Wednesday, May 2, 2018

இன்னொரு வாசல்


ஆசைப்பட்டது கிடைத்தவுடன் நாம் இதைத்தான் தேடினோமா என்று எண்ணுகிறோம். ஒவ்வொருவர் மனதிலும் ஒரு நெருப்பு எரிந்து கொண்டுதானுள்ளது. அந்த நெருப்புக்கு எண்ணெய்விட்டு வளர்ப்பது நாமே. உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேல் செல்வத்தைத் தேடி ஓடுகிறார்கள். மீதி பேர் பெண்களையெல்லாம் தன் ஆசைநாயகி ஆக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். நல்லவர் ஒருவர் உள்ளார்  எனில் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை போலத்தான் உண்மையை தேடும் ஒருசிலருக்காகத்தான் இந்த உலகம் இன்றுவரை நிலைத்துள்ளது.

தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே நோக்கத்துடன் அதர்மத்துக்கு தோள் கொடுத்தால் வம்சத்துக்கே தீராப்பலி வந்துசேரும். சித்தார்த்தன் மனிதன்படும் துயரங்களுக்கான காரணத்தைத் தேடி ஓடினான். அவனை அரண்மனையிலிருந்து வெளியேற்றிய சக்தியே அவனுக்கு ஞானத்தைப் பரிசளித்தது. உண்மையின் பாதையை தேர்ந்தெடுத்ததால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார் இயேசு. தச்சன் மகனின் பேச்சைக் கேட்க கூட்டம் கூடியது, ஏனெனில் பிரசங்கத்தில் உண்மை இருந்தது. கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டவர்கள் விட்டில் பூச்சியைப் போல் நெருப்புக்கு இரையாவார்கள். உண்மையின் ஒளிக்கு விளம்பரங்கள் தேவையிருக்காது.

பேரழகிகளையெல்லாம் ஒருநாள் மரணம் விழுங்கப்போகிறது. அவர்களை நினைத்து ஏங்கிக் கிடப்பதால் பயனொன்றுமில்லை. தோலில் சுருக்கத்தையும், கேசத்தில் நரையைும் பரிசாகக் கொடுத்து காலம் எப்படி அவளை சின்னாபின்னப்படுத்தியுள்ளது என்று பார். நீ மட்டுமே குழம்புவதாக நினைக்காதே, போர்க்களத்தில் அர்ஜூனன் குழம்பவில்லையா? எதையும் உன்னை ஆதிக்கம் செலுத்துவதற்கு அனுமதிக்காதே. இடம் கொடுத்தால் ஆயுள் முழுவதற்கும் அதற்கு அடிமையாக இருக்க வேண்டியிருக்கும். இயேசுவின் போதனைகளில் கூட நீ முரண்பாடுகளைக் காணலாம். அதனைக் காரணமாக வைத்து அவரின் உண்மைத் தன்மையை சந்தேகிக்காதே.

ஒரு செயலைச் செய்வதற்குரிய விருப்பார்வம் கடவுளிடமிருந்து வருகிறது. எந்த சக்தி நம்மை பிறக்க வைத்ததோ அந்த சக்தி நம்மை கருவியாக உபயோகப்படுத்தி தன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்கிறது. கடவுளின் கைகளில் பொம்மைகளைவிட நாம் மேலானவர்களல்ல. எல்லைக்குட்பட்ட மனம் தனது நம்பிக்கைகள் பொய்க்கும்போது பரிதவிக்கிறது. இப்போது அந்த மனிதனுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்வது கடவுளின் விருப்பத்தைப் பொறுத்தது. ஆலயத்தில் திரைச்சீலையை விலக்கினால் தெய்வத்தின் தரிசனம் கிடைப்பது போல், மனத்திற்கும் ஞானத்திற்கும் இடையேயான திரையை நீ விலக்க வேண்டும். எல்லாம் உன்னுள்ளே உள்ளது. வெளியில் கிடைக்கும் தோல்வி போன்ற அழுத்தங்களே உன் மனம் உண்முகப்பட காரணமாகிறது.

