும்
இன்றுவரை மரணத்தீவில் அவர் பதுங்கி இருந்திருக்கவேண்டும்
மனிதனின் போலியான நடிப்பைக் கண்டு அவர் ஏமாந்துவிட்டார்
கடவுளின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்க மனிதன் விரும்பவில்லை
அவரது ஆளுகைக்கு கீழிலிருந்து இந்த பூமியையாவது
விடுவித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான்
நியாயத்தீர்ப்பு நாளில் கடவுள் தன்னை சோதனைக்குள்ளாக்குவதை
அவன் விரும்பவில்லை
பாவத்தின் சம்பளத்தை அவன் ஏற்றுக்கொள்ள மறுத்தான்
சகல அதிகாரங்களையும் கொண்ட ஒருவர் இருந்தால்
தனது திருட்டுத்தனம் வெளிப்பட்டுவிடுமோ எனப் பயந்தான்
தனது செல்வத்தைக் கொண்டு தேவலோகத்தையே பூமியில்
அவனால் சிருஷ்டிக்க முடிந்தது
அவன் வாரி இறைத்த பணத்துக்காக தேவதைகள் அவனது
காலடியில் வீழ்ந்து கிடந்தனர்
மனிதன் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள
என்ன செய்வதற்கும் தயாராக இருந்தான்
கடவுளைத் தவிர எதையும் அவனால் விலைக்கு
வாங்க முடிந்தது
விதிக்கு கட்டுப்பட்டேத்தீர வேண்டுமென்று என்னை யாரும்
கட்டாயப்படுத்த முடியாது என்றான்
பக்கத்து வீட்டில் துக்கம் நிகழ்ந்த போதும்
மரணத்தைப் பற்றி அவன் கவலை கொள்ளவில்லை
கடவுளின் இருப்பு இங்கு யாருக்கும் எந்த விதிவிலக்கும்
கிடையாது என்று அவனுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தது
நிரந்தரமான ஏதோவொன்று அவன் கைக்கு அகப்படாமல் இருந்தது
இந்த உடலில் எங்கே உயிர் குடியிருக்கிறதென்று
அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை
எந்த வழியில் சென்றாவது உடலின் தேவையை
பூர்த்தி செய்து கொண்டான்
அடுத்தவன் முதுகை எப்படி படிக்கல்லாகப் பயன்படுத்தி
கொள்வதென்று அவனுக்குத் தெரிந்திருந்தது
கடவுளின் குமாரனென்று யாரும் பூமிக்கு சொந்தம்
கொண்டாடிட வந்துவிடக் கூடாதென்று அஞ்சியே
கடவுளைக் கொலை செய்தான்
கடவுளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களை
விரல்விட்டு எண்ணிவிடலாம்
மனிதனிடம் நம்பிக்கை வைத்த குற்றத்துக்காக
சிதையில் கடவுள் எரிந்து கொண்டிருந்தார்.

