Wednesday, May 29, 2019

பொம்மை


ராமையாப்பிள்ளைக்கு வர்ஷினியிடம் அலாதிப் ப்ரியம் என்ன இருந்தாலும் தவமிருந்து பெற்ற பிள்ளையல்லவா, பாசம் இல்லாமல் போகுமா. வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிடிப்பு வேண்டுமே – ராமையாப்பிள்ளைக்கு பிள்ளைப் பாசம். வர்ஷினிக்கு ஏதாவது ஒன்று என்றால் ராமையாப்பிள்ளைக்கு மூஞ்சி செத்துப் போய்விடும். இரண்டரை வயது தான் ஆகிறது அது பேசும் மழலை இருக்கிறதே. குழலும் இனிதில்லை, யாழும் இனிதில்லை மழலைதான் இனிதுயென சும்மாவா சொன்னார்கள்.

ராமையாப்பிள்ளைக்கு திடகாத்திர சரீரம் தான். ஆனால் பிள்ளைப்பேறு என்னவோ தள்ளிப் போய்விட்டது. என்ன இருந்தாலும் தலையில என்ன எழுதி இருக்கானோ அது தானே நடக்கும். சகட யோகம் தான் என்ன செய்வது. நகை போட்டு அழகு பார்க்க ஆசை வரத்தானே செய்யும். எந்தப் பெண் பிள்ளையும் அப்பாவுக்கு இளவரசி தானே. மளிகை கடை வரும்படி வாய்க்கும் வயிற்றுக்கும் சரியாக இருக்கிறது. மதியம் சாப்பிட வரும்முன் ராஜிக்கு பத்து தடவையாவது போன் வந்துவிடும், வர்ஷனி என்ன செய்கிறாள் தூங்கினாளா, சாப்பிட்டாளா என்று!

ராஜி ராமையாப்பிள்ளையும், வர்ஷினியையும் கண்ணுக்குள் வைத்துதான் பாதுகாத்து வந்தாள். குழந்தையின் மழலைப் பேச்சின் அர்த்தத்தை அம்மாக்கள் எப்படித்தான் புரிந்து கொள்கிறார்களோ? குழந்தை என்று வந்தவுடன் மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சமாக ஆகிவிடுகிறது அம்மாக்களுக்கு. தாய்மையை மதம் தெய்வீகத்துடன் தொடர்பு படுத்துவது இதனால் தானோ. பேறு காலத்தில் அம்மாக்களின் கனவு என்னவாக இருந்திருக்கும்? பிரசவம் இரண்டாம் பிறப்பு என்று சும்மாவா சொன்னார்கள்.

தன்னலத்தை தியாகம் செய்துவிடுவதால் தான் தாய் தெய்வமாகிவிடுகிறாள். ராமையாப்பிள்ளைக்கு வரும்படி குறைவு என்றாலும் அதை வைத்து குடும்பம் நடத்த தெரிந்திருந்தது ராஜிக்கு. நகை நட்டுக்கு ஆசைப்பட்டாலும் அதை வெளிப்படுத்தாமல் உள்ளத்திலேயே வைத்து பூட்டிக் கொள்வாள். தெய்விகம் மனதில் குடிகொள்ளும்போது கணவன் மனைவி உறவே புனிதத்தன்மையை அடைந்துவிடுகிறது. ராமையாப்பிள்ளை செய்த புண்ணியம்தான் ராஜி அவருக்கு மனைவியாக அமைந்தது. அது கொண்டா இது கொண்டா என நச்சரித்தால் ராமையாப்பிள்ளையால் நிம்மதியாக இருக்க முடியுமா? இன்னாருக்கு இன்னாரென்று இறைவன் தானே எழுதி வைத்திருக்கிறான்.

