Thursday, September 19, 2019

படுகளம்


காமம் கடக்க முடியாத ஒன்றாய் இருக்கிறது. பெண்ணாசை தான் மனிதனை தவறு செய்யத் தூண்டுகிறது. மோகித்தவளை எப்படி மஞ்சத்துக்கு அழைக்கலாம் என மனம் கணக்கு போடுகிறது. அவளைப் பற்றிய நினைவுகளே அலையலையாகப் பெருக மனம் பித்தாகிறது. ஒருவனுக்கு அரூபியாகத் தெரிபவள், இவனுக்கு பேரழகியாகத் தெரிகிறாள். உள்ளுக்குள் காமம் காடாக வளர்ந்து நிற்கிறது. இவன் விதி புத்தியை வென்றுவிடுகிறது. அவளுடைய காலடியில் ராஜ்யத்தை ஒப்படைக்க இவன் தயாராகவே இருக்கிறான். மோகம் ஒரு தீ பற்றிக்கொண்டால் எதனாலும் அதை அணைக்க இயலாது.

முதலில் அவள் தன்னை ஏறெடுத்துப் பார்த்தாலே போதும் என்றிருக்கும். பிறகு ஒரு வார்த்தை பேச மாட்டாளா என ஏக்கமாய் இருக்கும். பால்வதனத்தை விரல் நகங்களால் தீண்டிப் பார்க்க ஆசையாய் இருக்கும். முத்தம் கன்னத்தில் ஆரம்பித்து இதழ்களில் வந்து நிற்கும். இது என் வீடு என் பெயரில் இருக்கிறது. இது என் வாகனம் ஆர்.சி புக் எனது பெயரில் இருக்கிறது என்பது மாதிரி மனம் அந்த யுவதியை தன் உடைமையாக்கிக் கொள்ள தனது காமவடிகாலுக்கு அவளை ஒரு போகப் பொருளாக உபயோகித்துக் கொள்ள திட்டமிடுகிறது. அடைந்தவுடன் அலட்சியமாய் தூக்கிப் போட்டு விடுகிறது. என்ன பெரிய பம்மாத்து. கையை மூடியே வச்சிருந்த ஏதோ தங்கக் காசு வைச்சிருக்கியோன்னு நினைச்சேன். கையை விரிச்சதுக்கப்புறம் தானே தெரிகிறது வெறும் பத்துக் காசுன்னு. மாம்பழம் ருசியாக இருந்தது. கொட்டை முளைக்குமா முளைக்காதா என்று ஏன் கவலைப்படுவானேன்.

வாழ்க்கையில் ஒருதரம் தான் மாம்பழம் சாப்பிடுறோமோ என்ன. வகையா வகையா சாப்பிடறோம். வாங்கி வாங்கி சாப்புடறோம். அதுலயே நிபுணன் ஆயிடுறோம். பழத்தை பார்த்த மாத்திரத்துல அதோட ஜாதகத்தையே சொல்லிடறோம். மாம்பழத்தை ருசிக்க மரத்துல கல்லெறியனும்னு அவசியமில்லை கையில காசிருந்தா போதும். தசரதனுக்கு அந்தப்புரத்தில் பத்தாயிரம் மனைவிகளா என்று வாயைப் பிளக்கிறோம். கண்ணகியாக இருப்பதை விட மன்னனுக்கு ஆசை நாயகியாக இருப்பது அவளது பாதுகாப்பு உணர்வை திருப்திப்படுத்தும். பெண்கள் நிரந்தரத்தை தேடுகிறார்கள் நிரந்தர வருமானம், நிரந்தர வேலை, பதவி, அந்தஸ்து, சொந்த வாகனம். தனது அழகு அங்கு முன்னிருத்தப்படுவதை எந்தப் பெண்தான் விரும்ப மாட்டாள். பட்டத்து ராணிக்கு அடுத்த இடம் என்றால் கசக்குமா?

தனக்கு பதினாயிரம் மனைவிகள் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். தேவலோக ரம்பை, ஊர்வசியை விட ஒயிலானவர்கள். காமத்திலிருந்து விடுபட்டவனே ராஜ்யபரிபாலனத்தை நியாயமாக நடத்த முடியும். அந்தக் காமத்தைக் கடக்கவே பதினாயிரம் மனைவிகள் அவனுக்கு. காமத்தை அடக்குவதென்பது வேறு, காமத்தை கடப்பதென்பது வேறு. சோறு தண்ணியில்லாமல் சிங்கத்தை கூண்டில் அடைத்து வைத்துப் பாருங்கள் பார்ப்பவை எல்லாம் அதற்கு இரையாகத்தான் தெரியும். அடக்குபவன் வெளியில் ஸ்ரீராமனாக வேஷம் போடுலாம். மகாத்மாவாக நடிக்கலாம். உள்ளுக்குள் காமப்புலையனாகத்தான் இருப்பான். பிரசாதத்தை விடுத்து மலத்தை நாடி ஓடும் நாயைப் போல.

ஆசையோடு சங்கமிப்பவர்கள் இச்சை தீர்ந்தவுடன் உறவு முடிந்துவிட்டதாக நினைக்கலாம். ஆனால் அப்படியல்ல. எச்சமிடும் காக்கைகள் தன்னால் விருட்சமான மரத்தில் வந்து அமர்ந்து இளைப்பாறுவதில்லையா. அந்த நிலைதான் அர்ஜூனனுக்கு அவனுக்கும் உலுப்பிக்கும் இடையே நிகழ்ந்த உறவால் பிறந்த அரவானைத்தான் பாரதப் போருக்கு களப்பலியாக கொடுக்க தீர்மானித்துள்ளார்கள். சகாதேவன் தனது பண்டித ஞானத்துடன் நாள்குறித்தது மட்டுமில்லாமல் சாமுத்திரிகா லட்சணம் உடைய ஆண்மகனை களப்பலியாக கொடுத்தால் கெளரவர்களை வீழ்த்திவிடலாம் என்ற உக்தியையும் கண்ணனிடம் கூறிவிடுகிறான். இதுநாள் வரை சகாதேவனின் கணக்கு தவறியதே இல்லை.

அப்படிப்பட்டவர்கள் யார் யார். கண்ணனை தருமன் இழக்கமாட்டான். அர்ஜூனனை கண்ணன் இழக்க முன்வரமாட்டான் ஏனெனில் தனது தங்கையைத்தான் அவனுக்கு தாரை வார்த்திருக்கிறான். அரவானை காளிக்கு களப்பலி கொடுக்கலாம்  என்று கண்ணன் தான் முதலில் தீர்மானித்தான். தனது பிறப்புக்கு காரணமானவன் தன்னிடம் வந்து உதவி கேட்கும் போது அரவானால் தட்ட முடியவில்லை. மகன் தந்தைக்காற்றும் உதவி என்று மறுக்காமல் தான் பலியாக ஒத்துக் கொள்கிறான். ஆனால் கண்ணன் தனக்கு இரு வரங்களைத் தரவேண்டும் என்று கேட்கிறான். அதனை வரமாகக் கருத வேண்டியதில்லை. அரவான் தனது கடைசி ஆசை இன்னதென கண்ணனிடம் தெரியப்படுத்துவதாக கொள்ளலாம். மரணத்தை முத்தமிடுபவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவது வழக்கம் தானே. பிரம்மச்சாரியான எனக்கு பெண் சுகம் என்றால் என்னவென்று தெரியாது எனவே இன்று மாலையே தனக்கு கல்யாணம் நடந்து இந்த இரவு தனக்கு முதலிரவாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறான் அரவான்.

ஓரிரவு மட்டுமே வாழ்ந்து பூவும் பொட்டும் இழந்து கைம்பெண்ணாக யார் முன்வருவார்கள். எந்த யுவதியும் சம்மதிப்பதாகத் தெரியவில்லை. அவகாசம் குறைவு தான் மாலைவேளை வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாளை சூர்யோதயத்தில் போர் தொடங்கிவிடும். கண்ணன் ஒரு முடிவு செய்தான். அவதாரம் தனக்கான காரியத்தை சாதித்துக் கொள்ள தன்னையே கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறது. தர்மத்தை நிலைநாட்டுவதற்கு நீதிநெறியை கண்ணன் மீறவே செய்தான். பெண் தன்மை மிகுந்தவர்கள் கடவுட் தன்மைக்கு மிக அருகாமையில் இருப்பார்கள். அதனால் தான் கண்ணனை கோபிகைகள் தங்கள் கூட்டத்தில் அவனும் ஒருவனாக விளையாட அனுமதித்தனர். ஆண் பெண் சேர்க்கையால் பிறந்த நாமனைவரும் சரிபாதி ஆண்தன்மையும் சரிபாதி பெண் தன்மையும் உள்ளவர்கள். இந்தப் பூமி பெண்தன்மை கொண்டிருப்பதால் தான் படைப்பு சாத்திமாயிற்று. இரக்கம், கருணை, தயை என்பதெல்லாம் பெண் தன்மையோடு சம்மந்தப்பட்டது. கண்ணனுடைய பெண் தன்மை மோகினியாக வடிவெடுத்துச் சென்று அரவானை திருமணம் புரிந்து கொள்கிறது. அவனுடைய காம இச்சையை தீர்த்து வைக்கிறது.

காமம் கடவுள் நிலைக்கு நம்மை இட்டுச் செல்லுமாயின் நல்லது தான். தன்னுடைய மரண நேரத்தை அறிந்தவனுக்கு அதனை மறக்க அவனுக்கு பெண் போதை தேவையாய் இருக்கிறது. பெண் நாட்டமே மனிதன் கடவுளைக் காண்பதற்கு தடைக்கல்லாக உள்ளது. தாய்ச்சியைத் தொடும் ஆட்டத்தில் தான் சுவாரஸ்சியமே அடங்கியுள்ளது. போரை ஆரம்பித்து வைத்த கிருஷ்ணனே அதற்கு பிராயச்சித்தம் செய்ய விரும்பினான். தேரை இழுத்து தெருவில் விட்டாயிற்று அதை நிலைக்கு கொண்டுவந்துதானே ஆகவேண்டும். பூமிக்கு அப்பாற்பட்ட காரியங்களைப் பற்றி கண்ணனால் யோசிக்க முடிந்தது. கிரு
ஷ்ணனுக்கு பதினாயிரம் மனைவிகள். அவன் ஒரு ஸ்திரிலோகன் தான். அவன், தான் ஆத்மா என்றும் தான் மனதாலும், உடலாலும் செய்த காரியங்களால் ஆத்மா பாதிக்கப்படாது என்றும் ஆத்மாவை தண்ணீர் நனைக்காது, நெருப்பு எரிக்காது, வாள் வெட்டாது என்றும் எதனாலும் அதன் தெய்விகத் தன்மை குறைந்துவிடாது என அறிந்திருந்தான்.