3
நீ போதித்த அன்பு இந்த உலகத்தில் ஆட்சி செலுத்தவில்லை
மலைப்பிரசங்கம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது
எனது இருண்ட வாழ்க்கையில் உனது உபதேசங்களே ஒளியேற்றி வைத்தன
இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு ரகசியத்தை நாமிருவரும் மட்டுமே அறிவோம்
எதிர்வருவது நீதான் என்று தெரியாமல் பலமுறை உன்னைக்
கடந்து சென்று இருக்கிறேன்
கடவுள் ஒரு பரதேசி என்பதை இந்த உலகத்தினர் ஒருநாளும்
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
நீ ஏற்றி வைத்த நெருப்பு இன்னும் உள்ளுக்குள் எரிந்து கொண்டுதான் இருக்கிறது
இந்த உலகம் கடவுளின் பொம்மை விளையாட்டு என்பதை
உன் மூலமாகத்தான் நான் அறிந்து கொண்டேன்
அடிமைகளிடமிருந்து எழுந்த முதல் விடுதலைக்குரல் உன்னுடையது
ஆவிக்குரிய வாழ்விலிருந்து நான் விலகிப் போகும்போது உள்ளுக்குள்
உன் குரல் கேட்கும்
சிலுவையில் நீ இறக்கும் தருவாயில் முணுமுணுத்த வார்த்தை
என்னவென்று நான் மட்டுமே அறிவேன்
சத்தியத்தின் பாதையை தேர்ந்தெடுத்தால் மரணம் தான்
பரிசாகக் கிடைக்கும் என்று நான் உனக்குச் சொல்லியிருந்தேன்
கடவுள் உண்டென்று நீ ஏற்றுக் கொண்டாய்
அக்கணமே அந்த சக்தியானது உன் மூலமாக செயல்பட ஆரம்பித்துவிட்டது
இந்த உலகம் அன்பினை போதித்தவர்களையெல்லாம் அலட்சியப்படுத்தியது
மனிதன் தன் சுவர்க்கக் கனவுகளை பணத்தின் மூலம் நனவாக்கிக்
கொள்ள முயன்று கொண்டிருந்தான்
மனித மனம் சாத்தானுக்கும் கடவுளுக்கும் இடையே
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
அதிர்ந்து பேசாதீர்கள் இப்போது கல்லறையில் உறங்குபவன்
வாழும் போது தூக்கத்தைத் தொலைத்தவனாக இருக்கலாம்
இந்தப் பூமியில் வாழ்க்கையின் வேர்களைத் தேடிப் போனவர்களை
விரல்விட்டு எண்ணிவிடலாம்
நான் தவறவிட்ட தேவனின் காலடியை இந்தப் பிறவியிலாவது
அடைய முடியுமா
நான் ராஜபாட்டையை தவிர்த்து முட்களின் பாதையை ஏன்
தேர்ந்தெடுத்தேன் அது உன்னை வந்தடையும் என்பதால் தான்
கர்மவினைகள் என்னைத் துரத்துகிறது எனது இரவு உறக்கத்தை
பேய்கள் களவாடிவிடுகின்றன
அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் பூமிப்பந்தை
தாங்கிக் கொண்டிருப்பது யார்
மாய உலகத்தில் கடவுளின் ஒளிக்கீற்றை காணமுடியவில்லை
நான் நரக இருளில் தள்ளப்பட்டதற்கு விதியை காரணம்காட்டி
தேவன் தப்பிப்பது சரியா
கோள்களின் இயக்கத்தைக் கட்டமைத்தவனைத்தானே
நீங்கள் கடவுள் என்கிறீர்கள்
உங்கள் கடவுள் சாத்தானுடன் நடந்த சூதாட்டத்தில்
இந்த உலகை பணயம் வைத்து இழந்துவிட்டாரா
எதை எதையோ துரத்தி ஓடுகிறேன்
மரணம் என்னை துரத்துவதை மறக்க
குழந்தைத்தனமான கடவுள் நயவஞ்சகமான மனிதர்களைப்
படைத்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா
இரவின் கண்கள் தனிமையில் அழும் கடவுளைக் கண்டிருக்குமல்லவா
இறைவனின் அடிவயிற்றில் எரியும் நெருப்புதானே மனிதனை சாம்பலாக்குகிறது
எச்சமிட்ட காக்கைகளுக்கு மரம் நன்றி சொல்கிறதா என்ன
இன்னும் இன்னும் என்று ஓடும் மனதினை எதைக்
கொண்டு நான் அடக்குவேன்
அங்குசத்தை தொலைத்துவிட்ட பாகனைப் போன்றதுதானே
கடவுளின் நிலைமை
வாழ்க்கையின் கோரமுகத்தை நான் பார்த்துவிட்டேன்
எப்போது இந்த சித்ரவதைக் கூடத்திலிருந்து எனக்கு
விடுதலை அளிப்பாய்
ஒவ்வொரு இரவும் கண்மூடும் போதெல்லாம்
இந்த இரவு எனக்கு விடியக் கூடாது என்றுதானே நான் வேண்டுகிறேன்
எதிர்ப்படுபவர்களில் யாராவது கடவுளாக இருக்கலாம்
என்று எண்ணித்தானே திருவோட்டை நீட்டுகிறேன்
உன்னால் எனக்கு மரணத்தை பிச்சையாகயிட முடியுமா?

No comments:

Post a Comment