ராஜி அளந்து அளந்துதான் பேசுவாள். தன் பேச்சால் கணவனின் உள்ளம் நோகக்கூடாது என்பதில் குறியாய் இருப்பாள். வீட்டிற்கு படியளப்பவள் அன்னபூரணிதானே. சலனமற்ற குளத்தில் கல்லெறிபவன்தானே கடவுள். அவனுக்கு அது வேடிக்கை நமக்கு. இந்தக் கலிகாலத்துல ராஜி சீதையைவிட மேலானவள்தான். ராமையாப்பிள்ளை பெயரில் மட்டுமல்ல நிஜத்திலும் ராமர் தான். பொய் மானுக்கு ஆசைப்பட்டது தானே சீதை செய்த பெருந்தவறு. ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் மனிதனின் வாழ்க்கை முழுமையும் வனவாசம் தானே. பதிவிரதை என்பதால் விதி வேலை செய்யாமல் விட்டுவிடுமா என்ன? ஆட்டுவிப்பவன் ஒரு தான்தோன்றி அவனிடம் போய் பந்த பாசத்தைப் பற்றி பேச முடியுமா? அவன் வலையை இழுக்கும் வரைதான் இங்கு விளையாட்டு கூத்தெல்லாம். உறவைச் சொல்லி அழுவதை காது கொடுத்து கூட அவன் கேட்க மாட்டான்.

ராமையாப்பிள்ளைக்கு ராஜி எது சமைத்துப் போட்டாலும் தேவாமிர்தம்தான். வீடு இளைப்பாறும் இடமாக இருந்துவிட்டால் வேறொன்றும் தேவையில்லை ஒருவனுக்கு. அவளுடைய அன்பான வார்த்தைகளால் குடும்பசுமை பாரமாகத் தெரியவில்லை ராமையாப்பிள்ளைக்கு. ஒன்பதாம் மாதம் வளைகாப்பு நடத்துவதற்குக் கூட மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான் ராமையாப்பிள்ளை, ஆனாலும் ராஜி முகம் கோணவில்லை. பிரசவத்திற்கு ராஜி நகையை அடகு வைக்க நேர்ந்த போதும் அவள் அமைதியாக இருந்தாள். அவளைப் பொறுத்த வரை தாலி வெறும் மஞ்சள் கயிறு அல்ல. கணவன் கையாலாகாதவனாக இருந்தாலும் மனைவிக்கு ஸ்ரீராமன் தானே.

அவள் சீதனமாகக் கொண்டு வந்ததை அடகு வைக்க நேர்ந்த போதும் அவள் கல்லைப் போலத்தான் இருந்தாள். சிவனும் சக்தியும் இணைந்து சிவமாகிவிடுவது ஒருசிலர் வாழ்க்கையில் தான் நேரும். ஆண்கள் புத்திப்பூர்வமாக வாழ்பவர்கள். பெண்கள் இதயப்பூர்வமாக வாழ்பவர்கள் என்பது உண்மைதான். நடக்கப் போவதை எப்படியோ யூகித்து விடுகிறது பெண்கள் மனம். குழந்தையை இடுப்பிலும், கணவனை மனதிலும் சுமக்கும் அவள் தனது உள்ளக்கிளர்ச்சிகளை சம்ஹாரம் செய்து கொள்கிறாள். தியாகத்தின் மூலம் மட்டுமே தெய்வத்தை அடைய முடியும் என்பதற்கு ராஜி ஒரு நல்ல உதாரணம்.

ராமையாப்பிள்ளைக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் உண்டு என்பதை கல்யாணமான புதிதில் தான் அறிந்தாள் ராஜி. அவள் மீது செய்து கொடுத்த சத்தியத்தினால் தான் அவர் இந்த நொடிவரை சிகரெட்டை தொடாமல் இருக்கிறார். ராமையாப்பிள்ளைக்கு பேச்சு ஒன்று செயல் வேறொன்று என்று கிடையாது. இதுவும் அவர் முன்னேறாததற்கு ஒரு காரணம். இப்போதெல்லாம் வியாபாரத்தில் பொய்யைத்தானே முதலாகப் போடுகின்றார்கள். பணத்தை வைத்திருப்பவனின் பின்புலத்தை ஆராய்ந்து பார்த்தால் தெரியும் அவன் எப்படிச் சம்பாதித்தானென்று. சமூகம் உண்மை பேசுபவனை அலட்சியப்படுத்தும் பிழைக்கத் தெரியாதவன் என முத்திரை குத்தும். ஏய்த்து பிழைப்பு நடத்துபவர்கள் மற்றவர்களின் முதுகினை படிக்கல்லாகப் பயன்படுத்துவார்கள். வலியச் சென்று ஏமாறுபவர்கள் எந்நாளும் நல்லவர்களை நாடி வரமாட்டார்கள்.