அரவானை களப்பலி கொடுத்தாயிற்று. கடவுளின் திட்டம் என்ன வென்று மனிதனால் யூகிக்கக் கூட முடியாது. எது ஆரம்பம் எது முடிவென்று அவனுக்குத்தான் தெரியும். தனது மாயாஜால வித்தையையும், சாதுர்யத்தையும் கெளரவர்களை வீழ்த்த உபயோகப்படுத்திக் கொண்டான் கண்ணன்.

கெளரவர்களை வீழ்த்த குறுக்கு வழியைப் பின்பற்றினான் கிருஷ்ணன். பல போர்விதிகளை மீறினான். அவன் அவதாரம் என்பதால் கிருஷ்ணன் செயல்களுக்கெல்லாம் நாம் நியாயம் கற்பிக்கின்றோம். துரியோதனன், பீஷ்மர், துரோணரின் பலகீனங்கள் என்ன என்பதை கண்ணன் முன்கூட்டியே அறிந்திருந்தான். நடுநிலை தவறி பாண்டவர்களின் மூளையாக செயல்பட்டவன் தான் கண்ணன். அனுமக் கொடி பறக்கும் அர்ஜூனனின் தேரை செலுத்தியபடி தன் திட்டப்படி அனைத்தும் ஒழுங்காக நிகழ்கிறதா என கவனித்துக் கொண்டிருந்தான். யாகங்களும், ஹோமங்களும், நியதியும், சடங்குகளும் இன்றும் பரத மண்ணில் வேர்ப்பிடித்திருக்க வியாசரும் ஒரு காரணம். கடைசியில் தான் பெற்ற சாபத்தால் வேடனடிக்க வீழ்ந்தான் கண்ணன். உடலெடுத்தால் விதி பொம்மையாகத்தான் நம்மை ஆட்டுவிக்கும் என்பதற்கு கிருஷ்ணன் நல்ல உதாரணம். இன்றும் குருட்சேத்திர மண்ணில் அரவானின் ரத்தத் துளிகள் படிந்திருப்பதை நீங்கள் காணலாம்.

Tuesday, September 3, 2019

பரசு



ஐந்து அவதாரங்கள் வந்து சென்றுவிட்ட நிலையில் பூமிக்கு பரிபூரணம் தேவைப்பட்டது. பிரம்ம ஞானத்தைக் காப்பாற்ற சத்ரிய தைரியம் தேவையாய் இருந்தது. ஜமத்க்னிக்கும் ரேணுகாதேவிக்கும் ஐந்தாவதாக பிறந்த குழந்தை சத்ரிய வம்சத்தையே வேரறுக்கும் என யாரும் அப்போது நினைத்துப் பார்க்கவில்லை. பிராமணவம்ச பரசுராமருக்கு சிறுவயது முதல் ஆயுதங்களின் மீது தீராத மோகம்.

வர்ணாசிரம தர்மத்தை மீறியதால் பல விதங்களில் புறக்கணிக்கப்பட்டவர் பரசுராமர். ரத்தத்தைப் பார்த்து மயங்கிவிழும் சராசரி பிராமணரல்ல அவர். அன்று ரிஷி வம்சத்தவர்கள் தங்கள் மனைவிமார்கள் மனதளவில் கூட கற்புநிலை தவறக்கூடாது என நினைப்பார்கள். வாழ்க்கைக்கு அப்பால் எதையோ தேடும் வைராக்கியவாதிகள் தங்கள் மனைவிமார்களை ஒரு பொம்மையாகத்தான் கருதினார்கள். எதிரெதிர் துருவங்கள் தங்களை ஈர்த்துக் கொள்வது இயல்புதான் என்பதை உணரதாவர்கள்.

காலவெள்ளம் தறிகெட்டு ஓடிக்கொண்டுள்ளது. எதைத்தான் கடைசியில் நிலைநிறுத்தப் போகிறது என்பதை யாராலும் அறிய முடியவில்லை. ஏற்கனவே விதிக்கப்பட்டதுதான் நடந்து கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. எந்த சக்தி மனிதர்களை பொம்மையாக ஆட்டுவிக்கிறது என்று தெரியவில்லை.

எந்த நம்பிக்கையில் மனிதஇனம் விடியும் பொழுதுகளை எதிர்கொள்கிறது. வாழ்க்கை ஒருவருக்கு வரமாகவும் ஒருவருக்கு சாபமாகவும் அமைந்துவிடுவது ஏன்? மனித மனம் இரும்பாக இருப்பதினால் தான் கோயிலிலுள்ள தெய்வங்கள் எல்லாம் கற்சிலையாகத்தான் காட்சியளிக்கின்றன.

இயற்கை மனிதனைப் படைத்து அவன் வழியே இந்த உலகை என்ன செய்கிறது என்று தெரியவில்லை. மனித இனம் தோன்ற வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றும் புரியவில்லை. வேதங்கள் ஆன்மாவைப் பற்றி பேசினாலும் மற்ற மதங்களின் வேதங்கள் இந்த உலகினை ஒரு சிறைச்சாலை என்றும், தண்டனை நிறைவேற்றப்படும் இடம் என்றும் நிரூபிக்கின்றன. புத்தர், இயேசு போன்றவர்கள் தப்பிக்கும் வழியைத் தேடியவர்கள் தான். அப்போதைய சமூகம் அவர்களை பைத்தியம் என முத்திரைக் குத்தியது.

சாதாரணமாக நம்மிடையே வாழ்ந்து போனவர்கள் எப்படி தெய்வமானார்கள். மதங்களின் முதுகெலும்பாக அதிசயிக்கத்தக்க மனிதரின் அற்புதங்கள் தான் திகழ்கின்றன. ஞானமடைதல் என்பது நாம் செல்ல வேண்டிய பாதையை தெரிந்து கொள்ளும் ஒரு நிகழ்வா? ஞானமடைந்தவர்களுக்கும் முக்தியின் மேல் நாட்டம் இருக்குமா? ஆமாம் ஜமதக்னி ஞானம் பெற்றார் முக்தியின் மேல் இருக்கும் நாட்டமே அவரது வாழ்க்கையின் நோக்கமாக இருந்தது.

ஜெபம், தியானம், பூஜை மூலம் முக்தியை அடைந்துவிட முடியுமா? உடலை படகாகக் கொண்டு வாழ்க்கைக் கடலை கடந்துவிட முடியுமா? ஞானத்தை கூர் தீட்டுவதன் மூலம் கடவுளுக்கும் நமக்குமான திரைச்சீலையை கிழித்துவிட முடியுமா? மனிதனாகப் பிறந்து தெய்வமாகலாம் என்று பரத கண்டத்தில் நிறைய பேர் நிரூபித்துச் சென்றிருக்கிறார்கள் இல்லையா? கைவிடப்பட்ட மனிதன் இறுதியாக கடவுளின் அறைக் கதவைத் தானே தட்டிப் பார்ப்பான். கர்மவினைகள் மீண்டும் பிறக்க வைக்கும் என்பதால் தான் முனிவர்கள் காட்டின் நடுவே குடில்களை அமைத்துக் கொண்டு கடவுள் காரியங்களில் ஈடுபடுகிறார்களா? மீண்டும் பிறக்க எந்த மனிதனும் விரும்புவதில்லையே எதனால்?

ஞான அக்னியின் மூலம் கடவுள் இருக்கும் பாதையை அறியத்தானா தவம் இருப்பது. ராமனாக இருக்கும் ஒருவன் தனது மனைவி சீதையாக இருக்க வேண்டும் என்ற விரும்புவது நியாயந்தானே! இதோ காலம் தாயத்தை உருட்டுகிறது, விழுகிறது என்ன என்பதை கடவுள் மட்டுமே அறிவார். தவம் செய்பவர்கள் அனைவருக்கும் சிவனைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்துவிடுமா என்ன? காட்சி தந்த சிவன் பரசு என்ற அஸ்திரத்தை தந்தபடியால் தான் பெயருக்கு முன்பாக பரசு என்று ஒட்டிக் கொண்டது.

கற்புக்கரசி கோபத்துடன் பார்த்தால் பச்சை மரம்கூட பற்றி எரியுமாம். ரேணுகாதேவியின் பதிவிரதைத்தன்மை அப்படிப்பட்டது. சுடப்படாத களிமண் பானையில் நீரெடுத்து வருவதே அவளது பதிவிரதைத் தன்மைக்கு அடையாளம். மனதால் கூட அந்நிய ஆடவனைத் தீண்டாததால் அவளால் இந்த அதிசயத்தை நடத்திக் காட்ட முடிந்தது. இது ஆண்களுடைய உலகமாக இருக்கலாம், சகல காரியத்திற்கும் காரணமாக இருப்பவர்கள் ஏனோ பெண்கள் தான். சக்தி சிவம் காலத்திலிருந்து இதுதான் கதை. சக்கரவர்த்திகள் பலரும் பெண்கள் விஷயத்தில் பலவீனமாகத்தான் இருந்தார்கள். பெண்களை தங்களின் உடைமையாக்கிக் கொள்ள நினைத்தவர்களின் துரோகத்தின் வரலாறு இன்னும் நீண்டு கொண்டே உள்ளது. அதற்கு கடவுளின் அகதரிசனத்தின் நிழல் பெண்கள் மூலம் கிடைத்தது ஒரு காரணமாய் இருக்கலாம். ஆனால் பெண்கள் கடவுளைக் காட்ட வல்லவர்கள் அல்ல. இயற்கை ஆண்களுக்கு பெண்களின் மீது கவர்ச்சியை உண்டாக்கி அவனால் கடைசிவரை கடவுளை கண்டடைய முடியாமல் செய்துவிடுகிறது. இயற்கை பெண்களைப் பொத்திப் பாதுகாக்கிறது. ஆண்களை உன் வல்லமையை நிரூபித்து வேண்டியதைப் பெற்றுக் கொள் என விதி வகுக்கிறது. அவள் சீதையானாலும் சர்வலட்சணம் பொருந்திய ஆண் மகனைப் பார்க்கும் பொழுது அவள் மனம் சஞ்சலமடையவே செய்யும்.