இழந்துவிட்ட சுவர்க்கத்தை நினைத்து மனிதன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. புறவுலகை சகல வசதிகளோடும் அமைத்துக் கொண்ட மனிதனுக்கு கடவுள் தேவைப்படாத பொருளாகிவிட்டார். இத்தனை வசதிகள் சுவர்க்கத்தில் இல்லாவிட்டாலும் அங்கு நிம்மதி கிடைக்கும். இதை மனிதன் உணர்வதில்லை. கடவுளைக் கண்டவர்கள் சராசரி வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்வார்கள். பைத்தியமாக, பிச்சைக்காரர்களாகத் தான் அவர்கள் இவ்வுலகில் அலைந்து கொண்டிருப்பார்கள். மதம் ஒரு வாசல் அதற்காக இந்த வாசல் வழியாக மட்டும் சென்றால் தான் கடவுள் வெளிப்படுவார் என்பதில்லை. இறப்புக்கு பிறகும் மதச்சடங்குள் பின்பற்றப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த நூற்றாண்டில் மதகுருமார்கள் சட்டத்திற்கு முன் நிற்கவைக்கப்படுகிறார்கள். நாத்திகர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கப்டுகிறார்கள். கட்டற்ற சுதந்திரம் எனும் போதும் அதற்கு நாமே ஒரு எல்லை வகுத்துக் கொள்வது நல்லது. பக்குவமற்ற ஆட்களால் கருத்து மோதல் கொலையில் போய் முடிகிறது. ஒரு மனிதன் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க வாய்ப்பே இல்லை. ஆன்மீக வாழ்வில் முன்னேற்றமே இல்லையென அலுத்துக் கொள்ளக் கூடாது. ஆன்மீகப் பாதையில் கடவுளை அடைவதற்கு இன்னும் சில அடிகளே இருக்கலாம். புதையல் கிடைக்கவில்லை என அலுத்துக் கொண்டு மேற்கொண்டு தோண்டுவதை நிறுத்தக்கூடாது. பொறுமையோடு நடை போட்டோமானால் வாழ்வின் நோக்கம் இந்த ஜென்மத்திலேயே நிறைவேறும்.

வாழ்க்கையைத் துறந்து பக்கிரியாக அலைபவர்களிடம் போய், உலகியல் ரீதியிலான வெற்றிக்காண வழிமுறைகள கேட்கிறார்கள். நாளை நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையால் தான் படுக்கையில் வீழ்கிறார்கள். வருத்தப்படுபவர்களுக்கு உதவாமல் அது அவர்களின் கர்மபலன் என்று வேடிக்கைப் பார்த்தால் கடவுளின் கோபத்திற்கு ஆளாவோம். கல்லை பொன்னாக்கினால் போதும் மனிதர்கள் யாரையும் கடவுளாக ஒத்துக்கொள்வார்கள். பணத்தை தேடியே ஓடிக்கொண்டிருப்பது காற்றினைச் சிறைப்படுத்துவதற்கு ஒப்பாகும்.

‘நான் இருக்கிறேன். நான் மட்டுமே இருக்கிறேன். ஆணும், பெண்ணுமாக நானே இவ்வுலகில் நிறைந்திருக்கிறேன். இந்த அலைகள் எழுவதற்கு நானே காரணம். கிழக்கு சிவப்பதற்கு நானே காரணம். பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே நீ உலாவிக் கொண்டிருக்கிறாய், நான் பிறக்கவுமில்லை, இறக்கவுமில்லை என்றும் நிலையாய் இருக்கிறேன். அன்பை வெளிப்படுத்த ஒரு உதடையும், அரிவாளை ஓங்க ஒரு கையையும் நானே தேர்ந்தெடுக்கிறேன். ஓர் இரவுக்காகத் தான் மனிதர்களைப் படைத்து ஆட்டுவித்து வருகிறேன். இதோ வலைவிரிக்கிறேன் மீன்களுக்காக அல்ல மனிதர்களுக்காக.

நான் பைத்தியக்காரன் தான் அப்படியென்றால், நான் படைத்த உலகம் பைத்தியக்கார விடுதி தானே. மேய்ப்பன் எப்பொழுதும் தப்பிய ஆட்டைத்தான் தேடிக் கொண்டிருப்பான். ஆட்டுமந்தையில் எந்த ஆடு எப்போது உணவாகும் என்று ஆட்டுக்குத் தெரியாது. ஆட்டிடம் சம்மதம் கேட்டா பலியிடுகிறார்கள். இது மனிதனுக்கும் பொருந்தும். மரணநிழல் மனிதனை துரத்திக் கொண்டேயுள்ளது. அவளை நான் நெருங்கிக் கொண்டே இருக்கிறேன்--’. கடவுள் இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கிறார். ஆதாம் ஏவாளை கடவுளிடமிருந்து காப்பாற்றி கொண்டு சென்றுவிட்டான். கடவுள் ஆதாமை என்ன செய்தார் என்று தெரியாது. ஆனால் ஏவாள் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருந்து கொண்டு ஆதாமை தேடிக் கொண்டிருக்கிறாள். தாயானாலும், தாரமானாலும் சிவகாமியின் சிந்தனை சிவனைப்பற்றியதே.

No comments:

Post a Comment