ராமையாப்பிள்ளைக்கு சாண் ஏறினால் முழம் சறுக்குகிற கதைதான். மூணு வயதில் வர்ஷினிக்கு காது குத்த வேண்டுமென்று ராஜி  ஞாபகப்படுத்தியதிலிருந்து அவர் பணம் தோதுபண்ணுவது எப்படி என யோசிக்க ஆரம்பித்தார். மூலவராக தெய்வம் இருந்தாலும் பணம் தானே பாதாளம் வரை பாய்கிறது. பணம் பண்ணும் காரியம் தெரியாதவர்கள் உலகில் செத்தாரைப் போலத்தான் திரிய வேண்டியிருக்கிறது. உலகை ஆள்பவனுக்கு நாலு முழ வேட்டி போதும், மனிதர்களுக்குத்தான் ஆயிரம் படாடோபங்கள் தேவைப்படுகிறது. தேடிப்போனவர்களைத் தன்னைப்போல் ஆண்டியாக்குபவன் தானே முருகன். ராமையாப்பிள்ளையின் வயதையொத்தவர்கள் புண்ணியப் பலன்களை சேர்த்து வைததிருந்தார்களோ இல்லையோ பணம் சம்பாதிக்கும் கலையை நன்கு அறிந்திருந்தனர். காசேதான் கடவுள் என்பவர்கள் மூன்று தலைமுறைக்கு சேர்த்து வைத்துவிட்டுத்தான் சாகிறார்கள். விதியை மாற்றி எழுதத்தான் மருத்துவர்கள் இருக்கிறார்களே. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லையென சொல்லிவிட்டுத்தானே சிலையாய் நிற்கிறார் திருவள்ளுவர்.

கோயிலுக்கு போகின்றவர்களைத்தான் சோதிக்கிறது சாமி. கோயில் யாருக்கும் மோட்சத்தை அளிக்காது. பிறப்பருக்கும் வித்தையை உனக்கு சொல்லித் தந்துவிட்டால் அப்புறம் கோயில் எதற்கு சாமிதான் எதற்கு. ஆறுதலுக்கு ஒரு மகளிருக்கிறாள் அவளுக்கு நாளும் கிழமையுமாய் சடங்கு, சம்பிரதாயம் செய்யத்தானே வேண்டியிருக்கிறது. வர்ஷினிக்கு தோடு செய்ய ராஜியின் வளையலை விற்கலாம் தான், ஆனால் வளையலோ மார்வாடியிடம் இருக்கிறது ராமையாப்பிள்ளை என்ன செய்வார். விதி சந்தியில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது அவரை. மளிகை கடைக்கு வாடகை பாக்கி, கடைப் பையன்களுக்கு சம்பளப் பாக்கி வேறு. உறவுகளை அறுத்துவிட்டு ஓடிவிடலாம் தான் சாமானியர்களால் இது முடிகிற காரியமா?

வட்டிக்கு எவ்வளவு தான் வாங்குவாய் பத்திரத்தைக் கொண்டுவா என்று சொல்லிவிட்டான் மார்வாடி. பத்திரத்தில் வில்லங்கம் இருக்குமென்று ராமையாப்பிள்ளைக்குத் தெரியுமா என்ன? மார்வாடி கைவிரித்துவிட சொல்லாமல் கொள்ளாமல் அமைதியாக வீட்டிற்கு வந்து சாப்பிடாமல் படுத்தவர்தான். மாரடைப்பால் உயிர் பிரிந்து விட்டது. பிரக்கனை இல்லை என்று பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து வந்த ராஜி, ராமையாப்பிள்ளை தன்னையும் குழந்தையையும் அனாதையாக்கிவிட்டுச் சென்றுவிட்டார் என்பதை அறிந்து சிலையாக நின்றுவிட்டாள்.