தாயானாலும், தாரமானாலும் சிவகாமியின் சிந்தனை சிவனைப் பற்றியதே. எது கிடைக்கவில்லையோ அதன் மீது ஏற்படும் தீவிர நாட்டம் ஒரு பிரளயத்தையே உருவாக்கும். மறுக்கப்படும் விஷயத்தை நோக்கி மனம் பேயாய் அலையும். சந்தர்ப்பம் வாய்த்த பின்னும் சிவனே என்று இருக்க யாரும் இங்கே உத்தமர்கள் இல்லை. சிங்கத்தின் கண்ணுக்கு மான் ஒரு மாமிசமாகத்தான் தெரியும். மனிதர்கள் வாழ்க்கைக்கு அப்பால் உள்ளதை வெல்ல நினைக்கிறார்கள். இறைவன் மனிதனின் பாதையை திசை திருப்பவே பெண்களைப் பயன்படுத்துகிறான். அவதாரங்கள் கூட பெண்ணாசையை வெல்ல முடியாமைக்கு என்ன காரணமாக இருக்க முடியும்? எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் வானரசை உண்டாக்க நினைத்தவர்களின் பேச்சுக்களை மக்களால் புரிந்து கொள்ள முடியாது. பெண் தந்திரமானவள் ஆண்மகனை வளர்க்கும் போதே தன்னை அவன் வெல்ல முடியாதபடிக்கு செய்துவிடுகிறாள். கடவுள் தன் பிரதிநிதியான பெண்கள் மூலம் தான் நினைத்ததை சாதித்துக் கொள்கிறான்.

விடிகாலையில் கந்தர்வலோகத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் ஆற்றங்கரையில் நின்று கொண்டு இயற்கை எழிலை ரசித்துக் கொண்டிருக்கிறான். அது ஒளிரூப உடல் என்பதை அறியாத ரேணுகாதேவி இச்சைக்கு ஆற்பட்டு சிலையாக நிற்கிறாள். அந்த சமயத்தில் சீதையானாலும் சஞ்சலப்பட்டு நிற்கவே செய்திருப்பாள். தேவவம்சம் அரக்க வம்சத்தின் மீதோ அரக்க வம்சம் தேவ வம்சத்தின் மீதோ ஈடுபாடு காட்டுவது புதிதல்ல. அதனால் தான் ராமனே சீதையை தீக்குளிக்கச் சொன்னான். ஆனந்தப் பரவசத்தில் ரேணுகாதேவி தன்னையே மறந்துவிட்டாள். அவள் தன்னிலை உணர்ந்த போது கந்தர்வன் மாயமாய் மறைந்திருந்தான். ஆற்றில் இறங்கி தண்ணீர் எடுக்க முயலும்போது கையிலுள்ள களிமண் பானை சேறாய் உருக்குலைந்து தண்ணீரில் கரைந்தது. ரேணுகாதேவியால் வெறும் கையுடன் தான் குடிலுக்குத் திரும்ப முடிந்தது.

நிலைமையை உணர்ந்த ஜமதக்னி கோபம் கொள்கிறார். இதற்கு அவர் ரேணுகாதேவி தன்னைக் கொன்று இருந்தால் கூட அமைதியாகத்தான் இருந்திருப்பார். துரோகம் மரணத்தைவிடக் கொடியது. யூதாஸ் கடவுளின் பிரதிநிதி என இயேசு அறியாமலா இருந்திருப்பார். புனிதத்தை இழந்துவிட்டவளுக்கு இனி வாழ அருகதை இல்லை என்றே ஜமதக்னி முடிவுக்கு வருகிறார். தன் தாயென்பதால் நான்கு சகோதரர்களும் அவளை கொலை புரிய மறுத்துவிட பரசுராமரோ தந்தையின் பேச்சைக் கேட்க முன்வருகிறார். சிவன் தந்த பரசு என்ற அஸ்திரத்தை முதன்முறையாக பரசுராமர் இங்கு தான் பயன்படுத்துகிறார். என்றோ எழுதப்பட்ட விதியின் நூல் கொண்டு சிவன் இன்றும் ஆட்டுவிக்கிறான்.

Wednesday, June 12, 2019

புத்ரன்


தூது சென்ற கண்ணனால் கெளரவர்களை சமதானம் செய்ய முடியவில்லை. இனி போர் தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு வருகிறான். சதுரங்க ஆட்டத்தில் முதல் காயை கண்ணனே நகர்த்துகிறான். கெளரவர்களின் படைத் தலைவனான கர்ணனிடம் பாண்டவர்களை ஒழித்துவிடும் உக்கிரம் இருப்பதை கண்ணன் அறிந்திருந்தான். வரும் வழியில் அங்க தேச அரசனான கர்ணனிடம் நீ சூதனல்ல சத்ரியன் உன் தாய் குந்தி. நீ பாண்டவர்கள் ஐவரில் மூத்தவன் என்ற உண்மையை தெரியப்படுத்திவிட்டுத்தான் குந்தியிடம் வந்து விவரத்தை தெரிவித்தான்.

குந்தி குந்திபோஜனால் வளர்க்கப்பட்டவள் பிராமண சேவைக்காக துர்வாசர் அளித்த வரத்தை தவறாகப் பயன்படுத்தி சூரியனால் முறைதவறி விவாகத்துக்கு முன்னரே தாயானவள். அந்தச் செயலுக்கான பலன்கள் அவளை நிழல் போல பின்தொடர்ந்து வந்துள்ளது. இந்த உலகில் வினைப்பயன் தானே பிறப்பு இறப்பை நிர்ணயிக்கிறது. குந்தியே மறந்துவிட்ட ஒன்று எப்போதோ அவள் எச்சமிட்டது இப்போது விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.

குந்தியை பகடைக்காயாக உருட்ட கண்ணன் முடிவெடுத்ததுவிட்டான். அவனுக்குத் தேவை பாண்டவர்களின் வெற்றி. சுயம்வரத்தில் சூதனென்று திரெளபதி நிராகரித்த போது முன்வந்து வெளிப்படுத்தாத கண்ணன் தனது எண்ணம் ஈடேறும் பொருட்டு கடைசி ஆயுதமாக இந்த அஸ்திரத்தை உபயோகிக்கிறான்.

ராஜ்யத்தை இழந்தவர்களுக்கு ராஜ்யத்தை அடைய வேண்டுமென்ற வெறி இருக்கும். பாண்டவர்களிடம் அந்த வன்மத்தை தீயூட்டி வளர்த்தவள் திரெளபதி. திரெளபதி போர் நிகழ்வதற்கு காரணமாகவும், குந்தி போரின் முடிவுக்கு காரணமாகவும் அமைந்து விடுகிறார்கள். ஆவதும் அழிவதும் பெண்ணாலே என்ற சொற்றொடருக்கு இதுவும் காரணமாக அமையக்கூடும்.

பாண்டுவைக் கைப்பிடித்து பட்டத்து ராணியாக ஓர்ஆண்டு மட்டுமே குந்தியால் இருக்க  முடிந்தது. பாண்டு இறந்தவுடன் மாத்ரி உடன்கட்டை ஏற அவளது இரு புதல்வர்களையும் தன் மகன்களாகவே வளர்த்து வந்தாள் குந்தி. பாண்டவர்களிடம் எதைக் கொண்டும் பிரிவு வந்துவிடக் கூடாதென்று உறுதியோடு இருந்தாள். அர்ஜூனன் வில்வித்தைக் காண்பித்து வென்று வந்த பரிசுப் பொருளான திரெளபதியை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொன்னதற்கும் இதுதான் காரணம்.

ஆளாகிவிட்ட பாண்டவர்களுக்கு அவர்களின் பங்கை அளிக்க திருதுராஷ்டிரன் முன்வர வேண்டுமென குந்தி விரும்பினாள். சூதில் திரெளபதியை பணயம் வைத்து தோற்றதற்காக பீமன் வெகுண்டெழுந்த போது கூட குந்தி தான் அவனைச் சமாதானப்படுத்தினாள். திரெளபதியை துகிலுரித்தபோது ஆண்மையற்றவர்களை பிள்ளைகளாகப் பெற்றுவிட்டோமே என அவள் வயிற்றில் அறைந்து கொண்டாள். அந்த சம்பவத்துக்கு பிறகு ஐம்புலன்களை இயக்கும் மனமாக ஐந்து பேரையும் திரெளபதிதான் இயக்கி வந்தாள்.

இப்போது அவளுக்கு கர்ணன் தன் மகன் என்பதை விட தான் பாண்வர்களின் ராஜமாதா என்பதே முக்கியமாக இருந்தது. ராஜ்யம் பாண்டவர்களுக்கு கிடைக்க தான் கர்ணனிடம் மடிப்பிச்சைக் கேட்க தயாராக இருப்பதாக கண்ணனிடம் அவள் தெரிவித்தாள்.

போருக்கு முதல் நாள் மாலை கங்கைக் கரையில் உலவிக் கொண்டிருந்த கர்ணனை தயக்கத்துடன் சந்திக்கச் சென்றாள் குந்தி.

“என் மகனே எப்படி இருக்கிறாய்”?

“யாரம்மா நீ என்னை உரிமையுடன் மகனே என்று அழைக்கிறாய்”?

