Showing posts with label மனு. Show all posts
Showing posts with label மனு. Show all posts

Monday, March 26, 2018

கவலையில்லாத மனிதன்


கவலையில்லாத மனிதன் ஒன்று இறந்துவிட்டான் இல்லையெனில் இன்னும் பிறக்கவில்லை. வாழ்வுப் பெருங்கடலின் அலைகள் தான் மனிதன். ஆழ்கடலில் பொக்கிஷம் இருப்பது தெரியாமல் அலைகள் கரையையே நாடுகிறது. இப்பரந்த உலகில் கவிஞன் துயரத்தின் வாரிசாக மட்டுமே இருக்கிறான். ஊரில் முக்கியத்துவம் யாருக்கு கொடுக்கிறார்கள் என்றால் பணம் உள்ளவர்களுக்கே. அறிவுஜீவிகள் கூட பணக்காரர்களுக்குப் பின்னால் தான் அணிவகுக்கிறார்கள். அடிமைப்பட்டிருக்கிற மனிதனுக்குத்தான் சுதந்திரத்தின் அருமை தெரியும். ஒரு நபரின் வங்கிக் கணக்கில் பலகோடி இருக்கட்டும் அதனைக் கொண்டு ஒருநாள் தூக்கத்தை அவரால் விலைக்கு வாங்க முடியுமா.

கப்பலை கடலில் செலுத்துவதற்கு மாலுமியின் பங்கு சிறிது கடவுளின் பங்கு பெரிது. அஸ்திரத்தை பிரயோகிக்க அவ்வளவு யோசிப்பார்கள் அந்நாட்களில் இப்போது அப்படியா. நிராகரிப்பின் வலி விஷம் தோய்த்த அம்பு உடலின் மீது தைய்ப்பதை விடக் கொடுமையானது. வாழ்வில் ஒருமுறையேனும் அன்பின் கரங்கள் உன்னை ஆரத்தழுவிக் கொண்டிருக்கக் கூடும். உடலளவில் செய்யப்படாத தீங்குகளால் பாவமில்லை என மனிதன் கருதுகிறான். அவரவர் பாதையை சுயமாக தேர்ந்தெடுக்க வசதியாகத்தான் பல மதங்கள் தோன்றியுள்ளது. ஆன்மிக வழியில் ஞானப்பாதை கடுமையானது. பக்திப் பாதை எளிமையானது.

இவற்றை ஏன் உங்கள்  முன் வைக்கிறேன் என்றால். கஷ்டத்தில் உழலுகிறேன் காப்பாற்று என தங்களை கடவுளிடம் ஒப்புக் கொடுத்தால் தீங்குநேராமல் அவர்களைப் பாதுகாப்பது அவனுடைய கடமை. சரணடையும் போது சுமையை இறைவன் மீது இறக்கி வைத்து விடுகிறீர்கள். ஆண்டவனிடம் பற்று வைக்கும் போது அங்கு நம்பிக்கை வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது. ராம நாமத்தின் மீது வைத்த நம்பிக்கையால் தான் அனுமனால் கடல் தாண்ட முடிந்தது. பிரஹலாதன் வைத்த நம்பிக்கையினால் தான் பிரம்மம் தூணை உடைத்துக் கொண்டு காட்சி தந்தது. கல்லான அகலிகை ராமன் கால் பட்டதும் பெண்ணாகவில்லையா. திரெளபதியின் அசைக்க முடியாத நம்பிக்கைதானே அவள் மானத்தைக் காத்தது. ஆத்மா அழிவில்லாதது என அர்ஜுனனை நம்பச் செய்வதற்கு அருளப்பட்டது தானே கீதை.

வாழ்வின் குரல் எப்போதும் மரணத்தைப் பற்றியே பேசுகிறது. சாமானியனுக்கும் சக்கரவர்த்திக்கும் ஒரே விதி தான். அகந்தை தான் மரணத்தைக் கொடுமையாக்குகிறது. நான் என்கிற அகந்தை தான் கடவுளை மறைத்துக் கொண்டுள்ளது. அந்த திரைச்சீலை விலகினால் தெய்வத்தின் தரிசனம் கிடைக்கும். இறை சக்தி மனிதன் மூலமாக வெளிப்படுகிறது ஒருவரிடம் அது கூடுதலாகவும் இன்னொருவரிடம் குறைவாகவும் காணப்படுவதற்கு கர்மவினை காரணமாக இருக்கலாம். அவதாரங்கள் அனைத்தும் மனிதன் கடவுள் நிலையை அடையலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு ஏற்பட்டதாகவே தோன்றுகிறது.

வாழ்வுத் தீவில் மனிதஇனம் நிரந்தரமாக வசிக்க முடியாது. அந்நிலையில் மனிதனுக்கு புகலிடம் தருவதற்கு யார் முன்வருவார்கள். தனிமையின் மேகம் என் மனவானில் இடியாக குமுறுகிறது. விதியின் கைகள் ஒரு பந்தைப் போல மனிதனை தூக்கி எறிந்து விளையாடுகிறது. கடவுள் இல்லாத மறைவான இடமொன்றை யாராலும் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. புத்தரால் கூட ஞானக்கடலின் சிறுதுளியைத் தான் விவரிக்க முடிந்தது. சத்தியம் ஒன்றே கடவுளிடம் நம்மை கொண்டு செல்லும் என்பதே இயேசுவின் போதனையாக அமைந்தது. குழந்தையிடம் அகப்பட்டுக் கொண்ட கொசு போன்று தான் இறைவனின் கைகளில் மனிதன்.

எஜமான் விசுவாசமுள்ள வேலைக்காரர்களிடமே பொறுப்பை ஒப்படைப்பான். ஒருவனிம் இருக்கும் செல்வமே மக்களில் நால்வரை அவன்பால் ஈர்க்கச் செய்கிறது. உண்மையை உணர்ந்தவர்கள் விவாதத்தில் பங்கேற்க மாட்டார்கள். ஞானத்தை விளக்க வார்த்தைகள் போதாது. தெய்வீக விளக்கின் ஒளி மூலமாகவே நாம் இந்த உலகைக் காண்கிறோம். சாத்தானுக்கு வாய்ப்பு தராமல் மனதைக் கோயிலாக வைத்துக் கொண்டால் இறைவன் வந்து குடியேறுவான். பூமியுடனான பிணைப்பை அறுத்துக் கொள்ள மனிதர்களால் முடிவதில்லை. கடவுளின் கருணையைப் பற்றி நாம் சந்தேகம் கொள்ள தேவையில்லை அவர் தான் மனிதனுக்கு பூமியில் அடைக்கலம் தந்துள்ளார். மனிதனின் தேவைகள் அனைத்தையும் ஒரு தந்தையைப் போல அவர் நிறைவேற்றுகிறார். இப்பூமியில் அன்பே ஆட்சி செய்ய வேண்டும் என கடவுள் விரும்பினார். கடவுளுக்குள்ள அதிகாரம் மனிதனின் கண்களை உறுத்துகிறது. மரணப்புதிருக்கு விடைகாண அவன் இன்றுவரை முயன்று கொண்டிருக்கிறான்.