ராமையாப்பிள்ளை வர்ஷினியிடம் விளையாடும் போது அவள் பொம்மைத் துப்பாக்கியால் சுடுவாள். ராமையாப்பிள்ளை செத்துவிடுவது போல் கீழே விழுந்துவிடுவார். வர்ஷினி ஓடிவந்து அவர் பாதங்களை வருடும் போது உயிர்த்தெழுவது போல் டாணென்று எழுந்துவிடுவார். இதை மனதில் வைத்துக் கொண்டு வர்ஷினி சடலத்தின் பாதங்களை வருடுவதைப் பார்த்து யாரால்தான் ஜீரணிக்க முடியும். கடவுளுக்கு கண்ணிருந்தால் இந்நேரம் ராமையாப்பிள்ளை உயிர்த்தெழுந்திருக்க வேண்டாமா?

Tuesday, May 28, 2019

போதி


ஆசை, வெறி இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறதா என்ன. மனதை அடக்கத் தெரிந்திருந்தால் மனிதன் அத்துமீறி குற்றம் இழைப்பானா? ஆதாம் அறிவுக் கனியை உண்ட போது உணர்ச்சி வெள்ளம் கரையை உடைத்து பாய்ந்தது. எண்ண அலைகள் மனதில் எழுவதும் அடங்குவதுமாகத் தான் இருக்கும். எண்ணத்தின் மூலவேர்களை ஆராயச் சொன்ன சாதுக்கள், எண்ணத்தின் பின்னாலிலிருந்து உன்னை இறைவன் பார்க்கிறான் என்றார்கள்.

ஸ்ரீராமர் தெய்வமாக போற்றப்படுவதற்கு பதிவிரதன் என்ற ஒரு காரணம் போதாதா. அடிமை சேவகம் செய்து பிழைக்கும் நமக்கு சந்தர்ப்பம் அமையவில்லை அவ்வளவுதான். பத்தாயிரம் மனைவியரைக் கொண்ட தசரதனுக்கு பிறந்தவர் ஒழுக்கசீலராக வாழ்ந்தார் என்றால் எவ்வளவு வைராக்கியம் அந்த மனிதருக்கு இருந்திருக்க வேண்டும்.

கிறித்தவத்தில் சொல்வார்கள்உன் பிதா பரமண்டலத்தில் உத்தமராக இருக்கிறார் என்கின்ற ஒரே காரணத்திற்காக நீ உத்தமனாக இருக்க வேண்டும்என்று. இந்தக் கணினி யுகத்தில் மனிதன் தவறு செய்ய யோசிப்பதில்லை. அதன் விளைவுகளைப் பற்றியும் எண்ணிப் பார்ப்பதில்லை. உடலெடுத்ததே சுகத்தை அனுபவிப்பதற்காகத்தான் என அவன் நினைக்கிறான்.

செய்த தவறுக்கு தண்டனை கிடைக்காமல் தப்பிவிடலாம். ஆனால் மனதில் குற்றவுணர்ச்சி இல்லையென்றால் அவனே அரக்கன். .பி.கோ சட்டம் மாதிரி கடவுளின் விதி இந்த உலகத்தில் செயல்படுகிறது. வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் அவ்விதியிடமிருந்து தீர்ப்பினைப் பெறுகிறோம். ஒரு மனிதனின் இருப்பை அழிக்க முயல்பவன் மனஅளவில் இன்னும் மிருகமாகத்தான் இருக்கிறான்.