“குழந்தாய்! உன்னை இந்த பாழும் நரகத்தில் தள்ளி விட்டவள் நான் தான்”!

“ஓ, உங்களது குரல் என் நெஞ்சைப் பிளக்கிறதே. பூர்வஜென்ம தொடர்போ! யார் நீங்கள் நான் தேரோட்டி அதிவிரதன் மகன் அங்கதேச அரசன்”.

“நான் துர்பாக்கியவதி குந்தி தேவி”.

“ஓ, ராஜமாதாவா!
துரோணாச்சாரியார் சத்ரியனுக்கு மட்டும் தான் அர்ஜூனனை எதிர்த்து நிற்கும் உரிமை உள்ளது என்ற போது அவையிலிருந்த நீங்கள் உங்கள் திருவாயைத் திறந்து என் மகனே என்று அழைத்திருக்கலாமே. துரியோதனன் எனக்கு மகுடம் சூட்டி அங்கதேச அரசையே எனக்கு அளிக்க முன்வந்த போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். இப்போது நான் கெளரவர்களின் படைத்தலைவன் என்பதால் தானே என்னைச் சந்திக்க வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்ன வேண்டும். துரியோதனனுக்கு என்னால் துரோகம் இழைக்க முடியாது. இந்த செல்லாக்காசுக்கு மதிப்பளித்தவனின் முதுகில் குத்துவது நியாயமாகாது”.

“உன்னை அழைத்துச் செல்லவே வந்திருக்கிறேன்”!

“என் வேதனை மிகுந்த நெஞ்சம் உங்கள் உள்ளத்தில் இப்போதுதான் இரக்கத்தைச் சுரக்கச் செய்ததா”.

“நீ என் மகன். பாண்டவர்கள் ஐவருள் மூத்தவன்”.

“ஆற்றில் மிதந்த எனக்கு அடைக்கலம் அளித்தவர்களை நான்  என்ன செய்வது. சூதனுக்கு ராஜ்யமளித்து உணவு மேஜையில் கெளரவம் பார்க்காது பக்கத்தில் அமரவைத்து உணவு உண்ண இடமளித்து  அழகு பார்க்கும் துரியோதனனை என்ன செய்வது. சுயம்வரத்தில் சூதனுக்கு என்னால் மணமுடிக்க முடியாது என்று ஏசிய திரெளபதி உண்டாக்கிய காயம் அவ்வளவு சீக்கிரத்தில் ஆறிவிடுமா என்ன”?

“வா உனக்கு அங்கீகாரம் அளிக்கிறேன். அஸ்தினாபுரம் உன்னுடையது வா வந்து மகுடம் சூடிக் கொள்”.

“நான் உயிர் என்றால் துரியோதனன் ஆன்மா. என்றாவது உயிர் ஆன்மாவுக்கு துரோகம் செய்யுமா அம்மா. எனக்கு தாய்ப் பாசம் என்னவென்று தெரியாது. நான் சூதன் என்பதால் என் மனைவி படுக்கறையில் கூட அவள் பக்கத்தில் முப்பது வருடங்களாக இடமளிக்கவில்லை தெரியுமா? ராஜ்யத்துக்காக நான் உங்கள் அழைப்பை ஏற்று வருவேனாயின் என்னைவிட ஈனப்பிறவி யாரும் இவ்வுலகில் இருக்க முடியாது. கனவில் கூட என்னால் துரியோதனனுக்கு துரோகம் இழைக்க முடியாது”.

“நான் செய்த தவறுக்கு, நான் தானே பிராயச்சித்தம் தேட வேண்டும். நீ அரசனாக அரியணையை அலங்கரிப்பதை நான் காண வேண்டாமா? அஸ்தினாபுரம் உனதல்லவா”.

“ஆ! அஸ்தினாபுரம் ராஜமகுடம். துரியோதனனுக்கு துரோகம் செய்துவிட்டு, செய்நன்றி மறந்துவிட்டு இதுநாள் வரை பகைமை பாராட்டியவர்களோடு சிநேகிதம் கொள்வது முடியாத காரியம்”.

“எனக்காக இறங்கி வரக்கூடாதா மகனே. உனக்கு சாமரம் வீச உனது ஐந்து சகோதரர்களும் தயாராய் இருக்கிறார்கள்”.

“துரியோதனனுக்கு என்னால் நம்பிக்கை துரோகம் செய்ய முடியாது அம்மா. வேறு ஏதேனும் வேறு கேளம்மா. கொடுத்துச் சிவந்த கரங்கள் அதற்காக காத்திருக்கிறது”.

“நாளை போர் தொடங்கப் போகிறதல்லவா. நீ எனக்கு இரண்டு வரங்கள் தந்தாக வேண்டும், தருவாயா”?

“அம்மா தூக்கி எறிந்தவனிடம் கையேந்த நேர்கிறதே என வருந்துகிறாயா? மாயக் கவர்ச்சிகளுக்கு ஆட்படாத இரும்பு இதயமம்மா என்னுடையது. உயிர் மட்டும் துரியோதனனுக்கு வேறு என்ன வேண்டுமானாலும் கேளும் தருகிறேன்”.

“எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது. பாண்டவர்களைக் காக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை கர்ணா! இந்த அன்னையின் கதகதப்பு இன்னும் அவர்களுக்கு தேவைப்படுகிறது கர்ணா. என்னில் ஒருபாதியாக நீ பத்து மாதம் இருந்தாயல்லவா. உனது சகோதரர்களுக்கென்று நீ செய்யப்போவது இது மட்டுந்தான் ஞாபகமிருக்கட்டும் கர்ணா”.

“கண்ணன் சொல்லிக் கொடுத்தானா வரம் கேட்கச் சொல்லி. பாண்டவர்களுக்காக அந்த வேலையும் பார்க்கின்றானா நீ கேளும் அம்மையே”?

“முதலாவது நீ நாகாஸ்திரத்தை அர்ஜூனன் மீது ஒரு முறை மட்டும் தான் பிரயோகிக்க வேண்டும். இரண்டாவது மற்ற நான்கு சகோதரர்களுக்கும் உன்னால் தீங்கு நேரக்கூடாது”.

பத்து மாதம் என்னைச் சுமந்ததற்காக நான் இதைச் செய்கிறேன். என் வீரத்தை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன். போரில் அவர்கள் வென்ற பிறகு தெரிந்து கொள்ளட்டும் நான் அவர்களின் மூத்த சகோதரன் என்று. எந்த தர்ம கிரந்தமும் நியாயத்தை பார்க்காது. செய்நன்றி தான் மிக முக்கியம். இறக்கும் வரை துரியோதனன் நண்பனாகவே இறப்பேன். கண்ணனிடம் போய்ச் சொல்லுங்கள் இந்த முறையும் அவன் தந்திரமே வெற்றி பெற்றதென்று. நான் போட்ட பிச்சை தான் ராஜ்யம் என்று. மரணத்தை விழைவிப்பவர்களே வாருங்கள். போரில் வீர மறவனாக உயிர்விடும் பாக்கியத்தை எனக்குத் தாருங்கள். சூதனாக வாழ்ந்து சத்ரியனாக சாவது இவ்வுலகில் நான் ஒருவனாக மட்டுந்தான் இருக்கும்.

மேடை


சேதுப்பிள்ளை சென்னைவாசி. நகரத்து டாம்பீகமெல்லாம் கேட்காமலேயே அவரை வந்து ஒட்டிக்கொண்டன. வள்ளி பவனில் முறுவல் தோசையை சாப்பிடாமல் ஒருநாள் முடியாது அவருக்கு. இந்த சாம்பார் ருசிக்காக ஹோட்டல் நடத்தரவனுக்கு கோயில் கட்டலாம் என்ற ரகம் அவர். காபியையும் சாப்பிட்டு கும்பகர்ணன் மாதிரி ஏப்பம் விட்டால்தான் பிறந்ததற்கான பலனை அடைந்துவிட்டதாய் அர்த்தம் அவருக்கு. கைகழுவும் போது எதேச்சையாக கண்ணாடியைப் பார்த்தார். பக்கத்தில் கைகழுவும் உருவத்தை எங்கேயோ பாத்ததாகப்பட. அட நம்ம மாதவன் அவனே தான் கல்லூரி சிநேகிதம் பார்த்து எத்தனை வருஷமாச்சி என சிலாகித்தபடி, சற்று சத்தமாக “மாதவா என்னைத் தெரியுதா? என்ன அடையாளம் தெரியலையா செம்போடை கல்லூரியில ஒண்ணா படிச்சோம்ல இன்னுமா ஞாபகம் வரலை.

மாதவன் நெற்றிப்பொட்டைத் தட்டியபடி “ஓ வர்றது வர்றது இப்பத்தான் ஞாபகத்துக்கு வர்றது என்றார். “இப்பத்தான் கை நனைக்கிறியா எனக்கு ஆச்சி என்ன பிரமாதம் இன்னொரு ரவா தோசை சாப்பிட்டா போச்சி என்ன சொல்ற என்றார் சேதுப்பிள்ளை. “இந்த துடுக்குத்தனம் தான் உங்கிட்ட எனக்குப் பிடிச்சதே என்றார் மாதவன்.

“என்ன ஒரு பிரமாதமான நாள் ரவா தோசை, பேசுறத்துக்கு நீ, கூடவே ஒரு காபி இதான் சுவர்க்கம்ங்கிறது என்றார் சேதுப்பிள்ளை. “என்ன பண்ற, குடும்பம் எங்க இருக்குது என்று விசாரித்தார் மாதவன். “அப்பா  பண்ண புண்ணியம் வீண்போகலை சிவப்பதவி கையெழுத்து போடுறத்துக்கே சம்பளம் தர்றாண்ணா பார்த்துக்கயேன். மூத்தவளுக்கு கல்யாணம் ஆயிடிச்சி மாப்பிள்ளை பெங்களூர்ல எல்&டில வேலை பார்க்கிறார். இளையவன் ஆர்மில ஆபிஸராய் இருக்கான் பிக்கல் பிடுங்கல் இல்லாத லைஃப் என்றார் சேதுப்பிள்ளை. “அப்ப அனுபவி ராஜா அனுபவி தானா என்று கிண்டலடித்தார் மாதவன்.

