Monday, May 7, 2018

மகாபுருஷர்


மனிதனில் சரிபாதி விகிதத்தில் ஆணும் பெண்ணும் இருக்கின்றனர். இறக்கும் வரை மனிதனால் பெண்ணாசையிலிருந்து விடுபட முடியாது. பெண்ணாசையால் மீண்டும் பிறந்ததை அறிந்த பீஷ்மன் இந்தப் பிறவியிலும் பெண் மோகத்தில் சிக்கிக் கொண்டால் அடுத்து மீண்டும் பிறவியெடுக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தான். கங்கை புத்திரனான பீஷ்மன் பெண்ணைப் பற்றிய ஆசைகளை தனது மனத்திலிருந்து அடியோடு தூக்கியெறிந்து சுயக்கொலை செய்து கொண்டான்.

பீஷ்மன் ராஜ்ஜியத்தைத் துறந்தது பெரிதல்ல. லெளகீகமே வேண்டாமென்று முடிவு எடுத்தவனுக்கு அரியாசனம் எதற்கு. பாலின ஈர்ப்பிலிருந்து விடுபட்டவனுக்கு எதிரேயுள்ள ஏதோவொன்று விலகிக் கொள்கிறது. கடவுளின் தரிசனம் அவனுக்கு காணக் கிடைக்கிறது. கடவுள் நம் வழியே செயல்பட வேண்டுமென்றால் நம்மிடமுள்ள அகந்தையை அவர் வதம் செய்ய நாம் வாய்ப்பளிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல.

மனிதனின் அகந்தையை திருப்தி செய்துகொள்ள ஏற்படுத்தப்பட்டது தான் இவ்வுலகம். மனம் தான் இந்த மாயாலோகத்தை உண்டு பண்ணுகிறது. உலகில் நடந்த சமர்களுக்கெல்லாம் அகந்தையே காரணம். சில மனிதர்களின் நான் என்ற அகந்தையை கடவுள் கொலை செய்கிறார். அந்த மனிதனின் வழியே இறை சக்தி வெளிப்பட ஆரம்பிக்கிறது. சலனமற்ற குளத்தில் சூரியன் பிரதிபலிப்பதைப் போல்.

தர்ம சக்கரம் சுழல ஆரம்பிக்கிறது. உத்தமர்கள் சோதனைக்குள்ளாக்கப்படுவது இந்த உலகில் வழி வழியாக நடந்து வந்துள்ளது. தனது சகோதரனுக்காக அம்பையைக் கவர்ந்து வருவதும். வெல்லப்பட்ட அம்பையை ஏற்க சாளுவ மன்னன் மறுத்துவிட, தன்னை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டும் அம்பையை கருணையின்றி புறக்கணிப்பதும். நிராகரிப்பின் வலி பொறுக்க முடியாமல் அம்பை தற்கொலை செய்து கொள்வதும். பீஷ்மனை பலிதீர்க்க அவள் சிகண்டி உடலில் புகுந்து கொள்வதும். தகுந்த சந்தர்ப்பத்துக்காக அவள் காத்திருப்பதும். பீஷ்மனின் முடிவை விதி அம்பாவின் மூலமாக தீர்மானித்திருக்கிறது. வாழ்வதற்கு ஆசைப்படுபவன் பேடிகளின் மீது அம்பு எய்ய மாட்டேன் என ஒரு நாளும் சொல்ல மாட்டான்.

திரெளபதி உடைகளை துச்சாதனன் களையும் போது சத்தியத்தின் குரல் அசரீரியாக பீஷ்மனுக்கு மட்டும் கேட்டது. பெண்களை அவர்கள் விரும்பினாலன்றி வேறு யாராலும் அவர்களை நிர்வாணப்படுத்த முடியாதென்று. சபையில் நடந்தது என்னவென்று அவர் கண்ணுக்குப் புலப்படவில்லை. வெறும் காரிருளைத் தான் அவர் தன்னெதிரே கண்டார். இருக்கையிலிருந்து எழ முடியாமலும், தொண்டையிலிருந்து குரல் எழுப்ப முடியாமலும் அவர் கல்லாகிவிட்டார். சற்று நேரத்திற்கு அவர் சிலையாகிவிட்டார்.

தந்தையிடமிருந்து நீ விரும்பும் போது தான் உன் மரணம் நிகழும் என வரம் வாங்கிய பீஷ்மன். குருட்ஷேத்திர போரில் சிகண்டியால் வீழ்த்தப்பட்டான். சிகண்டி மீது அம்பு எய்திருக்கலாம் அவன் பின்பற்றி வந்த தர்மம் அதை தடுத்தது. பெண் அம்சம் கொண்டவர்களை அதுவும் போர்க்களத்தில் கூட நிராகரிக்கும் அளவுக்கு பீஷ்மனுக்கு என்ன நேர்ந்தது. சத்தியம் எந்த ரூபத்தில் வந்து யாரைச் சாகடிக்கும் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். அம்புப்படுக்கையில் பீஷ்மன் கிடந்த போது பீஷ்மனுக்கு மரணத்தாகம் எடுத்தது. அதைத் தணிக்கக் அவனது தாய் கங்கை வரவில்லை.

1 comment:


  1. திரெளபதி உடைகளை துச்சாதனன் களையும் போது
    பீஷ்மர் ஏன் அதை தடுக்காமல் இருந்தார் என்பதற்கான
    விளக்கம் அருமை

    ReplyDelete