கொலை பாதகன் தன் அந்திம காலத்தில் மரணத்தை எதிர்நோக்கும் போது மிகுந்த துன்பத்தை அனுபவிப்பான். முக்கியப் பிரஞை என்பதற்காக இறந்தபின் அவனை கடவுளுக்கு அருகில் அரியாசணத்திலா அமர வைப்பார்கள். மோசஸின் கடவுள் தான்கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்என்றாரா இல்லை. உண்மையான கடவுளும் அதே கொள்கை உடையவர் தான்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டலாம் தான். அது உள்ளுக்குள் கடவுளை பிரவேசிக்கச் செய்யும். ஆனால் இறப்பிற்கு பிறகான வாழ்க்கைக்காக அவயங்களை அடக்கிக் கொண்டா இருக்கிறோம். ஒருவர் எத்தகையவர் என்பதை அவரின் மரணமே தீர்மானிக்கிறது. உயிர்த்தெழுந்த போதுதானே உலகம் அறிந்துகொண்டது இயேசு கடவுளின் குமாரன் என்று.

இறைவனின் ஆட்சி அதிகாரம் அதாவது கடவுளின் மேலாதிக்கம் இன்றைய உலகத்தில் குறைவாகவே உள்ளது. அறம் நிலைநிறுத்தப்பட வேண்டுமென்ற விருப்பமுள்ள மனிதர்கள் இந்த உலகத்தில் பிறப்பது இல்லை. கண்டுபிடிப்புகள் மிகுந்த இந்தக் காலகட்டத்தில் மனிதன் கைவிடப்பட்டுவிட்டான். இந்த உலகம் கைவிடப்பட்ட உலகமாகிவிட்டது. இறைவனை சொந்தம் கொண்டாடுபவர்கள் களங்கமற்றவர்களாக இல்லை. தங்களின் வழியே சிறந்தது எனச் சொல்லிக் கொள்ள இங்கே யாருக்கும் அருகதை இல்லை.

கடவுளின் வெறி இருந்த காலம் மலையேறிவிட்டது. இந்த உலகம் கடவுளின் வீடு என்று எண்ணியவர்கள் இங்கே குறைந்துவிட்டனர். சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தெய்வத்தை மறந்துவிட்டார்கள். புத்தர் தான் பிறந்த தேசத்தால் புறக்கணிக்கப்பட்டவர். அமைதிப் புரட்சி செய்ய தன் குமாரனை கடவுள் இனி இந்தப் பூமிக்கு அனுப்பி வைக்க மாட்டார்.

வாழ்க்கைச் சிக்கலைத் தீர்க்க புனிதநூல்களில் தீர்வைத் தேடியது இன்று அடியோடு நின்றுவிட்டது. மனித குலம் தன்னலத்தையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. மனித மனம் எதனால் கடவுளிடமிருந்து விலகிச் சென்றது என்ற காரணத்தை கண்டறிய முடியவில்லை. உலகம் பணத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறது. நீ பணத்தால் எதையும் இங்கு சாதித்துக் கொள்ளலாம என்பதே இன்றைய நிலை.

யார் பிறந்து வந்தாலும் இனி உலகத்தில் தர்மத்தை நிலைநாட்ட முடியாது. மனிதன் அன்பு செலுத்துவதற்குக்கூட பிரதிபலனை எதிர்பார்க்கிறான் தனது மகன் நல்லவனாக இருக்க வேண்டுமென்று பெற்றோர்கள் ஆசைப்படுவதில்லை, அவன் செல்வந்தனாக இருக்க வேண்டுமென்றே அவர்கள் விரும்புகிறார்கள். அந்தஸ்து மனிதனிடம் அனைத்தையும் கொண்டு வந்து கொட்டுகிறது.