“என் ஜாதகத்தை விடு கதைக்கு வருவோம். என்ன  விஷயமா சென்னைக்கு வந்த, யாரெல்லாம் வந்திருக்கா என விசாரித்தார் சேதுப்பிள்ளை. மாதவன் சற்று நிதானித்து “அப்பாவோட ரைஸ்மில்லைத்தான் நான் பார்த்துகிட்டு வர்றேன். ஒரு மகன் இருக்கான் அவனை என்கூடதான் வச்சிருக்கேன் என்றார். “சரி மாதவா அந்த பூங்கொடியைத்தானே கல்யாணம் பண்ணிகிட்ட என்றார் சேதுப்பிள்ளை. எங்கேயோ பார்த்தபடி “இல்ல அதுவிஷயமாத்தான் சென்னைக்கு அடிக்கடி வந்து போகும்படி ஆச்சி என்றார் மாதவன்.

“அப்ப பூங்கொடி… என்று கொக்கியைப் போட்டார் சேதுப்பிள்ளை. செருமியபடி தண்ணீர் அருந்திவிட்டு தனது பேச்சை ஆரம்பித்தார் மாதவன். “அது ஒரு பெரிய கதை. எனக்காக தனக்கு பார்த்த வரன்களையெல்லாம் தட்டிக் கழிச்சிகிட்டே வந்தா பூங்கொடி. சீமையிலேந்துதான் வரன் அமையுங்கிறதுல அவ அப்பா உறுதியாய் இருந்தார். எனக்கும் அப்பப்ப தகவல் வரும் வீட்ல ரொம்ப அழுத்தம் கொடுக்கறாங்கண்ணு.

சுயம்வரத்துல கலந்துக்கணும்ணா இளவரசனா இருந்தாகணும் இல்ல. ஆனா மனசுக்கு இதெல்லாம் தெரியுதா. அந்த வயசுல படிச்சி படிச்சி சொன்னாலும் விளங்குதா என்ற? மின்மினிப்பூச்சியால சூரியனுக்கு வழிகாட்ட முடியுமா. விட்டில் பூச்சியாத்தான் போய் சிக்கிக்கிறோம். அதுக்கு வயசும் ஒரு காரணம். காதல்ங்கிற தீபம் எரிய ஆரம்பிச்சதுக்கப்புறம் மனுசனுக்கு சோறு, தண்ணி கூட மறந்து போயிடுறது. நினைப்பும் அவளைப் பத்தி கனவும் அவளைப் பத்தியின்னு பித்து பிடிச்ச மாதியில்ல இருக்கு.

இந்த சினிமா இருக்கே அது கற்பனைன்னு தோணுதா நமக்கு. பாட்டைக் கேட்கும் போதெல்லாம் மெழுகா உருகுதுல மனம். உனக்கு நான் தான் எனக்கு நீ தான்ங்கிறது பசுமரத்தாணி போலல்ல மனசுலர பதிஞ்சிடுது. சினிமாவுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் அதிகம்னு பாழும் மனசு கேட்கிறதா என்ன. மனக்கோயிலுக்கு சாமியை எழுந்தருளச் சொன்னா எப்படி? கண்ணுக்கு அழகா இருக்கறதுனால மட்டுந்தான் ஒரு பொண்ணுகிட்ட மனசை பறிகொடுத்துர்றோம்மா என்ன? எந்த செடி மரமாகும்னும், எந்த காதல் ஜெயிக்கும்னும் யாருக்குத் தெரியும்.

கரைப்பார் கரைச்சா  கல்லும் கரையும்னு எங்க காதலை தண்ணில போட்ட கோலமாதிரி ஆக்கப் பார்த்தாங்க அவ ஊட்ல. அவன்ட்ட என்னத்த கண்ட ஆத்தான்னு ஒப்பாரி வைக்காத குறைதான். இவனப் பாரு தாயி வேப்பம்பட்டி மிராசுதார் பையம் சொந்தமா வீடு இருக்கும, கார் இருக்கு, கூப்பிட்ட குரலுக்கு சேவகம் பண்ண ஆளுங்க இருக்காங்க ராணி மாதிரி இருக்கலாம் என்ன தாயி சொல்ற, இந்த மாதிரி பஜனை தான் அவ ஊட்ல எந்நேரமும்.

அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள்கிறது இராமாயணத்துல வேணாம் ஒத்து வரலாம், தினசரி வாழ்க்கையில நடக்கக்கூடிய காரியமா இது. குலம், கோத்ரம்னு எத்தனை உப்புக்கு பேராத சமாச்சாரங்கள் இந்த காதலுக்குத் தடையா இருக்கு. சின்னஞ்சிறுசுக ஏதோ ஆசைப்படுதுக வாழ்ந்துட்டுப் போகட்டும்ன்னு உடுறாங்களா என்ன. குடும்ப கெளரவமாம், மனசை ஒருத்தன்ட்டயும் உடம்பை ஒருத்தன்ட்டயும் கொடுக்கறத்துக்கு பேரு கெளரவமா. என்ன காசு பணம் கடைசில வரட்டியைப் போட்டுத்தானே எல்லோரையும் எரிக்கப் போறாங்க.

பணக்கார இடம் வளைச்சிப் போட பாக்குறான்னு கடைசியா எங்க அப்பாகிட்ட வந்து நின்னுது இந்த விஷயம். எங்க அப்பாவுக்கு எம்மேல வைச்ச நம்பிக்கையே போச்சி. படிக்க அனுப்பின இடத்துல ஏன்டா உனக்கு இந்த வீண் வேலைன்னு கேட்க எனக்கு தர்மசங்கடமா ஆயிடிச்சி. நம்ப தராதரம் என்னன்ணு உனக்கு புரியவேணாமாடான்னு என் அம்மா என்னை வார்த்தையாலயே கொள்ளி வச்சிடுச்சி. நான் கிழிச்சி கோட்டை மீற மாட்டன்னு இப்பயும் நான் நம்புறேன்டான்னு அப்பா மட்டும் சொல்லிகிட்டே இருந்தாரு.

எந்தப் பொறியில எங்க அப்பாவை சிக்க வைக்கலாம்னு பூங்கொடி அப்பா தரப்புல அலைஞ்சிகிட்டே இருந்தாங்க. மில் ஓனர்கள் சங்கத்திலேர்ந்து பணத்தை எங்க அப்பா கையாடிட்டதா பொய்ப் புகார் கொடுக்க வைச்சி அவரை இரண்டு நாள் லாக்கப்ல வைச்சி அடிச்சி விசாரிச்சியிருக்காங்க. அவமானம் தாங்காம எங்க அப்பா தற்கொலை பண்ற அளவுக்கு விஷயம் எல்லை மீறி போயிடிச்சி. சாகறத்துக்கு ஒருநாள்முந்தி சொந்தக்கார பொண்ணைக் காண்பிச்சி தாலிய கட்டுன்னாரு, நான் வேற என்ன பண்றது. மனசை கல்லாக்கிகிட்டு தாலிய கட்டுனேன்.

எனக்கு ஆனதுகப்புறம் அவளை சும்மா விடுவாங்களா. அவளுக்கும் பண்ணி வைச்சாங்க. காசு பணம் உள்ளவனுங்க பொண்ணை பொருளாகத்தான் பார்ப்பாங்க போலிருக்கு. சீர் செனத்தி மட்டுமில்லாம எங்க சங்கதி வெளியே தெரியக்கூடாதுன்னு அம்புட்டு சொத்தையும் மாப்பிள்ளை பேருக்கு  எழுதி வைச்சாரு பூங்கொடி அப்பா. ஆண்டவன் போடுறது எப்பவுமே தப்புக் கணக்காத்தான் இருக்கு. ஆடி அடங்குற வரைக்கும் மனுசன் என்ன ஆட்டம் போடுறான். கடைசியா கோணித் துணியையும் உருவிக்கிட்டுத் தானே எரிய உடுறான் வெட்டியான். கொலை செய்யக் கூட தயங்காதவன் தான் ஊர்ல சொத்து பத்தோட இருக்கான். பழி பாவத்துக்கு அஞ்சுறவன் இன்னும் பிச்சையெடுக்கத்தான் வேண்டியிருக்கு. இந்த உலகத்துல பணத்தால எதையும் விலைக்கு வாங்கிடலாம் என்பது தான உண்மை நிலைமை.

இந்த வயசுலயும் வாழ்க்கைனா என்னண்ணு புரிஞ்சும் புரியாத மாதிரிதான் இருக்கு. ஒருத்தன் பிச்சையெடுக்கறதும் ஒருத்தன் பேரரசனா இருக்கறதும் எதனால. நான் வக்கத்துப்  போனதுனால தானே அவ எனக்கு வாக்கப்படலை. யாருக்கு யாரு முடிச்சு போடுறதுன்னு இறைவன் தான் முடிவு பண்றாண்ணு நம்ப முடியுதா? ஜனனத்துக்கும் மரணத்துக்கும் இடையே ஜீவன் போராட்டம் தான் நடத்த வேண்டியிருக்கு. அவள இழந்ததுக்கு அப்புறம் வாழ்க்கையில எனக்கு பிடிப்பு இல்லாம போச்சுது. கப்பல் கவுந்திருந்தா கூட அந்தளவுக்கு துக்கம் ஏற்பட்டிருக்காது. என்னை வேரோட பேத்து வேற இடத்தில் வலுக்கட்டாயமா வச்சது மாதிரி ஆகிடிச்சி. சினிமா உட்பட எல்லாக் கண்றாவியைும் என் வாழ்க்கையிலிருந்து தூர எறிஞ்சிட்டேன்னா பாத்துக்க. இந்த வியூகத்தை யாரால உடைக்க முடியும். இங்கிருந்து வெளியேறும் வழி யாருக்குத் தெரியும். கங்கையில முழுகுனா பண்ணுண பாவம் தொலைஞ்சிடுமா என்ன? பிறப்பை வச்சி உயர்வு தாழ்வுன்னு பாகுபாடு காட்டுற கருமாந்திரம் எப்பத்தான் முடியுமோ. உபதேசம் பண்றதுனால திருந்துற கூட்டம் இல்ல இது. எல்லாம் விதின்னு நினைச்சுக்கிறத தவிர நம்மால் வேற என்ன பண்ண முடியும்.

புகுந்த வீட்டில பிரமை புடிச்ச மாதிரி இருந்திருக்கா. என்னத்த மனசுல வச்சிகிட்டு இருந்தாலோ என்னவோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். பூங்கொடியை டாக்டர்கிட்ட கொண்டு போய் காட்டியிருக்காங்க. அவர் கைமீறிப் போச்சுது கீழ்பாக்கத்துக்கு கொண்டு போகச் சொல்லி இருக்காரு. அவள அங்க போய் உட்டுட்டு வந்தவுணுங்க தான் திரும்பிப் என்ன ஏதுன்னு யாரும் போய் பாக்கலை. விஷயம் என் காதுக்கு வந்துச்சி நான் துடிதுடிச்சி போயிட்டேன். அப்பயே என் உயிர் போயிடிச்சி, ஏதோ நடைபிணமாத்தான் இப்ப அலைஞ்சிகிட்டு இருக்கேன்.

நான் தான் காதலிச்ச பாவத்துக்காக மாசம் ஒரு தடவை வந்து ஹார்லிக்ஸ், பூ, பழம், புடவை எடுத்துட்டு வந்துப் பாத்துட்டுப் போவேன். என்ன சாமியோ என்ன பூதமோ அவ வாழ்க்கை சீரழிஞ்சதுக்கு நான்தானே காரணம். அவ கனவு சிதைஞ்சி போய் நான்கு சுவத்துக்குள்ள நிர்கதியாய் நிற்கிறாளே இத  நான் யாருகிட்ட போய்ச் சொல்லி அழுவேன். ஒவ்வொரு மாசமும் வரும்போது என்னைய அடையாளம் தெரிஞ்சிக்கிறாளா அழைச்சிட்டு போயிடலாமான்னு பார்ப்பேன். கோயில்ல கடவுளே இல்ல இருக்கிறது வெறும் கல்லுதான். அத கும்புடற மனுசன் மனசும் கல்லுதான். விதிக்கிறவனுக்கு கொஞ்சம் கூட மனசுல ஈரமே இருக்காதா. பூங்கொடியோட நினைவு நான் இறக்கிற வரைக்கும் ஏதோவொரு மூலைல இருந்துகிட்டுதான் இருக்கும் என மாதவன் தன் கதையை சொல்லிக் கொண்டே போக. சேதுப்பிள்ளைக்கு முதன் முறையாக அன்று ரவா தோசை கசந்தது.

Wednesday, May 29, 2019

பொம்மை


ராமையாப்பிள்ளைக்கு வர்ஷினியிடம் அலாதிப் ப்ரியம் என்ன இருந்தாலும் தவமிருந்து பெற்ற பிள்ளையல்லவா, பாசம் இல்லாமல் போகுமா. வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிடிப்பு வேண்டுமே – ராமையாப்பிள்ளைக்கு பிள்ளைப் பாசம். வர்ஷினிக்கு ஏதாவது ஒன்று என்றால் ராமையாப்பிள்ளைக்கு மூஞ்சி செத்துப் போய்விடும். இரண்டரை வயது தான் ஆகிறது அது பேசும் மழலை இருக்கிறதே. குழலும் இனிதில்லை, யாழும் இனிதில்லை மழலைதான் இனிதுயென சும்மாவா சொன்னார்கள்.

ராமையாப்பிள்ளைக்கு திடகாத்திர சரீரம் தான். ஆனால் பிள்ளைப்பேறு என்னவோ தள்ளிப் போய்விட்டது. என்ன இருந்தாலும் தலையில என்ன எழுதி இருக்கானோ அது தானே நடக்கும். சகட யோகம் தான் என்ன செய்வது. நகை போட்டு அழகு பார்க்க ஆசை வரத்தானே செய்யும். எந்தப் பெண் பிள்ளையும் அப்பாவுக்கு இளவரசி தானே. மளிகை கடை வரும்படி வாய்க்கும் வயிற்றுக்கும் சரியாக இருக்கிறது. மதியம் சாப்பிட வரும்முன் ராஜிக்கு பத்து தடவையாவது போன் வந்துவிடும், வர்ஷனி என்ன செய்கிறாள் தூங்கினாளா, சாப்பிட்டாளா என்று!

ராஜி ராமையாப்பிள்ளையும், வர்ஷினியையும் கண்ணுக்குள் வைத்துதான் பாதுகாத்து வந்தாள். குழந்தையின் மழலைப் பேச்சின் அர்த்தத்தை அம்மாக்கள் எப்படித்தான் புரிந்து கொள்கிறார்களோ? குழந்தை என்று வந்தவுடன் மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சமாக ஆகிவிடுகிறது அம்மாக்களுக்கு. தாய்மையை மதம் தெய்வீகத்துடன் தொடர்பு படுத்துவது இதனால் தானோ. பேறு காலத்தில் அம்மாக்களின் கனவு என்னவாக இருந்திருக்கும்? பிரசவம் இரண்டாம் பிறப்பு என்று சும்மாவா சொன்னார்கள்.

தன்னலத்தை தியாகம் செய்துவிடுவதால் தான் தாய் தெய்வமாகிவிடுகிறாள். ராமையாப்பிள்ளைக்கு வரும்படி குறைவு என்றாலும் அதை வைத்து குடும்பம் நடத்த தெரிந்திருந்தது ராஜிக்கு. நகை நட்டுக்கு ஆசைப்பட்டாலும் அதை வெளிப்படுத்தாமல் உள்ளத்திலேயே வைத்து பூட்டிக் கொள்வாள். தெய்விகம் மனதில் குடிகொள்ளும்போது கணவன் மனைவி உறவே புனிதத்தன்மையை அடைந்துவிடுகிறது. ராமையாப்பிள்ளை செய்த புண்ணியம்தான் ராஜி அவருக்கு மனைவியாக அமைந்தது. அது கொண்டா இது கொண்டா என நச்சரித்தால் ராமையாப்பிள்ளையால் நிம்மதியாக இருக்க முடியுமா? இன்னாருக்கு இன்னாரென்று இறைவன் தானே எழுதி வைத்திருக்கிறான்.

ராஜி அளந்து அளந்துதான் பேசுவாள். தன் பேச்சால் கணவனின் உள்ளம் நோகக்கூடாது என்பதில் குறியாய் இருப்பாள். வீட்டிற்கு படியளப்பவள் அன்னபூரணிதானே. சலனமற்ற குளத்தில் கல்லெறிபவன்தானே கடவுள். அவனுக்கு அது வேடிக்கை நமக்கு. இந்தக் கலிகாலத்துல ராஜி சீதையைவிட மேலானவள்தான். ராமையாப்பிள்ளை பெயரில் மட்டுமல்ல நிஜத்திலும் ராமர் தான். பொய் மானுக்கு ஆசைப்பட்டது தானே சீதை செய்த பெருந்தவறு. ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் மனிதனின் வாழ்க்கை முழுமையும் வனவாசம் தானே. பதிவிரதை என்பதால் விதி வேலை செய்யாமல் விட்டுவிடுமா என்ன? ஆட்டுவிப்பவன் ஒரு தான்தோன்றி அவனிடம் போய் பந்த பாசத்தைப் பற்றி பேச முடியுமா? அவன் வலையை இழுக்கும் வரைதான் இங்கு விளையாட்டு கூத்தெல்லாம். உறவைச் சொல்லி அழுவதை காது கொடுத்து கூட அவன் கேட்க மாட்டான்.

ராமையாப்பிள்ளைக்கு ராஜி எது சமைத்துப் போட்டாலும் தேவாமிர்தம்தான். வீடு இளைப்பாறும் இடமாக இருந்துவிட்டால் வேறொன்றும் தேவையில்லை ஒருவனுக்கு. அவளுடைய அன்பான வார்த்தைகளால் குடும்பசுமை பாரமாகத் தெரியவில்லை ராமையாப்பிள்ளைக்கு. ஒன்பதாம் மாதம் வளைகாப்பு நடத்துவதற்குக் கூட மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான் ராமையாப்பிள்ளை, ஆனாலும் ராஜி முகம் கோணவில்லை. பிரசவத்திற்கு ராஜி நகையை அடகு வைக்க நேர்ந்த போதும் அவள் அமைதியாக இருந்தாள். அவளைப் பொறுத்த வரை தாலி வெறும் மஞ்சள் கயிறு அல்ல. கணவன் கையாலாகாதவனாக இருந்தாலும் மனைவிக்கு ஸ்ரீராமன் தானே.

அவள் சீதனமாகக் கொண்டு வந்ததை அடகு வைக்க நேர்ந்த போதும் அவள் கல்லைப் போலத்தான் இருந்தாள். சிவனும் சக்தியும் இணைந்து சிவமாகிவிடுவது ஒருசிலர் வாழ்க்கையில் தான் நேரும். ஆண்கள் புத்திப்பூர்வமாக வாழ்பவர்கள். பெண்கள் இதயப்பூர்வமாக வாழ்பவர்கள் என்பது உண்மைதான். நடக்கப் போவதை எப்படியோ யூகித்து விடுகிறது பெண்கள் மனம். குழந்தையை இடுப்பிலும், கணவனை மனதிலும் சுமக்கும் அவள் தனது உள்ளக்கிளர்ச்சிகளை சம்ஹாரம் செய்து கொள்கிறாள். தியாகத்தின் மூலம் மட்டுமே தெய்வத்தை அடைய முடியும் என்பதற்கு ராஜி ஒரு நல்ல உதாரணம்.