கடவுளர்பூமி என்று இந்த உலகை இனி சொல்லிக் கொள்ள முடியாது. சத்தியவெறி கொண்டவர்கள் கடவுளின் பேரரசை அமைக்க விரும்பினார்கள், மக்கள் அவர்களுக்கு மரணத்தையே பரிசாகத் தந்தார்கள். இக்காலத்தில் வாலிபர்களுக்கு முறையற்ற முறையில் உடலின் தேவைகளை பூர்த்திசெய்து கொள்வது தவறெனப்படவில்லை. தீய நோக்கங்களுக்கு தன் மனதை எளிதாக ஒப்புக்கொடுத்து விடுகிறார்கள். தீய பார்வையே குற்றம் புரிந்ததற்குச் சமம் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

கடவுள் மனித குலத்தை கைவிட்டுவிட்டான். அவன் வகுத்த விதியை மட்டும் அவன் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் பூமியில் பிறப்பு நடைபெறுகிறது. மனிதர்கள் தங்களுக்கு தாங்களே முடிவைத் தேடிக் கொள்வார்கள் என்று கடவுள் முடிவெடுத்துவிட்டார். புத்தரின் சூன்யக் கொள்கை வெற்றி பெற கடவுளே காரணமாகிவிட்டார். கடவுள் மனிதனின் ஆத்மாவைக் கொன்று அவனை பழிதீர்த்துக் கொண்டார்.

புத்தர் சரியாக பனிரெண்டு ஆண்டுகள் கழித்து தனது ஊருக்குத் திரும்பி இருந்தார். தந்தை சுத்தோதனர் தனது ஒரே மகனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். “எல்லா வசதிகளும் இந்த நாட்டில் இருக்க எதைத் தேடி நீ வெளியேறினாய்என்றார். “உடல் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வது வாழ்க்கை இல்லை தந்தையேஎன்றார் புத்தர். “இன்னொரு முறை என்னை தந்தையே என்று அழை, இதற்காகத்தான் பனிரெண்டு ஆண்டுகளாக காத்திருந்தேன்என்றார் கண்ணீர் மல்க சுத்தோதனர்.

சத்தியத்தின் ஒளி என் மூலமாகச் செயல்பட இடம் கொடுத்துவிட்டேன் தந்தையே, இனி நான் உங்கள் மகனல்லஎன்றார் புத்தர். “எனக்குப் பிறகு இந்த ராஜ்யத்தை யார் ஆள்வது என்று நினைத்துப் பார்த்தாயா?” என்றார் சுத்தோதனர். “இந்த நதி கடலோடு கலந்துவிட்டது, இனி  என் நாடு, என் மக்கள் என்ற பேதம் எனக்கில்லை தந்தையேஎன்றார் புத்தர்.

இதோ பார் உன் மனைவி யசோதரை வந்திருக்கிறாள் அவள் முகத்தைப் பார்”. கண்ணீர் மல்க நிற்கும் யசோதரை புத்தரைப் பார்த்து, “நீங்கள் என்னைவிட்டுப் பிரிந்து எவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டது ஒருமுறையாவது என்னை நினைத்துப் பார்த்தீர்களா?” என்றாள் யசோதரை. “சித்தார்த்தனுடன் நீ கொண்டுள்ள உறவைப் பற்றி என்னிடம் பேசாதே யசோதா சித்தார்த்தன் மரித்துவிட்டான் நான் புத்தர்என்றார். அவருடைய பதிலால் சினமடைந்த சுத்தோதனர் புத்தருக்கு எதிராய் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து திட்டினார்.

அவரை சாந்தப்படுத்திய யசோதரை, “அரண்மனையைவிட்டு நீங்கள் வெளியேறும் போது என்னிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கலாமே?” என்றாள்.

வாழ்க்கையின் துயரத்திற்கு விடை காண வேண்டும் என்பதைத் தவிர அப்போது ஒன்றும்  நினைக்கத் தோன்றவில்லை யசோதாஎன்றார் புத்தர்.

நான் தடுத்தவுடன் உங்கள் முடிவைக் கைவிட நீங்கள் என்ன அவ்வளவு பலகீனமானவரா?” என்றாள் யசோதரை.

உறவுச் சங்கிலியை ஒரு நொடியில் அறுத்தெறிவது அவ்வளவு சுலபமில்லை யசோதா. நாம் செலுத்தும் அன்பே நமக்கு பலவீனமாகுமா யசோதா. அப்போது என் மனம் கல்லாகிவிடவில்லை ஏதோ ஒரு உந்துதலால் தான் நான் அரண்மனையைவிட்டு இரவே வெளியேறினேன்என்றார் புத்தர்.