ராமையாப்பிள்ளைக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் உண்டு என்பதை கல்யாணமான புதிதில் தான் அறிந்தாள் ராஜி. அவள் மீது செய்து கொடுத்த சத்தியத்தினால் தான் அவர் இந்த நொடிவரை சிகரெட்டை தொடாமல் இருக்கிறார். ராமையாப்பிள்ளைக்கு பேச்சு ஒன்று செயல் வேறொன்று என்று கிடையாது. இதுவும் அவர் முன்னேறாததற்கு ஒரு காரணம். இப்போதெல்லாம் வியாபாரத்தில் பொய்யைத்தானே முதலாகப் போடுகின்றார்கள். பணத்தை வைத்திருப்பவனின் பின்புலத்தை ஆராய்ந்து பார்த்தால் தெரியும் அவன் எப்படிச் சம்பாதித்தானென்று. சமூகம் உண்மை பேசுபவனை அலட்சியப்படுத்தும் பிழைக்கத் தெரியாதவன் என முத்திரை குத்தும். ஏய்த்து பிழைப்பு நடத்துபவர்கள் மற்றவர்களின் முதுகினை படிக்கல்லாகப் பயன்படுத்துவார்கள். வலியச் சென்று ஏமாறுபவர்கள் எந்நாளும் நல்லவர்களை நாடி வரமாட்டார்கள்.

ராமையாப்பிள்ளைக்கு சாண் ஏறினால் முழம் சறுக்குகிற கதைதான். மூணு வயதில் வர்ஷினிக்கு காது குத்த வேண்டுமென்று ராஜி  ஞாபகப்படுத்தியதிலிருந்து அவர் பணம் தோதுபண்ணுவது எப்படி என யோசிக்க ஆரம்பித்தார். மூலவராக தெய்வம் இருந்தாலும் பணம் தானே பாதாளம் வரை பாய்கிறது. பணம் பண்ணும் காரியம் தெரியாதவர்கள் உலகில் செத்தாரைப் போலத்தான் திரிய வேண்டியிருக்கிறது. உலகை ஆள்பவனுக்கு நாலு முழ வேட்டி போதும், மனிதர்களுக்குத்தான் ஆயிரம் படாடோபங்கள் தேவைப்படுகிறது. தேடிப்போனவர்களைத் தன்னைப்போல் ஆண்டியாக்குபவன் தானே முருகன். ராமையாப்பிள்ளையின் வயதையொத்தவர்கள் புண்ணியப் பலன்களை சேர்த்து வைததிருந்தார்களோ இல்லையோ பணம் சம்பாதிக்கும் கலையை நன்கு அறிந்திருந்தனர். காசேதான் கடவுள் என்பவர்கள் மூன்று தலைமுறைக்கு சேர்த்து வைத்துவிட்டுத்தான் சாகிறார்கள். விதியை மாற்றி எழுதத்தான் மருத்துவர்கள் இருக்கிறார்களே. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லையென சொல்லிவிட்டுத்தானே சிலையாய் நிற்கிறார் திருவள்ளுவர்.

கோயிலுக்கு போகின்றவர்களைத்தான் சோதிக்கிறது சாமி. கோயில் யாருக்கும் மோட்சத்தை அளிக்காது. பிறப்பருக்கும் வித்தையை உனக்கு சொல்லித் தந்துவிட்டால் அப்புறம் கோயில் எதற்கு சாமிதான் எதற்கு. ஆறுதலுக்கு ஒரு மகளிருக்கிறாள் அவளுக்கு நாளும் கிழமையுமாய் சடங்கு, சம்பிரதாயம் செய்யத்தானே வேண்டியிருக்கிறது. வர்ஷினிக்கு தோடு செய்ய ராஜியின் வளையலை விற்கலாம் தான், ஆனால் வளையலோ மார்வாடியிடம் இருக்கிறது ராமையாப்பிள்ளை என்ன செய்வார். விதி சந்தியில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது அவரை. மளிகை கடைக்கு வாடகை பாக்கி, கடைப் பையன்களுக்கு சம்பளப் பாக்கி வேறு. உறவுகளை அறுத்துவிட்டு ஓடிவிடலாம் தான் சாமானியர்களால் இது முடிகிற காரியமா?

வட்டிக்கு எவ்வளவு தான் வாங்குவாய் பத்திரத்தைக் கொண்டுவா என்று சொல்லிவிட்டான் மார்வாடி. பத்திரத்தில் வில்லங்கம் இருக்குமென்று ராமையாப்பிள்ளைக்குத் தெரியுமா என்ன? மார்வாடி கைவிரித்துவிட சொல்லாமல் கொள்ளாமல் அமைதியாக வீட்டிற்கு வந்து சாப்பிடாமல் படுத்தவர்தான். மாரடைப்பால் உயிர் பிரிந்து விட்டது. பிரக்கனை இல்லை என்று பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து வந்த ராஜி, ராமையாப்பிள்ளை தன்னையும் குழந்தையையும் அனாதையாக்கிவிட்டுச் சென்றுவிட்டார் என்பதை அறிந்து சிலையாக நின்றுவிட்டாள்.

ராமையாப்பிள்ளை வர்ஷினியிடம் விளையாடும் போது அவள் பொம்மைத் துப்பாக்கியால் சுடுவாள். ராமையாப்பிள்ளை செத்துவிடுவது போல் கீழே விழுந்துவிடுவார். வர்ஷினி ஓடிவந்து அவர் பாதங்களை வருடும் போது உயிர்த்தெழுவது போல் டாணென்று எழுந்துவிடுவார். இதை மனதில் வைத்துக் கொண்டு வர்ஷினி சடலத்தின் பாதங்களை வருடுவதைப் பார்த்து யாரால்தான் ஜீரணிக்க முடியும். கடவுளுக்கு கண்ணிருந்தால் இந்நேரம் ராமையாப்பிள்ளை உயிர்த்தெழுந்திருக்க வேண்டாமா?

Tuesday, May 28, 2019

போதி


ஆசை, வெறி இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறதா என்ன. மனதை அடக்கத் தெரிந்திருந்தால் மனிதன் அத்துமீறி குற்றம் இழைப்பானா? ஆதாம் அறிவுக் கனியை உண்ட போது உணர்ச்சி வெள்ளம் கரையை உடைத்து பாய்ந்தது. எண்ண அலைகள் மனதில் எழுவதும் அடங்குவதுமாகத் தான் இருக்கும். எண்ணத்தின் மூலவேர்களை ஆராயச் சொன்ன சாதுக்கள், எண்ணத்தின் பின்னாலிலிருந்து உன்னை இறைவன் பார்க்கிறான் என்றார்கள்.

ஸ்ரீராமர் தெய்வமாக போற்றப்படுவதற்கு பதிவிரதன் என்ற ஒரு காரணம் போதாதா. அடிமை சேவகம் செய்து பிழைக்கும் நமக்கு சந்தர்ப்பம் அமையவில்லை அவ்வளவுதான். பத்தாயிரம் மனைவியரைக் கொண்ட தசரதனுக்கு பிறந்தவர் ஒழுக்கசீலராக வாழ்ந்தார் என்றால் எவ்வளவு வைராக்கியம் அந்த மனிதருக்கு இருந்திருக்க வேண்டும்.

கிறித்தவத்தில் சொல்வார்கள்உன் பிதா பரமண்டலத்தில் உத்தமராக இருக்கிறார் என்கின்ற ஒரே காரணத்திற்காக நீ உத்தமனாக இருக்க வேண்டும்என்று. இந்தக் கணினி யுகத்தில் மனிதன் தவறு செய்ய யோசிப்பதில்லை. அதன் விளைவுகளைப் பற்றியும் எண்ணிப் பார்ப்பதில்லை. உடலெடுத்ததே சுகத்தை அனுபவிப்பதற்காகத்தான் என அவன் நினைக்கிறான்.

செய்த தவறுக்கு தண்டனை கிடைக்காமல் தப்பிவிடலாம். ஆனால் மனதில் குற்றவுணர்ச்சி இல்லையென்றால் அவனே அரக்கன். .பி.கோ சட்டம் மாதிரி கடவுளின் விதி இந்த உலகத்தில் செயல்படுகிறது. வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் அவ்விதியிடமிருந்து தீர்ப்பினைப் பெறுகிறோம். ஒரு மனிதனின் இருப்பை அழிக்க முயல்பவன் மனஅளவில் இன்னும் மிருகமாகத்தான் இருக்கிறான்.

கொலை பாதகன் தன் அந்திம காலத்தில் மரணத்தை எதிர்நோக்கும் போது மிகுந்த துன்பத்தை அனுபவிப்பான். முக்கியப் பிரஞை என்பதற்காக இறந்தபின் அவனை கடவுளுக்கு அருகில் அரியாசணத்திலா அமர வைப்பார்கள். மோசஸின் கடவுள் தான்கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்என்றாரா இல்லை. உண்மையான கடவுளும் அதே கொள்கை உடையவர் தான்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டலாம் தான். அது உள்ளுக்குள் கடவுளை பிரவேசிக்கச் செய்யும். ஆனால் இறப்பிற்கு பிறகான வாழ்க்கைக்காக அவயங்களை அடக்கிக் கொண்டா இருக்கிறோம். ஒருவர் எத்தகையவர் என்பதை அவரின் மரணமே தீர்மானிக்கிறது. உயிர்த்தெழுந்த போதுதானே உலகம் அறிந்துகொண்டது இயேசு கடவுளின் குமாரன் என்று.

இறைவனின் ஆட்சி அதிகாரம் அதாவது கடவுளின் மேலாதிக்கம் இன்றைய உலகத்தில் குறைவாகவே உள்ளது. அறம் நிலைநிறுத்தப்பட வேண்டுமென்ற விருப்பமுள்ள மனிதர்கள் இந்த உலகத்தில் பிறப்பது இல்லை. கண்டுபிடிப்புகள் மிகுந்த இந்தக் காலகட்டத்தில் மனிதன் கைவிடப்பட்டுவிட்டான். இந்த உலகம் கைவிடப்பட்ட உலகமாகிவிட்டது. இறைவனை சொந்தம் கொண்டாடுபவர்கள் களங்கமற்றவர்களாக இல்லை. தங்களின் வழியே சிறந்தது எனச் சொல்லிக் கொள்ள இங்கே யாருக்கும் அருகதை இல்லை.

கடவுளின் வெறி இருந்த காலம் மலையேறிவிட்டது. இந்த உலகம் கடவுளின் வீடு என்று எண்ணியவர்கள் இங்கே குறைந்துவிட்டனர். சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தெய்வத்தை மறந்துவிட்டார்கள். புத்தர் தான் பிறந்த தேசத்தால் புறக்கணிக்கப்பட்டவர். அமைதிப் புரட்சி செய்ய தன் குமாரனை கடவுள் இனி இந்தப் பூமிக்கு அனுப்பி வைக்க மாட்டார்.

வாழ்க்கைச் சிக்கலைத் தீர்க்க புனிதநூல்களில் தீர்வைத் தேடியது இன்று அடியோடு நின்றுவிட்டது. மனித குலம் தன்னலத்தையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. மனித மனம் எதனால் கடவுளிடமிருந்து விலகிச் சென்றது என்ற காரணத்தை கண்டறிய முடியவில்லை. உலகம் பணத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறது. நீ பணத்தால் எதையும் இங்கு சாதித்துக் கொள்ளலாம என்பதே இன்றைய நிலை.

யார் பிறந்து வந்தாலும் இனி உலகத்தில் தர்மத்தை நிலைநாட்ட முடியாது. மனிதன் அன்பு செலுத்துவதற்குக்கூட பிரதிபலனை எதிர்பார்க்கிறான் தனது மகன் நல்லவனாக இருக்க வேண்டுமென்று பெற்றோர்கள் ஆசைப்படுவதில்லை, அவன் செல்வந்தனாக இருக்க வேண்டுமென்றே அவர்கள் விரும்புகிறார்கள். அந்தஸ்து மனிதனிடம் அனைத்தையும் கொண்டு வந்து கொட்டுகிறது.

கடவுளர்பூமி என்று இந்த உலகை இனி சொல்லிக் கொள்ள முடியாது. சத்தியவெறி கொண்டவர்கள் கடவுளின் பேரரசை அமைக்க விரும்பினார்கள், மக்கள் அவர்களுக்கு மரணத்தையே பரிசாகத் தந்தார்கள். இக்காலத்தில் வாலிபர்களுக்கு முறையற்ற முறையில் உடலின் தேவைகளை பூர்த்திசெய்து கொள்வது தவறெனப்படவில்லை. தீய நோக்கங்களுக்கு தன் மனதை எளிதாக ஒப்புக்கொடுத்து விடுகிறார்கள். தீய பார்வையே குற்றம் புரிந்ததற்குச் சமம் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

கடவுள் மனித குலத்தை கைவிட்டுவிட்டான். அவன் வகுத்த விதியை மட்டும் அவன் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் பூமியில் பிறப்பு நடைபெறுகிறது. மனிதர்கள் தங்களுக்கு தாங்களே முடிவைத் தேடிக் கொள்வார்கள் என்று கடவுள் முடிவெடுத்துவிட்டார். புத்தரின் சூன்யக் கொள்கை வெற்றி பெற கடவுளே காரணமாகிவிட்டார். கடவுள் மனிதனின் ஆத்மாவைக் கொன்று அவனை பழிதீர்த்துக் கொண்டார்.

புத்தர் சரியாக பனிரெண்டு ஆண்டுகள் கழித்து தனது ஊருக்குத் திரும்பி இருந்தார். தந்தை சுத்தோதனர் தனது ஒரே மகனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். “எல்லா வசதிகளும் இந்த நாட்டில் இருக்க எதைத் தேடி நீ வெளியேறினாய்என்றார். “உடல் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வது வாழ்க்கை இல்லை தந்தையேஎன்றார் புத்தர். “இன்னொரு முறை என்னை தந்தையே என்று அழை, இதற்காகத்தான் பனிரெண்டு ஆண்டுகளாக காத்திருந்தேன்என்றார் கண்ணீர் மல்க சுத்தோதனர்.

சத்தியத்தின் ஒளி என் மூலமாகச் செயல்பட இடம் கொடுத்துவிட்டேன் தந்தையே, இனி நான் உங்கள் மகனல்லஎன்றார் புத்தர். “எனக்குப் பிறகு இந்த ராஜ்யத்தை யார் ஆள்வது என்று நினைத்துப் பார்த்தாயா?” என்றார் சுத்தோதனர். “இந்த நதி கடலோடு கலந்துவிட்டது, இனி  என் நாடு, என் மக்கள் என்ற பேதம் எனக்கில்லை தந்தையேஎன்றார் புத்தர்.

இதோ பார் உன் மனைவி யசோதரை வந்திருக்கிறாள் அவள் முகத்தைப் பார்”. கண்ணீர் மல்க நிற்கும் யசோதரை புத்தரைப் பார்த்து, “நீங்கள் என்னைவிட்டுப் பிரிந்து எவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டது ஒருமுறையாவது என்னை நினைத்துப் பார்த்தீர்களா?” என்றாள் யசோதரை. “சித்தார்த்தனுடன் நீ கொண்டுள்ள உறவைப் பற்றி என்னிடம் பேசாதே யசோதா சித்தார்த்தன் மரித்துவிட்டான் நான் புத்தர்என்றார். அவருடைய பதிலால் சினமடைந்த சுத்தோதனர் புத்தருக்கு எதிராய் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து திட்டினார்.

அவரை சாந்தப்படுத்திய யசோதரை, “அரண்மனையைவிட்டு நீங்கள் வெளியேறும் போது என்னிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கலாமே?” என்றாள்.

வாழ்க்கையின் துயரத்திற்கு விடை காண வேண்டும் என்பதைத் தவிர அப்போது ஒன்றும்  நினைக்கத் தோன்றவில்லை யசோதாஎன்றார் புத்தர்.

நான் தடுத்தவுடன் உங்கள் முடிவைக் கைவிட நீங்கள் என்ன அவ்வளவு பலகீனமானவரா?” என்றாள் யசோதரை.

உறவுச் சங்கிலியை ஒரு நொடியில் அறுத்தெறிவது அவ்வளவு சுலபமில்லை யசோதா. நாம் செலுத்தும் அன்பே நமக்கு பலவீனமாகுமா யசோதா. அப்போது என் மனம் கல்லாகிவிடவில்லை ஏதோ ஒரு உந்துதலால் தான் நான் அரண்மனையைவிட்டு இரவே வெளியேறினேன்என்றார் புத்தர்.

இதே வேலையை நான் செய்திருந்தால் நீங்களும், சமூகமும் என்னைக் கொண்டாடி இருப்பீர்களா?” என்றாள் யசோதரை.

நற்செயலுக்கான பலன்களும், தீச்செயல்களுக்கான பலன்களும் நிழல் போல மனிதனைத் தொடர்ந்து வருகிறது யசோதா, யார் யாரை எங்கு வைக்க வேண்டுமென அதுவே முடிவு செய்கிறது”.

நீங்கள் ஏன் வெளியேறினீர்கள்? வீட்டிலேயே நீங்கள் தேடியதை அடைந்திருக்க முடியாதா?” என்றாள் யசோதரை.

அடைந்திருக்கலாம் தான் யசோதா, மரணத்தை துரத்திக் கொண்டு தான் நாட்டைவிட்டு ஓடினேன் யசோதா. நானும் பயந்து கொண்டு அரண்மனையிலேயே இருந்திருந்தால் சுகபோகங்களால் சத்தியத்தை மறந்து இருப்பேன் அல்லவா?” என்றார் புத்தர்.

தந்தைமார்கள் தங்கள் மகனுக்கு சொத்தை விட்டுச் செல்வார்கள், நீங்கள் உங்கள் மகன் ராகுலனுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள்?” என்றாள் யசோதரை.

புத்தர் தான் அரண்மனையைவிட்டுக் கிளம்பும்போது அவரது மகன் உறங்கிக் கொண்டிருந்தான். போர்வையை விலக்கி அவன் முகத்தைப் பார்த்தால் தனது வைராக்கியம் பனியாக உருகிவிடுமோ என அஞ்சி மகனின் முகத்தை காணாமலேயே அரண்மனையைவிட்டு வெளியேறினார். இந்த பனிரெண்டு வருடங்களில் எங்கோ ஒரு மூலையில் ராகுலனின் நினைவு ஒளிந்து இருக்கவேண்டும். புத்தர் யாருடைய பேச்சையும் செவிமடுக்கவில்லை. அவரது கண்கள் ராகுலனைத் தேடின.

ஒரு தந்தையாக உங்கள் மகனுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள் என யசோதா கேட்டாள். மகனே நான் கண்டடைந்த ஞானத்தின் மூலமாக உனக்கு நான் தீட்சை அளிக்கிறேன். நான் துறவு பூணவில்லையென்றால் சத்தியத்தைத் தேடி நீ அரண்மனையைவிட்டு வெளியேறியிருப்பாய். மகனே என்னை கையாலாகாதவன் என எண்ணிவிடாதே. நீ கடக்க வேண்டிய பாதையில் நான் ஒளியாய் இருப்பேன்.

இதோ இந்தத் திருவோட்டைப் பிடி. என் ஞானத்தை உனக்கு நான் பிச்சையாக இடுகிறேன் மகனே. இனி இந்தக் கைகள் தான் எனது பிச்சைப் பாத்திரம். ஞானம் பெற்ற அன்று நான் நீண்ட தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டேன் என் மகனே. வாழ்க்கைக் கடலில் நீ மூழ்கிவிடாதபடி உன்னைக் காப்பாற்றத்தான் ஞானமடைந்த அடுத்த நொடியே நான் உன்னைக் காண கபிலவஸ்து நாட்டிற்கு வந்தேன். எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன். எனது மனக்காயங்கள் இனி ஆறிவிடும். என்னைத் தேடுவதிலேயே நேரத்தை வீணடிக்காதே என் மகனேஎன்று விடைபெற்று அவர் மீது விழுந்த
அரண்மனையின் நிழலையும் தாண்டி எங்கோ புத்தர் சென்று கொண்டிருந்தார்.