இதே வேலையை நான் செய்திருந்தால் நீங்களும், சமூகமும் என்னைக் கொண்டாடி இருப்பீர்களா?” என்றாள் யசோதரை.

நற்செயலுக்கான பலன்களும், தீச்செயல்களுக்கான பலன்களும் நிழல் போல மனிதனைத் தொடர்ந்து வருகிறது யசோதா, யார் யாரை எங்கு வைக்க வேண்டுமென அதுவே முடிவு செய்கிறது”.

நீங்கள் ஏன் வெளியேறினீர்கள்? வீட்டிலேயே நீங்கள் தேடியதை அடைந்திருக்க முடியாதா?” என்றாள் யசோதரை.

அடைந்திருக்கலாம் தான் யசோதா, மரணத்தை துரத்திக் கொண்டு தான் நாட்டைவிட்டு ஓடினேன் யசோதா. நானும் பயந்து கொண்டு அரண்மனையிலேயே இருந்திருந்தால் சுகபோகங்களால் சத்தியத்தை மறந்து இருப்பேன் அல்லவா?” என்றார் புத்தர்.

தந்தைமார்கள் தங்கள் மகனுக்கு சொத்தை விட்டுச் செல்வார்கள், நீங்கள் உங்கள் மகன் ராகுலனுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள்?” என்றாள் யசோதரை.

புத்தர் தான் அரண்மனையைவிட்டுக் கிளம்பும்போது அவரது மகன் உறங்கிக் கொண்டிருந்தான். போர்வையை விலக்கி அவன் முகத்தைப் பார்த்தால் தனது வைராக்கியம் பனியாக உருகிவிடுமோ என அஞ்சி மகனின் முகத்தை காணாமலேயே அரண்மனையைவிட்டு வெளியேறினார். இந்த பனிரெண்டு வருடங்களில் எங்கோ ஒரு மூலையில் ராகுலனின் நினைவு ஒளிந்து இருக்கவேண்டும். புத்தர் யாருடைய பேச்சையும் செவிமடுக்கவில்லை. அவரது கண்கள் ராகுலனைத் தேடின.

ஒரு தந்தையாக உங்கள் மகனுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள் என யசோதா கேட்டாள். மகனே நான் கண்டடைந்த ஞானத்தின் மூலமாக உனக்கு நான் தீட்சை அளிக்கிறேன். நான் துறவு பூணவில்லையென்றால் சத்தியத்தைத் தேடி நீ அரண்மனையைவிட்டு வெளியேறியிருப்பாய். மகனே என்னை கையாலாகாதவன் என எண்ணிவிடாதே. நீ கடக்க வேண்டிய பாதையில் நான் ஒளியாய் இருப்பேன்.

இதோ இந்தத் திருவோட்டைப் பிடி. என் ஞானத்தை உனக்கு நான் பிச்சையாக இடுகிறேன் மகனே. இனி இந்தக் கைகள் தான் எனது பிச்சைப் பாத்திரம். ஞானம் பெற்ற அன்று நான் நீண்ட தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டேன் என் மகனே. வாழ்க்கைக் கடலில் நீ மூழ்கிவிடாதபடி உன்னைக் காப்பாற்றத்தான் ஞானமடைந்த அடுத்த நொடியே நான் உன்னைக் காண கபிலவஸ்து நாட்டிற்கு வந்தேன். எனது கடமையை நிறைவேற்றிவிட்டேன். எனது மனக்காயங்கள் இனி ஆறிவிடும். என்னைத் தேடுவதிலேயே நேரத்தை வீணடிக்காதே என் மகனேஎன்று விடைபெற்று அவர் மீது விழுந்த
அரண்மனையின் நிழலையும் தாண்டி எங்கோ புத்தர் சென்று கொண்டிருந்தார்.